இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(153)

0

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே!

இனிய வணக்கங்கள். வினாடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் மணிகளாக, மணிகள் நாட்களாக, நாட்கள் வாரங்களாக இதோ அடுத்ததொரு வாரம் அடுத்ததொரு மடல்.

காலங்கள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. ஓடும் அக்காலங்கள் தம்முள் கடந்து செல்லும் நிகழ்வுகளைச் சரித்திரங்களாகப் பதிவு செய்கின்றன. அச்சரித்திரம் அந்நாட்டின் வரலாற்றினை அடுத்துவரும் காலங்களுக்கு காலத்தின் கண்ணாடியாக எடுத்துச் சென்று காட்டி நிற்கின்றன. அச்சரித்திரம் பேணப்பட வேண்டுமாயின் அவை அவற்றின் முக்கியத்துவம் கெடா வகையில் அத்தாட்சியுடன் பதிவு செய்யப்பட வேண்டும். எது எப்படியாயினும் அச்சரித்திர நிகழ்வுகளே அந்நாட்டின் மீது மக்கள் பெருமை கொள்ளவும், அப்பெருமையின் அடிப்படையில் அந்நாட்டின் மகத்துவத்தைப் பேணவும் வழி கிடைக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் நான் காலடி வைத்த நாள் முதல், இங்குள்ள நாட்டினரிடம் கண்டு ஆச்சரியப்பட வைப்பது இவர்கள் தமது கடந்தகால சரித்திரத்திற்கும், தமது வாழ்முறை கலாச்சாரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவமே! எந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று அரசமைத்தாலும் அவர்கள் தமது கலாச்சார, சரித்திர அடையாளங்களைப் பேணுவதற்காக தமது வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான தொகையை ஒதுக்கிக் கொள்கிறார்கள். இது அவர்களது கொள்கை அடிப்படையோ இல்லையோ, அவர்கள் இவ்வாறு செய்வதன் காரணம் இந்நாட்டு மக்கள் அவற்றிற்குக் கொடுக்கும் மதிப்பும் அரசியல் கட்சிகள் மக்களின் கருத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவமேயாகும் .

என்னடா இவன் கதையளப்பது போல் மடலில் அடுக்கிக் கொண்டே போகிறானே என்று அன்பான வாசகர்கள் எண்ணலாம். இதை நான் இப்போது குறிப்பிடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஆமாம் ஏறத்தாழ 200 வருடங்களின் முன்னால் நிகழ்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போர் ஒன்றினை இருநூறு வருடங்கள் கழித்து இவர்கள் நினைவு கூர்வதும், அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவமுமே ஆகும்.

waterloo 200“Battle of Waterloo” அதாவது “வாட்டர்லூ யுத்தம்” எனும் யுத்தம் ஜூன் மாதம் 18ம் தேதி 1815ம் ஆண்டு “வாட்டர்லூ” எனும் இடத்தில் நிகழ்ந்தது. இந்த ” வாட்டர்லூ ” எனும் இடத்திற்கும் தற்போது இங்கிலாந்தில் உள்ள “வாட்டர்லூ” எனும் இடத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இந்த யுத்தம் நிகழ்ந்த “வாட்டர்லூ ” எனும் இடம் தற்போதைய “பெல்ஜியம்” ஆகும். அப்போது இந்த இடம் “நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் ( United Kingdom of Netherlands) எனும் அமைப்பாக இருந்தது.

1815 ஆம் ஆண்டு, மாவீரன் நெப்போலியன் திரும்பவும் அதிகாரத்தைக் கைப்பற்றிய நேரம். நெப்போலியனின் அதிகாரத்திற்கு எதிரான பல நாடுகள் நெப்பொலியனின் அரசுக்கெதிராகக் கூட்டணி அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த நேரம். ஃபிரெஞ்சு தேசத்திற்கு அண்மித்த “வாட்டர்லூ” எனும் இடத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ” வெலிங்டன் பிரபு” (Duke of wellington) தலைமையில் அந்நாளைய இராணுவத் தளபதி “பிரஸ்சியன்கெப்கார்ட் வொன் பிளெச்சர்” (Prussian Gebhard von Blücher) என்பவர் அமைத்த “ஏழாவது கூட்டணி” (Seventh Coalition) எனும் இராணுவக் கூட்டமைப்பு நிலை கொண்டது.

அக்கூட்டணியை எதிர்த்து மேலும் பல இராணுவங்கள் இணைந்து தாக்குதலை மேற்கொண்டால்தான் அவர்களை இலகுவாக வெற்றி அடையலாம் என்று திட்டம் தீட்டிய மாவீரன் நெப்போலியன் தனது முக்கியமான தாக்குதலை “வாட்டர்லூ” எனும் இடத்தில் நிகழ்த்தினார். இத்தாக்குதல் நிகழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் பிரஸ்ஸியன் இராணுவம் மற்றொரு இடத்தில் ஃபிரெஞ்சு இராணுவத்திடம் தோல்வியுற்றிருந்தது. இத்தோல்வியின் பின்னால் மீண்டும் பலமாக பிரஸ்ஸியன் ராணுவம் கட்டியெழுப்பப்பட்டதை அறிந்த வெலிங்டன் பிரபு, அவர்கள் தனது நெப்போலியனுக்கெதிரான போருக்கு ஆதரவளிப்பார்கள் எனும் நம்பிக்கையோடு தாக்குதலை எதிர்கொண்டார்.

அன்று மாலைவரை நெப்போலியனின் தாக்குதலை தனது திட்டமிடுதலினால் சமாளித்துக் கொண்டிருந்த வெலிங்டன் பிரபுவின் படைகளோடு பிரஸ்ஸியன் இராணுவமும் ஒன்றிணைந்து ஃபிரெஞ்சு இராவணுத்தைச் சிதறடித்து ஃபிரெஞ்சு நாட்டின் அதிகாரத்தை 18ம் லூயி மன்னனிடம் கையளித்தார்கள். நெப்போலியன் கைது செய்யப்பட்டு செயிண்ட் ஹெலினாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு நெப்போலியன் 1821ம் ஆண்டு உயிர் நீத்தார்.

யார் இந்த “வெலிங்டன் பிரபு “?

Sir_Arthur_Wellesley,_1st_Duke_of_Wellington

1769ம் ஆண்டு – மே மாதம் 1ம் நாள், அயர்லாந்து நாட்டில் பிறந்த “ஆர்த்தர் வெல்லஸ்லீ” (Arthur Wellesley) என்பவரே இவர். “ஃபீல்ட் மார்ஷல்” எனும் இராணுவ உயர் பதவியை வகித்தவர். அந்நாளைய பிரித்தானியாவின் இராணுவ வீரர்களில் இவர் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டார்.

1787ம் ஆண்டு – இராணுவத்தில் இணைந்த இவர் ஒரு கர்னலாக பதவி வகித்தார். இவர் அயர்லாந்து பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1796ம் ஆண்டு – நெதர்லாந்து , இந்தியா ஆகிய நாடுகளில் பல போர்களில் பங்கு கொண்டார் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த, திப்பு சுல்தான் கொல்லப்பட்ட நான்காவது ஆங்கில மைசூர் போரில் இவர் இங்கிலாந்து படைக்குத் தலைமை தாங்கினார்.

1799ம் ஆண்டு – ஸ்ரீரங்கப்பட்டினம், மைசூர் ஆகிய பகுதிகளின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

1814ம் ஆண்டு – நெப்போலியன் தலைமறைவாக இருந்த காலத்தில் இவர் ஃபிரெஞ்சு நாட்டின் பிரித்தானிய தூதுவராக கடமையாற்றும் போது இவருக்கு ” டியூக்” (Duke) எனும் பட்டமளிக்கப்பட்டது. இவரது இராணுவ காலம் முடிவுற்றதும் பிரித்தானிய அரசியலில் குதித்த இவர் இரண்டுமுறை கன்சர்வ்வேடிவ் கட்சியின் சார்பில் பிரதமராக பதவி வகித்தார்.

1852ம் ஆண்டு – இவரது இறுதி காலம் வரை இங்கிலாந்து இராணுவத்தின் தலைமைக் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றினார்.

Lorddouroஇப்போது இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போரில் டியூக் ஆஃப் வெலிங்டன் அடைந்த வெற்றியின் போது உயிர் நீத்த 24,000 வீரர்களை 200 வருடங்களின் பின்னால் நினைவு கூரும் முகமாக லண்டன் “வாட்டர்லூ” இரயில் நிலையத்தில் ஒரு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது. இந்நினைவுச் சின்னத்தை அப்போரின் வெற்றிக்கு காரணமான டியூக் ஆஃப் வெலிங்டனின் பரம்பரையில் வந்தவரான 9வது டியூக் ஆஃப் வெலிங்டன் சார்ல்ஸ் வெலரியன் வெலஸ்லீ என்பவர் திறந்து வைத்தார். மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நிகழ்வு இந்நாட்டு மக்கள் மக்கள் தமது சரித்திர நிகழ்வுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றி நிற்கிறது.

இத்தகைய உணர்வுகளே தமது நாட்டின் மீது தாம் கொண்ட மதிப்பையும் அதன் அடிப்படையில் அந்நாட்டைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், வசதிக் குறைவின்றி வைத்துக் கொள்ளும் மனோபாவத்தின் அடிப்படையாகிறது. நம்மில் எத்தனைப்பேர் நமது நாடுகளின் சரித்திர நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் ?

ஆச்சரியமாக இல்லையா ?

மீண்டும் அடுத்த மடலில் …
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *