-செண்பக ஜெகதீசன்

உளரென்னும் மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர். (திருக்குறள்-406: கல்லாமை)

புதுக் கவிதையில்…

கல்லாதவர்
உலவும் மனிதர் என்ற
ஒன்றைத் தவிர
ஒரு பயனும் இல்லாதவர்
ஒன்றும் விளையாத
உவர் நிலத்திற்கு ஒப்பானவரே!

குறும்பாவில்…

இயங்கும் மனிதர் என்பதைத்தவிர
கல்லாதவர் பயனற்றவர்,
களர் நிலம் போல!

மரபுக் கவிதையில்…

எந்தப் பயிரைப் போட்டாலும்
   எதுவும் வராதே களர்நிலத்தில்,
இந்தப் புவியில் மாந்தரிலே
   இருப்புக் கணக்கில் சேர்ந்ததல்லால்
எந்தப் பயனும் இல்லாரே
   ஏதும் கல்வி கல்லாரே,
மந்தப் புத்தி யுடையாரிவர்
   மண்ணில் பயனிலாக் களர்நிலமே!

 லிமரைக்கூ…

மனிதனே கற்றுநீ கல்விப்பயிர் வளர்,
கல்லாதவர் காட்சிக்கே மனிதன்,
நிசத்திலவர் பயனிலா நிலமாம் களர்!

கிராமிய பாணியில்…

மண்ணுமண்ணு களர்மண்ணு
மலட்டுநெலமாம் களர்மண்ணு,
ஒண்ணுக்குமொதவாத ஒவர்மண்ணு
ஒண்ணும்வெளயாத களிமண்ணு…

ஒலகத்துல
ஒண்ணும்படிக்காதவன் களிமண்ணு
ஒண்ணுக்குமொதவாத ஒவர்மண்ணு,
கணக்கில அவனும் மனுசந்தான்
காரியம்பாத்தா ஒண்ணுமில்ல
யாருக்கும் எந்தப் பயனில்ல…

மண்ணுமண்ணு களர்மண்ணு
மலட்டுநெலமாம் களர்மண்ணு!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *