கதையல்ல நிஜம் …

0

–மாதவன் ஸ்ரீரங்கம்.

டாக்டர் அவனை விசித்திரமாகப் பார்த்தார்.

“என்ன பண்றீங்க?”

“பேங்க்ல அக்கவுண்டன்ட்டா இருக்கேன் டாக்டர்”

“எப்பயிருந்து இது மாதிரி தோணுது உங்களுக்கு?”

“தோணலை டாக்டர். நடக்குது. சின்னச்சின்னதா நெறைய சம்பவங்கள். என்னோட வேலையை வச்சு ஒரு கதை எழுதினேன். அதாவது என் பேங்குல திடீர்னு ஒருநாள் ராத்திரி தீவிபத்து நடந்து எல்லா டாக்குமெண்ட்ஸும் எரிஞ்சுபோயிடற மாதிரி எழுதுனேன். நாலாவதுநாள் அதேமாதிரி தீவிபத்து நடந்தது. அப்பறம் இன்னொரு கதை எழுதினேன் டாக்டர். அதுல ஹீரோ பைக்ல வேலைக்கி போறப்ப பைக் ஆக்ஸிடன்ட் ஆகி வலதுகால்ல பிராக்சர் ஆகுற மாதிரி எழுதிருந்தேன். நாலாவதுநாள் நா கதைல எழுதியிருந்த அதே இடத்துல, அதே முறையில ஆக்ஸிடன்ட் ஆகி என் வலதுகால் பிராக்சர் ஆயிடுச்சி”

டாக்டர் அமைதியாயிருந்தார். இதுபோல அவர் அதிகம் கேள்விப்பட்டதில்லை. இதை ஹாலூஸினேஷன் வகையிலும் சேர்க்கமுடியாது என்று தோன்றியது அவருக்கு. எங்காவது நாம் கதையாக எழுதுவதெல்லாம் யதார்த்தத்தில் நடக்குமா? நடக்கிறது என்கிறான் அவன்.

“இல்ல. மொத நீங்க எப்பயிருந்து இதை கவனிக்க ஆரம்பிச்சீங்கன்னு சொல்லுங்க”

“நாலு வருஷம் முந்தி நா ஒரு சிறுகதை எழுதுனேன் டாக்டர். ஒரு சின்னப்பொண்ணு மூடாத சாக்கடைக்குள்ள விழுந்து செத்துபோறதுதான் கரு. அதை எழுதி நாலாவது நாள் பக்கத்து வீட்டுப்பொண்ணு அதேமாதிரி செத்துடுச்சி”

“இது நம்ம நாட்டோட சாபக்கேடுங்க. எத்தனை உசிருங்க. ஆனா இன்னும் அதே தப்பைத்தான் தொடர்ந்துட்டிருக்காங்க. இது பொதுவானதுதாங்க”

“நானும் அப்டித்தான் நெனச்சிருந்தேன் டாக்டர். பட் அந்த புள்ளைய பார்க்க ஆஸ்பத்திரி போயிருந்தப்பதான் கவனிச்சேன். என் கதைல என்னவிதமா அந்த பொண்ணை வர்ணிச்சனோ அதேமாதிரி இருந்தது எப்படி டாக்டர்”?

டாக்டர் யோசித்தார். “இது ஒன்னும் பெரிசில்ல… சிவ…”

“சிவான்னே கூப்பிடலாம் சார்”

“ஆங்.. சிவா. உங்க பக்கத்துவீடுன்னு சொல்றீங்க. அடிக்கடி பார்த்ததுல அந்த பொண்ணு உருவம் உங்களுக்குள்ள ஆழ்மனசுல பதிஞ்சிருக்கும். அதைத்தான் உங்க கதைல வர்ணிச்சிருக்க சான்ஸ் இருக்கு”

“இதை நானும் யோசிச்சேன் சார். பட் செத்தப்ப அந்த பொண்ணு போட்ருந்த டிரஸ்கூட கதைல வர்ணிச்ச அதே டிரஸ்தான் சார். இதுக்கு என்ன விளக்கம் சொல்வீங்க”?

டாக்டருக்கும் உண்மையாகவே சற்று குழப்பமாகத்தான் இருந்தது. இது சாத்தியமில்லை. ஆனால் அதை இவனுக்கு புரியவைக்கவேண்டும்.

“சரி அதை விடுங்க. வேற சொல்லுங்க”

“அடுத்தகதை ஒரு நாலுமாசம் கழிச்சு எழுதினேங்க. ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்றாங்க. வீட்ல ஒத்துக்கல. வீட்டைவிட்டு ஓடிப்போயிடறாங்க. ஒரு ஃபிரண்ட்டை தேடி போறாங்க. போன எடத்துல ஃபிரண்ட் ஊர்ல இல்ல. போன்ல தன்னோட ஃபிரண்ட் அட்ரஸ் குடுக்குறான். அவங்களும் அங்க போறாங்க. அவனும் கொஞ்சம் தயக்கத்தோட தங்க வைக்கிறான். மறுநாள் காலைல ரெண்டுபேரும் வீட்ல வெஷம் சாப்பிட்டு செத்துக்கெடக்காங்க”

“சோ.. சேட்.. அப்பறம்?”

“அவ்ளோதாங்க கதை”

“அப்டியா. சோ சிம்பிள். இதுல என்ன பிரச்சனை?”

“இல்ல டாக்டர். கதைல அந்த ஃபிரண்ட் தர அட்ரஸா நா எழுதிருந்தது என்னோட ஒரிஜினல் அட்ரஸ் சார்”

டாக்டருக்கு சிரிப்பு வந்துவிட்டது. “சோ வாட்?”

“சோ வாட்டா? சார் கதை எழுதுன நாலாவது நாள் உண்மையிலியே ஒரு பொண்ணும் பையனும் என் வீட்டுக்கு வந்துட்டாங்க சார். என் ஃபிரண்ட் போன் பண்ணி தங்க வச்சிக்க சொன்னான். நானும் மடத்தனமா ஒத்துகிட்டேன். காலைல அவங்க ரெண்டுபேரும் என்வீட்ல செத்துகெடக்காங்க”

“ஓ மைகாட் !! அப்பறம் என்னாச்சு?”

“அப்பறமென்னங்க. போலீசு கோர்ட்டுன்னு அலையா அலைஞ்சதுதான் மிச்சம். அப்பயிருந்துதான் எனக்கு டவுட்டு வர ஆரம்பிச்சுடுச்சி”

டாக்டர் அவனையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்.

“சரி இதை டெஸ்ட் பண்ணிப்பார்த்துடலாம் அப்டீன்னு யோசிச்சிட்டிருந்தப்பதான் அடுத்த கதை எழுதுனேன். ஆனா வேற யாரையாச்சும் வச்சி எழுதினா உண்மையா பொய்யான்னு எப்டி தெரிஞ்சுக்கிறது? அதான் என்னையே ஹீரோவா வச்சு ஒரு கதை எழுதினேன்”

“இன்ட்ரஸ்டிங் சிவா. பட் அது பெரிய ரிஸ்க் இல்லையா? இன்கேஸ் அது உண்மையாவே நடக்கும்பட்சத்தில ..?”

“ஒரு வகைல அது ரிஸ்க்தான் டாக்டர். ஏன்னா நா எழுதுனது காதல் கதை. மர்டர் கதைக்கெல்லாம் நம்ம பாடி தாங்குமா டாக்டர். அதான் உசாரா காதல் கதை. ஆனா மர்டரே பரவாயில்லைன்ற அளவுக்கு டெரர் பண்ணிருச்சிங்க காதல்”

டாக்டருக்கு இப்போது ஆர்வம் அதிகரித்திருந்தது. நல்லவேளையாக இரவின் இறுதி நோயாளியாக வந்தான். ஆனால் இவன் நோயாளிதானா? எல்லாவற்றையும் தெளிவாகத்தான் பேசுகிறான். என்றெல்லாம் உள்ளுக்குள் யோசித்தபடி காத்திருந்தார்.

“ஒரு பொண்ணு டாக்டர். உங்களுக்கு புடிச்சமாதிரி யாரையாச்சும் கற்பனை செஞ்சுக்கங்க. அப்டி ஒரு பொண்ணு. ஒரு கல்யாண மண்டபத்துல சந்திக்கிறான் ஹீரோ. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு சொல்வாங்களே. அதுதான் சார். ஒடம்பு மனசெல்லாம் தீயா எரியுது காதலால. அந்த பொண்ணுக்கும் அவனை புடிச்சிருக்குன்னு அப்பப்ப ஓரக்கண் பார்வை வச்சு புரிஞ்சுக்கிறான். ஆனா எப்டி பட்டுன்னு கேக்குறதுன்னு தயக்கம்.”

வேற வழியில்லாம பல்லாயிரம் தாத்தாக்கள் காலத்துக்கு முந்தின டெக்னிக் ஒன்னை கையாளலாம்னு நெனச்சி அந்த பொண்ணுக்கு சின்ன பேப்பர்ல புடிச்சிருக்கா? அப்டின்னு எழுதி சின்னப்புள்ளை ஒன்னுகிட்ட குடுக்கலாம்னு யோசிச்சு ஒரு சின்னப்புள்ளைய கூப்பிடுறான். ஓடிவந்த அந்த புள்ள இவனுக்கு முன்னாடி ஒரு துண்டுபேப்பர இவன்கிட்ட குடுக்குது. பார்த்தா. இவன் நெனச்சதை அந்த பொண்ணு செஞ்சிட்டா”

“சூப்பர் சிவா. அப்டியே மூவி பார்க்கிற மாதிரி இருக்கு. கன்டின்யு”

“அப்பறம் என்னங்க. வழக்கம்போல பார்க் பீச் எல்லாம் சுத்தியடிச்சிட்டு. அப்டியே கழட்டி விட்ருக்கலாம். லூசு மாதிரி அவங்களுக்கு கல்யாணத்தை பண்ணி கதைய முடிச்சிட்டேன்”

“ஏம்பா நல்ல முடிவுதானே. என்ன பிரச்சனை? அந்த பொண்ண உண்மையிலியே பாத்தியா?”

“அட …ஏன் டாக்டர் நீங்க ஒண்னு. அது எல்லாமே அப்டியே நடந்துச்சிங்குறேன். கல்யாணத்துல மீட் பண்ணப்ப நா கதைல எழுதிருந்த அவ புடவை டிசைன்ல அப்டியே வந்து நிக்கிறா. எல்லாமே கதைப்படி நடந்து எனக்கு ஒய்ஃபா வீட்ல இருந்துகிட்டு உசிர வாங்குறா”

“ஹஹ்ஹ்ஹ்ஹா”

“நா எவ்ளோ சீரியஸா சொல்லிட்ருக்கேன். நீங்க என்ன சார் சிரிக்கிறீங்க?”

“அதென்னமோ தெரியல சிவா. உங்க கதை கேட்டா அப்டி சிரிப்பு வருது எனக்கு. மேல சொல்லுங்க”

“அப்பறம் நா யோசிச்சேன். இது வேலைக்காவாது அப்டின்னு கொஞ்சநாள் எழுதாம இருந்தேன். அப்பறம் என் ஒய்ஃப் தான். உங்களுக்கு நல்லா எழுத வருது. தொடர்ந்து எழுதுங்கன்னு என்கரேஜ் பண்ணா. சரின்னு நானும் எழுதுனேன். இந்த வாட்டி ரொம்ப வெவரமா நடிகர் டேஷ் ஸ்டார் என் வீட்டுக்கு வரமாதிரி ஒரு கதை எழுதுனேன் டாக்டர். நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் சத்தியமா அப்டியே நடந்ததுங்க.”

“எங்க தெருவுல ஷூட்டிங் வந்துருக்காரு. எங்க ஏரியால ஜாஸ்தி வீடுங்க எல்லாம் இல்லையா ? இருக்குற ஒன்னுரெண்டு வீடுகள்லயும் பூட்டிட்டு வேலைக்கி போயிருவாங்க. அதனால என் வீட்ல கொஞ்சநேரம் வெயிலுக்கு வெயிட் பண்ணியிருந்திருக்காரு. என் ஒய்ப் ஆபீசுக்கு போன் பண்ணப்ப என் நெலமை எப்டி இருந்திருக்கும்னு யோச்சிப்பாருங்க டாக்டர்”

டாக்டர் இந்தமுறை சற்று பலமாகவே சிரித்தார்.

“நீங்களே சொல்லுங்க. அந்த ஏரியாவுலயே வீடுகள் ஜாஸ்தியில்லன்னு சொல்றீங்க. அந்த டேஷ் ஸ்டாரும் பெரிய வேல்யு இல்லாத நார்மல் நடிகர்தான். சோ கேரவன் எல்லாம் அவருக்கு சான்ஸ் இல்ல. அதனால பக்கத்துல இருந்த உங்க வீட்ல வந்து கொஞ்சநேரம் ஒக்காந்துருக்காரு. லாஜிக்கலா எல்லாமே பொருந்துதே. இது சாதாரணமா நடக்கக்கூடிய ஒண்ணுதானே சிவா?”

இப்போது அவன் சிரிக்கத்தொடங்கினான்.

“ஏன் சிரிக்கிறீங்க?”

“சரி டாக்டர். நான் உங்க வழிக்கே வரேன். கொஞ்சநாள் முந்தி ஒரு கதை எழுதினேன். அதுல ஒரு பிளைட்டு மர்மமான முறையில் காணாம போறதாவும், கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியாம போறதாவும் எழுதிருந்தேன். எழுதி நாலாவதுநாள் நியூஸ் பேப்பர்ல படிக்கிறேன். மலேஷியா ஃபிளைட்டு காணாம போயிருச்சின்னு. இன்னிக்கி வரை கண்டுபிடிக்கலை”

டாக்டர் சில விநாடிகள் தீவிரமாக யோசித்துவிட்டு சொன்னார்.

“இது ஒன்னும் பெரிய ட்ரபிள் இல்ல சிவா. சும்மா பெரிய பெரிய மெடிக்கல் டேர்ம்லாம் சொல்லி உங்கள பயமுறுத்தவிரும்பல. இது ஒருவிதமான பிரமைதான். அதாவது இயற்கையா தற்செயலா நடக்குற எல்லாத்துக்கும் ஒரு காரணம் கற்பிச்சுக்குறது. ஃபார் எக்ஸாம்பிள். அந்த செவுத்த பாருங்க”

அவன் திரும்பி டாக்டர் காட்டிய திசையில் பார்த்தான்.

“அந்த ஜன்னலுக்கு பக்கத்துல நிழல் தெரியுதா?”

“தெரியுது டாக்டர்”

“குட். அந்த நெழல்ல எதாவது உருவம் தெரியுதா பாருங்க”

“அட ஆமா டாக்டர்.. ஒரு மாதிரி.. ஆங் ஆடுமாதிரி இல்லயில்ல.. குதிரை மாதிரி இருக்கு டாக்டர்”

“ஹஹ்ஹ்ஹா நான் சொல்லலை? இதான் விஷயம். உண்மையில அங்க நெழல் மட்டுந்தான் இருக்கு. இப்ப ஆடு குதிரைன்னு நாம பார்த்ததெல்லாம் நம்ம கற்பனைதான். இப்டித்தான் லைப்ல பல விஷயங்களுக்கு நாமளா எதாவது நெனச்சிக்கிறோம். இது காமன்தான் சிவா. சில மெடிஸின்ஸ் எழுதித்தரேன். எடுத்துக்கங்க. நல்லா டைமுக்கு சாப்டுங்க. தூங்குங்க. இதைப்பத்தியெல்லாம் நெனைக்காம உங்க வேலைய பாருங்க”

“அப்ப நான் ஃபேஸ் பண்ணதெல்லாம் எதார்த்தமா நடந்த ஒண்ணுதான்னு சொல்றீங்களா டாக்டர்”?

“நிச்சயமா சிவா. நீங்களே வீட்டுக்குப்போயி பொறுமையா யோசிச்சுப்பாருங்க. இதையெல்லாம் செய்யிறது நம்மளோட கிரியேட்டிவிட்டி மைன்ட். அது உங்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி ஒர்க்காவுது அதான். இதையெல்லாம் கரெக்டா பயன்படுத்திக்கிட்டவங்கதான் பிற்காலத்துல பெரிய செலிபிரட்டியா ஆகிருக்காங்க. நீங்களும் ஒருநாள் பெரிய ஆளா வர வாழ்த்துக்கள்”

அவன் மிகுந்த குழப்பத்துடன் எழுந்துகொண்டான்.

“என்ன சிவா? ஃபீஸ் ரிசப்ஷன்ல குடுத்துடுங்க” என்றபடி சிரித்தார் டாக்டர்.

“அதில்ல சார்.. வந்து…”

“சொல்லுஙக. என்னமோ தயங்குறீங்க”…

“ஒண்ணுமில்ல டாக்டர்” என்றபடி அவன் நகர ரிசப்ஷன் பெண் உள்ளே வந்து இன்னொரு பேஷன்ட் வந்திருப்பதாகச் சொன்னாள். டாக்டர் வரச்சொல்ல, இவன் வெளியேறும்போது தோளுரசியபடி டாக்டரின் அறைக்குள் நுழைந்தவனை எங்கோ பார்த்ததுபோலிருந்தது.

ரிசப்ஷனில் பணமெல்லாம் கொடுத்து பக்கத்து ஃபார்மசியில் மருந்துகள் வாங்கும்போதுகூட யோசித்தான். எங்கோ மிக நெருக்கமாக பார்த்த முகமாக நன்கு அறிமுகமான முகமாக தோன்றியது. முக்கியமாக அவன் வலது புருவத்தின் அருகிலிருந்த மரு. நன்றாக நினைவிருக்கிறது. அது இவனது கதையொன்றின் பாத்திரம்தான்.

தெருமுனை டீக்கடையில் டீ சொல்லிக்காத்திருக்கும்போது நான்கு நாட்கள் முன்பு தான் எழுதிய கதையை நினைவுபடுத்திப்பார்த்தான்.

சிட்டியில் தொடர்ந்து நிகழும் சீரியல் கில்லர் ஒருவனைப் பற்றிய கதை அது. அதில் ஹீரோ டாக்டர்களக தேடிக்கண்டுபிடித்து கொலைசெய்வதுதான் கதை. சரியாக சற்றுமுன்பு டாக்டரின் அறைக்குள் நுழைந்தவன் இவன் கதையில் வந்தவனைப்போலவே இருந்தான்.

இவன் டீ ஆறிக்கொண்டிருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *