மீனாட்சி பாலகணேஷ்.

நிழலாய் நடந்தாள் அவனோடு!

 

“ஓ! சாவித்ரி, நில்! திரும்பிச் செல். என்னைத் தொடராதே! திரும்பிச் சென்று உனது அன்புக் கணவன் சத்யவானின் ஈமக்கடன்களைச் செய்!” என்றான் யமதர்ம ராஜன்.

சாவித்ரி சொன்னாள்: “என் கணவரை என்றென்றும் நிழலாகப் பின் தொடர்வது எனது கடமைகளில் ஒன்றாகும். என் கணவர் மீது நான் கொண்ட அன்பினால், அவர் நன்மைக்காக நான் செய்த நோன்புகளால், யாராலும், ஏன் உன்னாலுமே நான் அவரை, அவர் உயிரைத் தொடர்வதைத் தடுக்க முடியாது யமராஜனே! ஆகவே இப்போதும் கூட, நீர் எங்கு அவர் உயிரைக் கொண்டு செல்கிறீரோ அங்கும் நான் நிழலாய்த் தொடர்ந்து வருவேன்.”

அப்பப்பா! என்ன உறுதியுடன் வெளிப்படும் திருத்தமான வார்த்தைகள். “நான் அவருடைய நிழல். அவரைத்தானே பின் தொடர வேண்டும்? அது என் கடமையல்லவோ?” கேட்ட யமன் திகைத்து நின்றான் சில கணங்களுக்கு!

சிறிது பின்னால் நோக்கலாமா?

*******************************************

சாவித்ரி: மத்ர நாட்டு மன்னன் அசுவபதியின் ஒரே அருமை மகள். அழகின் சிகரமாகவும், அறிவின் சுடராகவும் விளங்கிய அவளை மணம் புரிந்து கொள்ள இளவரசர்கள் (தாழ்வு மனப்பான்மையால்) தயங்கியமையால், மனம் வருந்திய அவள் தந்தை அசுவபதி, “சாவித்ரி! நீயே சென்று உன் மனதுக்கு உகந்த மணாளனைத் தேர்ந்தெடுத்து வருவாயாக,” என்றார். பல புனிதமான ஆசிரமங்களுக்கும் பல தேசங்களுக்கும் படைகளுடன் செல்கிறாள் அவள். ஆச்சரியம்! தன் மனதைக் கவரக்கூடிய விதத்தில் ஒருவரையுமே சந்திக்கவில்லை. ஒரு வனத்தில், ஆசிரமத்தில் தன் மனத்துக்கிசைந்தவனைக் காண்கிறாள். அவன்…..

சத்யவான்: சத்யசீலனான உயர்ந்த குணங்கள் படைத்த ஒரு இளவரசன்; அறிவில் உயர்ந்தவன்; உண்மையாளன், உதாரகுணம் படைத்தவன்; எளிமையானவன். மூத்தோர்களிடம் பெரும் மரியாதை கொண்டவன். அழகன்; வீரன்; கொடையாளன். நாட்டை இழந்து கண்களையும் இழந்து விட்ட தந்தை தியுமத்சேனனுடனும் தாயுடனும் கானகத்தில் ஆசிரமத்தில் வசித்து வந்தான். கண்ணிழந்த தந்தையைப் பரிவோடு, கைபிடித்து அழைத்து வந்து, ஆசிரமத்துள் கொண்டு அமர்த்தி, அவருக்கு உணவாகப் பழங்களையும், குடிக்க நீரும் கொடுத்து ஆதரவாக இருப்பதைப் பார்க்கிறாள் சாவித்ரி.

சாவித்ரியின் மனம் அவனுடைய உயர் குணங்களால் கவரப்பட்டு அவன்பால் காதலில் ஆழ்ந்து விடுகிறது.

தந்தை அசுவபதியிடம் சென்று தனது முடிவைத் தெரிவிக்கிறாள்.

ஆனால் அவனிடம் சாவித்ரியே- ஏன் அவனே அறியாத ஒரே ஒரு பெருங்குறை உண்டு- அவனுக்கு நீண்ட ஆயுள் கிடையாது. இன்னும் ஒரு ஆண்டின் முடிவில் இறப்பான்.

அவனது குறை ஆயுளைப் பற்றி நாரதர் மூலமாக அசுவபதி அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிறான். “மகளே! இத்தனை நாள் உனக்குப் பொருத்தமானவனைத் தேடியலைந்தது இதற்குத் தானா? நீண் ட ஆயுள் கொண்ட வேறு ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொள் அம்மா! அதில் ஒன்றும் தப்பில்லை!” என்கிறான்.

சாவித்ரி திட சிந்தையுடன் கூறுகிறாள்: “மரணம் நேர்வது ஒரு முறையே! ஒரு பெண்ணை அவளுடைய தகப்பனார் கன்யாதானம் செய்து கொடுப்பதும் ஒரு முறை தான். என் மனதில் நான் ஒருவரைக் கணவராக வரித்ததும் ஒரு முறையே! ஆகவே வேறு ஒருவரை எண்ணிப் பார்க்க இயலாது,” என்கிறாள்.

கனத்த இதயத்துடன் அசுவபதி கோலாகலமாகத் தன் மகளை சத்யவானுக்குத் திருமணம் செய்வித்துப் பின் கானகத்திற்கு அவனுடன் வாழ அனுப்பி வைக்கிறான்.

திருமணத்தின் பின்: கானகத்து ஆசிரமத்தில் சத்யவானுடன் அவன் தாய் தந்தையருக்குப் பணி செய்து வாழ்கிறாள். தனது உடலை வருத்திப் பல நோன்புகளை அவனுடைய நீண்ட ஆயுளுக்காகக் கடைப்பிடிக்கிறாள். நாட்கள் விரைகின்றன.

ஒரு வருடம் முடியப் போகிறது. கடைசி நாள்! அன்றைய தினம் தானும் சத்யவானுடன் அவனை நிழலாகத் தொடர்ந்து காட்டுக்குச் செல்கிறாள். உலர்ந்த மரக்கிளைகளை வெட்டி விறகு சேகரிக்கும் கணவனைப் பார்த்தபடி எப்போது என்ன நேரும், அதனை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்ற தவிப்புடன் அமர்ந்திருக்கிறாள் சாவித்ரி.

“சாவித்ரி! எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. தலையை வலிக்கிறது. சிறிது நேரம் இளைப்பாறுகிறேன்,” எனக் கோடாலியைக் கீழே போட்டுவிட்டுத் தன்னருகே வந்த சத்யவானைத் தன் மடிமீடி தலைவைத்து ஓய்வெடுக்கச் செய்கிறாள்.

savithiriதிடீரென எங்கும் இருள் படர்கிறது. அந்த இருளினூடே சாவித்ரி, புகை போன்ற ஒரு வடிவைக் காண்கிறாள். அவள் முன்பு நிற்பது யம தர்மராஜன்; மரணத்தின் கடவுள்! “உன் கணவனின் உயிரைக் கொண்டு செல்ல வந்துள்ளேன்,” என அறிவிக்கிறான். சாவித்ரியின் மடியில் கிடந்த சத்யவானின் உடல் தொய்கின்றது; பாசக் கயிற்றில் சத்யவானின் உயிரைப் பிணைத்து எடுத்துச் செல்கிறான் யமதர்மராஜன். கணவனின் உடலை மிருகங்களும் பறவைகளும் தீண்டி சேதப்படுத்தாத வகையில், இலை, தழை, மரக்கிளைகளால் மூடி வைத்து பத்திரப்படுத்தி விட்டு யமன் பின்னால் ஓடோடிச் சென்று சாவித்ரி அவனைப் பின் தொடர்கிறாள்.

“சாவித்ரி! நில்! உனக்கு இன்னும் காலம் வரவில்லை. என்னைத் தொடராதே! திரும்பிச் செல்,” என்கிறான் யமதர்ம ராஜன்.

இவை தான் நாம் மேலே கண்ட நிகழ்ச்சியும் உரையாடலும்!

பலவாறு மறுத்துக் கூறிய அவளுடைய சொற்களைக் கேட்ட யமன், “உன் உறுதியைக் கண்டு நான் வியக்கிறேன். உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எந்த வரத்தையாவது கேள்!” என, சாவித்ரி தன் மாமனாரான அரசன் தியுமத்சேனன் இழந்த கண்பார்வையைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்கிறாள். வரத்தை அருளினான் யம தர்ம ராஜன்.

திரும்பவும் தன்னைப் பின் தொடர்ந்த சாவித்ரியை திரும்பிப் போகுமாறு யமன் கூற, அவளோ, “என் கணவர் இருக்குமிடமே எனது இடமும் ஆகும். எனக்குக் களைப்பில்லை,” என்கிறாள். மனமிரங்கிய யமன், “உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எதையாவது வரமாகக் கேள்,” எனக் கூறவே, இம்முறை மாமனாராகிய தியுமத்சேனன் இழந்த நாட்டைத் திரும்ப அடையட்டும் எனக் கேட்கிறாள் அவள்.

மறுபடியும் தன்னைத் தொடரும் இளம் பெண்ணான அவள் கூறும் ஆன்ம சிந்தனை நிறைந்த சொற்களைக் கேட்டு மகிழ்ந்த எமனிடம், மூன்றாவது வரமாகத் தன் தந்தை அசுவபதியின் குலம் தழைக்க நூறு மகன்களையும், நான்காவது வரமாகத் தனக்கும் நூறு புத்திரர்கள் பிறக்கும்படியும் வரங்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறாள் சாவித்ரி.

அவ்வரங்களைக் கொடுத்துவிட்டு விரைகின்றான் யமதர்மன். சத்யவானின் உயிரைப் பாசக்கயிற்றால் பற்றிக் கொண்டு செல்லும் தன்னை இன்னும் விடாது பின் தொடரும் சாவித்ரியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவன் சிறு பெண்ணான அவளிடம் பரிதாபம் கொள்கிறான்.

அவளைத் திரும்பிச் செல்லக் கூறுகிறான்; அதை மறுத்து அவள் பேசும் அறநெறி செறிந்த சொற்களைக் கேட்ட யமன், “காதல் கணவனிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டுள்ளவளே, உன் கணவன் உயிரைத் தவிர ஏதேனும் ஒப்பற்ற ஒரு வரத்தைக் கடைசியாகக் கேள்,” என, அவள், “நீர் ஏற்கெனவே கொடுத்த வரம்- எனக்கு நூறு மகன்கள் பிறப்பர் எனும் வரம்- உண்மையாக வேண்டுமெனில், எனக்குக் கணவனான சத்யவானின்றி அது சாத்தியப்படாது!

“தர்ம ராஜனான உமது சொற்கள் பொய்க்கக் கூடாது! எனது கணவரில்லாமல் உலகில் நான் எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்க விரும்பவில்லை. சுவர்க்கமும் எனக்கு வேண்டாம். கணவரில்லாவிடின் நான் இறந்தவள் போல்பவளே! எனக்கும் சத்யவானுக்கும் உமது வாக்குப்படி புத்திரர்கள் பிறக்க அவர் உயிரை நீர் திருப்பித் தர வேண்டும்!” என்றாள்!

பிரமித்து நின்றான் யமதர்ம ராஜன். ஆஹா! இந்த புத்திசாலிப்பெண் அவனைத் தன் வாக்கு வன்மையால் மடக்கிக் காரியத்தைச் சாதித்துக் கொண்டு விட்டாளே! யமனுக்குக் கோபம் வரவில்லை! மாறாக அளவு கடந்த மரியாதையும், பாசமும் இந்த அற்புதமான பெண் சாவித்ரி பால் ஏற்பட்டது. இப்படியும் ஒருத்தியா? கணவன் மேல் அவள் கொண்ட மாறாத பெருங்காதல் ஒன்றே, அவளுக்கு மிக அதிகமான சக்தியை, யமதர்ம ராஜனுடன் வாதிட்டு வெல்லும் பெரும் பலத்தை, வாக்கு சாதுரியத்தை அளித்திருக்கிறது.

“சாவித்ரி! நீ என்னை வென்று விட்டாய். கணவன் மீது நீ கொண்டுள்ள உறுதியான அன்பும் காதலும் தான் இதனை நடத்தி வைத்தது,” என்றான் யமன்.

பாசக்கயிற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட சத்யவானின் உயிர் உடலைச் சென்றடைகின்றது. கணவனின் உடலை ஒளித்து வைத்த இடத்திற்கு ஓடோடிச் செல்கிறாள் சாவித்ரி. உறக்கத்திலிருந்து எழுந்தவன் போல் எழுகிறான் சத்யவான். நடந்தது ஒன்றினையும் அவன் அறிந்தானில்லை.

“சாவித்ரி! நான் மிகவும் களைப்படைந்திருக்கிறேன்,” என்பவனைக் காதலும் கருணையும் பொங்க நோக்குகிறாள் அவள். உள்ளம் உவகையில் விம்முகின்றது.

அவன் கரத்தினை ஆதுரத்துடன் பற்றியபடி, பெண்மையின் மென்மையும், திண்மையும் விகசிக்க, ஆசிரமத்தை நோக்கிக் காதலின் பொன்வீதியில், அந்தப் புனிதப் பெரும் பாட்டையில் வெற்றிநடை பயிலுகிறாள் சாவித்ரி என்னும் பெண்கள் குலத் திலகம்!

***********************************************

முதல் வரத்திலேயே சாதுரியமாக புத்திரர்களைக் கேட்டுக் கணவனின் உயிரை அவள் ஏன் பெறவில்லை?

எதற்காக மற்ற எல்லா வரங்களையும் கேட்டாள்?

இவை நம் உள்ளத்தில் எழும் வினாக்கள்.

தன் விருப்பப்படித் தானே தேர்ந்தெடுத்த காதல் கணவனுடன் இன்ப வாழ்வு வாழ வேண்டுமாயின், அவனுடைய தாயும் தந்தையும் பழையபடி இன்புற்றிருக்க வேண்டும். அதற்கு அரசனான தியுமத்சேனன் அவர் இழந்த கண்பார்வையை மீண்டும் பெற வேண்டும்; நாட்டையும் திரும்பப் பெற வேண்டும். சுற்றமும் சொந்தங்களும் வாழ்த்த வாழும் இன்பமான காதல் வாழ்வு எத்தனை இனிமையானது என உணர்ந்தவள் சாவித்ரி.

அடுத்து, மனதிற்குகந்த மணாளனைத் தேடித் தேர்ந்தெடுக்க அனுமதி தந்தவர் தந்தை அசுவபதி. அவள் தேர்ந்தெடுத்த கணவனோ ஓராண்டில் இறந்து விடுவான் என அறிந்தும் அவள் விருப்பப்படி சத்யவானுக்கே அவளை மணம் செய்து கொடுத்தவர். அவருக்கோ தமது குலம் தழைக்க மகன் இல்லாத நிலை. ஆகவே தனது அருமைத் தந்தைக்காக பிள்ளை வரம் கேட்க சாவித்ரி யமனின் அடுத்த வரத்தைப் பயன் படுத்துகிறாள்.

இப்போது புகுந்த வீடும் பிறந்த வீடும் நல்வாழ்வு பெற வழி செய்தாகி விட்டது. இனி இந்தச் சூழ்நிலையில் காதல் தலைவனுடன் வாழ்வது தான் காதலின் வெற்றி என்பது அவளுடைய எண்ணம். ஆகவே யமராஜன் தன் கணவன் உயிரைத் தந்தே ஆகுமாறு செய்யும் ஒரு வரத்தினை – சாதுரியமான பிள்ளை வரமாக- அடுத்துக் கேட்கிறாள். அதுவும் கிடைத்து விடுகிறது. பின்பு தான் அந்த வரத்தினுள் சாமர்த்தியமாகப் புகுத்திய தன் தலைவனின் உயிரின் இன்றியமையாத தேவையை யமராஜனுக்கு விளக்குகிறாள். அதைக் கொடுத்துத் தன் வாக்கைக் காப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை என்ற நிலைமையை உருவாக்கி விடுகிறாள் சாவித்ரி எனும் திட மதி படைத்த பெண்.

காதலின் வலிமை எத்தனை மன உறுதியையும் துணிவையும் ஒருவருக்கு அளித்து விடுகின்றது என்பதை எண்ணியெண்ணி வியக்காமல் இருக்க இயலவில்லை அல்லவா?

***********************************************

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காதலின் பொன்வீதியில் – 6

  1. நாம் பலமுறை கேள்விப்பட்ட கதையைத் திரைக்கதை பாணியில் விவரித்து, சாவித்திரி மூன்று வரங்களைப் பெற்றதின் காரணங்களையும் விளக்கி உள்ளீர்கள்.  இக்கதை யாவரும் படித்துப் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *