“அவரிருதாள் போதாதோ”
மீ.விசுவநாதன்
சிறுவயது முதற்கொண்டு சிவனையும் மாலனையும்
சிறுகாலைப் பொழுதுமுதல் சிந்தையிலே வைத்ததனால்
சிறுமையாம் பேதங்கள் சேராத மதிகொடுத்து
சிறுவநெனை நெறிசெய்த சிதம்பரனை மறப்பேனோ ! (4)
குருடனாகிக் குலவழியைக் கொள்ளாத வீணான
திருடநெனை, திருத்திடவே தெளிந்தவோர் நல்ஞான
குருதாளில் விழவைத்துத் தொடர்பிறப்பை துண்டிக்க
அருள்செய்த அம்மையப்பன் அவனின்றி யாரெனக்கே ! (8)
சங்கரநா ராயணனைச் சரியாகப் புரியவைத்த
பங்கிற்கு குருபாதப் பரம்பரையைத் தொழவேண்டும் !
எங்கிருந்து நினைத்தாலும் எளியனிவன் பரம்பரையை
அங்கிருந்தே காத்தருள்வார் ! அவரிருதாள் போதாதோ! (12)
நெல்வயலில் இளங்காற்று நெற்றிதொட்டு வாழ்துதல்போல்
பல்முளைக்கும் முன்னேயே பாலுடனே பண்பூட்டி
நல்வயலாய்ப் பிறப்பினையே நற்பயிராய்ச் செய்தவளை
எல்லையிலா பராசக்தி என்பதிலே பொய்யுண்டோ? (16)
(வாய்பாடு: காய், காய், காய், காய்….”.தரவு கொச்சக் கலிப்பா” )
(08.06.2015)