புதிராட்டம்
-இரா.சந்தோஷ் குமார்
தொண்டைக் குழியில்
பசையொட்டிய ஒருவித
உணர்வுப் பிழையேந்தும்
நாக்குத் தசை,
பேசமுடியா மூச்சிரைப்பில்
இதழ் வழியே
ஒரு சொல்லை வெளியிட்டது
அது ‘தாகம்’ என்றானது!
என்னிதழுக்கு
உன்னிதழால் நீ
கவ்விக் குதறி
வேதனை நீர் ஊற்றினாய்
தாகத்திற்கு
எந்நீர் என்றாலும் என்ன
எந்த ரணமானாலும் என்ன…
அந்நொடியில் தீர்வது
ஒரு தீர்வுதானே?
நிழல் தேவதையே…!
உன் கரங்களினால்
தேவைப்படுகிறது
ஒரு மருந்துக் களிம்பு!
இல்லையேல்
ஒரு மரண விளிம்பு!
இமை திறந்து நான்
நெஞ்சு நிமிர்த்தி
நிரந்தரமாய்
இமை மூடிவிடக்கூடாது
என்பதற்காகவே
உன்னிடம் நித்தமும்
யுத்தம் போன்ற
முத்தப் போரிட்டுதானே
இருக்கிறேன்…?
ஆனாலும்,
புரியவில்லை தோழி…!
என்னவாக என்னை
புதிராகப் புதியதாகச்
செய்து கொண்டிருக்கிறாய்…
என்
வாழ்க்கைக் கவிதையே!