பால்மனம் பூமனம் பாவை மனம் …
— கவிஞர் காவிரிமைந்தன்.
திரைப்பாடல் ஒன்றில்கூட மனம் லயித்துவிடுகிறதே, ஏன்… சொல்லுங்கள். அதுவும் பல்லவியிலேயே நம்மைக் கட்டியிழுக்கும் கவிஞர்களின் சாமார்த்தியம். இசையிலே சுண்டியிழுக்கும் இசையமைப்பாளர்களின் கற்பனா சக்தி. பாடக பாடகியரின் இனிமைதவழும் குரல்களில் அந்தக் கவிதை நதி இசையோடு பயணித்து வருகின்ற அழகில் நாம் சொக்கித்தான் போகிறோம்!
இதோ இந்தப் பாடல்…
கதை என்ன என்பது முக்கியமல்லாமல், யார் நடித்தார் என்கிற கேள்வி எழாமல், கேட்க வைக்கிற ரகம்! ஆம், பல்லவியில் உள்ள சுகம் ஏதோ ஒரு பல்லக்கில் நம்மை அமர வைக்கிறது! அந்தப் பல்லக்கின் ஆடல்போல் இசையும் அமைந்துவிட, பூங்காற்று இதமாக வருடிக்கொடுக்கிற பல்லவிகள்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா இணைந்தளித்துள்ள தேவகானமா இது! தேன்மழை பொழிகிறமாதிரி, கண்ணன் ராதை காதல் லீலைகளின் அழைப்பிதழ் அச்சிடப்பட்டதுபோல் வாசகங்கள் வரிகளாய் அமைய வழிகிறது இனியதொரு கானம்!
பிருந்தாவனத்தில் தொடங்கி, பள்ளியறை தொடர்ந்து, சரசக்கலையை உரசிக்காட்டும் உன்னத வரிகள்! விரசமின்றி பொங்கிவழியும் காதல் அமுதம்!! நல்லிசையால் நம் இதயங்களை மீட்டியெடுக்கிறார் இசையமைப்பாளர் வி.குமார்!
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
பாடல்: பால் மனம் பூ மனம் பாவை மனம்
திரைப் படம்:ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
பாடல்: கவியரசு கண்ணதாசன்
இசை: வி.குமார்
பாடியவர்கள்: பீ.சுசீலா – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
காணொளி: https://www.youtube.com/watch?v=mcEr9r7qzF4
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
பெண்:
பால் மனம் பூ மனம் பாவை மனம்
பால் மனம் பூ மனம் பாவை மனம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
ஆண்:
கோதையின் பூவுடல் கோகுலம் என்றே
கண்ணன் விளையாட
கோதையின் பூவுடல் கோகுலம் என்றே
கண்ணன் விளையாட
காலம் என்ன நேரம் என்ன கண்ணே கொஞ்சவா
ஆண்:
பால் மனம் பூ மனம் பாவை மனம்
கண்ணே எனக்கது பிருந்தாவனம்
ஆண்:
வாடை தான் பட்டாடை இழுக்கும்
செவ்வாழைப் பூ என் கண்ணைப் பறிக்கும்
பெண்:
கிள்ளித் கிள்ளிப் பறிக்கின்ற கைகள் என்னவோ
கண் பட்டு கை தொட்டு கன்னிப் போகாதோ
ஆண்:
பூ முத்தம் வேண்டும் கன்னம்
புண் படும் என்றா எண்ணும்
பெண்:
எல்லாம் இன்று தந்தால்
நாளை மிச்சம் வேண்டுமே
ஆண்:
பால் மனம் பூ மனம் பாவை மனம்
கண்ணே எனக்கது பிருந்தாவனம்
பெண்:
கால் முதல் என் கூந்தல் வரையில்
உன் காவியம் சொல் பள்ளியறையில்
ஆண்:
சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை
அம்மமா கேட்டுப்பார் அந்திப் பொழுதை
பெண்:
ஆனந்த ராகம் ஒன்று ஆரம்பமாகும் அன்று
ஆனந்த ராகம் ஒன்று ஆரம்பமாகும் அன்று
ஆண்:
ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமே
பெண்:
பால் மனம் பூ மனம் பாவை மனம்
ஆண்:
கண்ணே எனக்கது பிருந்தாவனம்
https://www.youtube.com/watch?v=mcEr9r7qzF4