வெண்பஞ்சு முகில்களே நீங்கள் யார்?
-ராதா மரியரத்தினம்
இறைவனின் மஞ்சத்திலிருந்து
நழுவி விழுந்த
வெண் பஞ்சுத் துகள்கள்தான்
மேகங்களோ?
நிலவில் இருந்து
வடை சுட்ட பாட்டி
எரியாத அடுப்பை
ஊதுகுழல் கொண்டு
ஊதியதால் ஏற்பட்ட
புகையோ இந்த முகில்கள்?
மழைத்துளி பவனி வர
இறைவன் அமைத்த
பறக்கும் தட்டோ முகில்?
பூமித் தாயின்
அழகு காண
ஊர்வலமாய் வரும் தேவர்கள்
வாகனமோ முகில்?
சூல் நிறைந்த தாயாய்
ஆவதற்கு ஆவல் கொண்ட
கன்னிப் பெண்களோ
இந்த வெண் முகில்கள்?
.வல்லமை ஆசிரியர் குழுவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்