ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 6

0

சி. ஜெயபாரதன்.

kahlil-gibran

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

காதல் சேயிடம் என் இதயம் கேட்டது : “அன்பே ! எங்கே நான் மனநிறைவைக் காண்பேன் ? உன்னுடன் சேர இங்கு அது வரப் போவதாய்க் கேள்விப்பட்டேன்.”

காதல் சேய் அதற்குப் பதில் உரைத்தாள் : “பேராசையும், லஞ்சமும் முதன்மையான நகருக்கு மன நிறைவு ஏற்கனவே உபதேசம் செய்யப் போய் விட்டாள். நமக்கு அவள் தேவை யில்லை.”
– கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter)

“உனக்கு வலி உண்டாகும், நீ புரிந்து கொண்ட அறிவுக் கோட்டை தகர்க்கப்படும் போது.”
– கலில் கிப்ரான்

“நான் ஏகாந்தத்தைத் தேடியதற்குக் காரணம் : தம்மையே விற்று அதே பணத்திற்குத் தம்மை விடத் தாழ்வான ஆன்மீக அல்லது உலோகாயுதப் பொருட்களை வாங்கும் மனிதரின் முகத்தைக் காணாமல் இருப்பதற்கு !”
– கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)

 

மரணமே கவிஞன் வாழ்வு

வருவாய் அழகிய மரணமே !

வாஞ்சை யோடு
ஏங்கிடும் உன்னைத்தான்
என் ஆத்மா !
வா என்னை நெருங்கி !
வந்தென் வாழ்க்கையின்
இரும்புத்
தளைகளை அவிழ்த்திடு !
களைத்துப் போனேன்
அவற்றின்
கனத்தைச் சுமந்து !
வருவாய் இனிய மரணமே !
வந்தென்னை விடுவிப்பாய்
வழிப் போக்கனாய்
என்னை நோக்கிடும்
பக்கத்துச் சொந்த
பந்தங்களிருந்து !
என்னெனில் நான் அவருக்கு
விளக்கிச் சொல்வேன்
தேவதை களின் வாசகத்தை !

வருவாய் மௌன மரணமே !
இருட்டு மூலை
மறதியில்
விட்டுச் சென்ற என்னை கடத்திச் செல்
இந்தக் கும்பலிட மிருந்து !
எனெனில்
எளியவர் குருதியை நான்
அவரைப் போல்
பிழிந்திட மாட்டேன் !

வருவாய் சாந்த மரணமே !
இழுத்துக் கொள்
என்னை
உந்தன் வெள்ளை
இறக்கைக் குள்ளே !
ஏனெனில்
என்னாட்டு மாந்தருக்கு
இனி நான்
தேவை யில்லாதவன் !

தழுவிடு என்னை மரணமே !
முழுப் பரிவோடு அன்பு
கொண்டு !
உன் உதடுகள் தொடட்டும்
என் உதடுகளை !
அன்னையின் முத்தங்கள்
சுவைக் காதவை !
தங்கையின் கன்னத்தைத்
தடவா தவை !
அருமைக் காதலியின்
விரல் நுனிகளை
வருடா தவை !
வா வந்தென்னை
ஏற்றுக் கொள்
என்னினிய மரணக் காதலி !

(From : “A Poet’s Death is His Life” By Kahlil Gibran)

 

உன்னிதயம் ஓர் எரிமலையாக இருக்குமேயானால் அதிலிருந்து பூக்கள் மலரும் என்று எப்படி நீ எதிர்பார்க்கலாம் ?”

“அழ முடியாத அறிவு, புன்னகை சிந்தாத வேதாந்தம், குழந்தைகள் முன் பணியாத உன்னதம் ஆகியவற்றிலிருந்து நீ விலகி நில்.”

“விடுதலை இல்லாத வாழ்வு ஆன்மா இல்லாத உடம்பை ஒத்தது.”

“ஆன்மா ஆழ்ந்து செழிப்புறுவதைத் தவிர நட்பில் வேறெந்தக் குறிக்கோளும் இருக்கக் கூடாது.”
– கலில் கிப்ரான்

கவிஞன் யார் ?

இந்த உலகிற்கும் எதிர்கால உலகிற்கும்
இணைப்புப் பாலம் அவன்.
தாகமுற்ற ஆத்மாக்கள்
தண்ணீர் குடிக்க வந்திடும்
தடாகத் தூய நீர் ஊற்று அவன்.
எழில் நதி நீர் பாய்ச்சிப்
பசித்தோர் பசி அடக்கும்
பழங்கனி காய்க்கும் மரம் அவன்.

இன்னிசைக் கானம் பாடி
மனத்தாழ்வை ஒழிக்கும் வானம் பாடி !
விண்வெளி முகம்
முழுதும் நிரம்பும் வரை
அடிவான் மீது
மேலும் கீழும்
தோன்றும் வெண்முகில் அவன்.
பின்பு ஒளியை அனுமதிக்க
வாழ்வுத் தள மலர்கள் மேல் படிந்து
இதழ்களை விரிப்பான் !

தெய்வம் அனுப்பிய தேவன் அவன்
மெய்யான உபதேசம்
செய்திட வந்தவன்.
இருள் வெல்லாத
ஒளிச்சுடர் விளக்கு !
புயல் அணைக்காத ஒளி விளக்கு.
காதல் தேவதை
எண்ணை ஊற்றி
இசைக் கீதம் ஏற்றிய தீபம் !

ஏகாந்த வாதி அவன் !
பரிவோடு
எளிய உடை
உடுப்பவன் அவன் !
உள்ளெழுச்சி தனைத்
தூண்டி விட
இயற்கை மடி மீது
அமர்பவன் அவன் !
ஆத்மீகம் வரவேற்கக்
காத்திருந்து
இரவு மௌனத்தில்
தியானிப் பவன் !

தனது இதயத்தில்
விதைகளை நட்டு வைத்து
வன வயல்களில் பரிவு விதை
விதைப்பவன்.
மனித இனம் அவற்றை
அறுவடை செய்யும்
தமக்குணவாய் ஊட்டித்
தான் வளர்வதற்கு !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *