இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(154)

0

–சக்தி சக்திதாசன்.

web-human-rights-act

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

புதியதோர் வாரத்தில் புலரும் கருத்துகளுடன் உங்களோடு உறவாட மீண்டும் உங்கள் முன்னே மடல் வாயிலாக விழைகிறேன்.

அடிப்படை மனிதஉரிமை என்பது மகத்தான பொதுவுடமையாகும். மனிதன் மனிதனாக மதிக்கப்பட்டு அவனுக்கு உலகில் நியாயமான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது யாவராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு அத்தியாவசியமானத் தேவையாகும்.

உலகவரலாற்றில் அதாவது ஐரோப்பியக் கண்டத்தில் இம்மனித உரிமையின் முக்கியத்துவம் மிகவும் அதீத வகையில் உணர்த்தப்பட்டது எனலாம்.

எப்படி என்கிறீர்களா ?

1928ஆம் ஆண்டு அமெரிக்க ஸ்டாக் எக்ஸ்ச்சேஞ் வீழ்ச்சியடைந்தது. அது அமெரிக்காவில் ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்கா தான் அந்நியநாடுகளுக்கு அளித்திருந்த கடனுதவியை தனது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மேற்கோள் காட்டித் திரும்பக் கோரியது.

இந்த நடவடிக்கை ஜெர்மனிய நாட்டை மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியது. ஜெர்மனியின் வேலையில்லாதோர் தொகை ஆறு மில்லியனாக உயர்ந்தது.

ஜெர்மனிய அரசாங்கம் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தது, 1930ம் ஆண்டு ஜெர்மனிய அதிபதி ஹின்டன்பேர்க் ப்ரூனிங் அரசாங்கச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பல செலவுகளைக் குறைத்தார். அதன் நிமித்தம் வேலையற்றோருக்கு கொடுக்கப்படும் உதவிப்பணம் நிறுத்தப்பட்டு பலரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருந்த மக்களை வெகுவாக பாதித்தமையால் அவர்கள் வெகுண்டெழ அரசாங்கம் இதை அவசரக்கால திட்டத்தின் மூலம் நடைமுறைப் படுத்தியது.

ஆத்திரமுற்ற மக்கள் கம்யூனிசத்தின் பால் திரும்புவது கண்டு அச்சமுற்ற தொழிலதிபர்கள் தீவிர வலதுசாரிக் கொள்கை கொண்டவரும், இனவேற்றுமையை தீவிரப்படுத்துபவரும், யூதர்களுக்கு எதிரானவருமான ஹிட்லரை ஆதரிக்கத் தலைப்பட்டார்கள். 1928ஆம் ஆண்டில் 12 இடங்கள் மட்டுமே பெற்றிருந்த ஜெர்மனிய நாஸிக் கட்சி, 1932ம் ஆண்டு 230 இடங்களைக் கைப்பற்றுமளவிற்கு ஆதரவைப் பெற்றது. ஜெர்மனிய அரசாங்கம் நிலைகுலைந்தது. ஜனாதிபதி ஹின்டன்பேர்க் ப்ரூனிங்கை பதவியிறக்கி ஆறுமாதமே தாக்குப்பிடித்த பாப்பன் அவர்களை பிரதமராக்கினர். அவரைத் தொடர்ந்த ஸ்லெய்ச்சர் இரண்டு மாதமே தாக்குப்பிடித்தார். அந்நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து ஹிட்லருக்கு உதவிப்பிரதமர் பதவி கொடுக்கத் தீர்மானித்தார்கள். ஆனால், ஹிட்லரோ பிரதமர் பதவியை மட்டுமே எதிர்பார்த்தார்.

விளைவு !

1933ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனிய நாட்டு அதிபதியானார். அதைத் தொடர்ந்து நடந்த உலக அநியாயங்களில் முதலிடம் வகிப்பதான ஹிட்லரின் யூதப்படுகொலைகள் அரங்கேறியதும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் நாமனைவரும் அறிந்ததே !

சரி எதற்கு இந்த சரித்திர அலசல், இதற்கும் மனித உரிமைகள் பற்றி ஆரம்பத்தில் கூறியவற்றிற்கும் என்ன தொடர்பு என்றுதானே எண்ணுகிறீர்கள். இதோ வருகிறேன் …

இங்கிலாந்தின் புதிய அரசாங்கத்தின் பழைய பிரதமர் டேவிட் காமரன் அவர்கள் 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது செய்த கொள்கைப் பிரகடனங்களில் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறைவேற்றப்பட்ட மனிதஉரிமைச் சட்டத்தில் இடம்பெறும் நாடுகளில் ஒன்றாக அதைக் கடைப்பிடிப்பதை நிறுத்தி இங்கிலாந்து நாட்டிற்கான தனியான மனிதஉரிமைச் சட்டம் ஒன்றை தாம் பதவிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்பதே. இவருடைய இந்தக் கொள்கைப் பிரகடனத்திற்குக் கணிசமான அளவில் மக்கள் ஆதரவும் உண்டு.

அட, தமது உரிமைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் பாதுகாக்கும் உரிமைகளை இவ்வளவு இலகுவாக விட்டுக்கொடுக்கச் சம்மதிக்கிறார்களே என்று வியப்பதற்கு இடமுண்டு. சமீபகாலமாக உலகில் பலபாகங்களிலும் மதங்களின் பெயரால் இடம்பெற்று வரும் பயங்கரவாதச் செயல்களைப் பற்றி நாம் நன்கறிவோம். அத்தகைய பயங்கரவாதச் செயல்கள் புரிவோரை பகிரங்கமாக ஆதரிக்கும் வெளிநாட்டினரை இங்கிலாந்தில் இருந்து அப்புறப்படுத்த இங்கிலாந்து நீதிமன்றங்கள் உத்தரவிட்ட போதும் அவர்கள் இம்மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய நீதிமன்றத்தின் மூலம் தொடர்ந்தும் இங்கிலாந்தில் தங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதி இங்கிலாந்து மக்கள் பலரை மிகவும் ஆத்திரமூட்டியுள்ளது. எப்போது இந்த மனிதஉரிமைச் சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது ?

MAIN-Magna-Cameronஹிட்லர் யூத மக்களுக்குச் செய்த அகோரச் செயல்களின் பின்னர், ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பின்னால் இனிமேல் உலகில் குறிப்பாக ஐரோப்பாவில் இத்தகைய கொடிய செயல்கள் இடம்பெற இடமளிக்கக் கூடாது எனும் காரணத்திற்காக அப்போதைய ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து இந்த மனிதஉரிமைச் சட்டத்தை அமுலாக்கின. ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் ஒரு தனிமனிதனின் கொள்கைக்காகப் பறிக்கப்பட்டதினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்புச் சட்டம், மதத்தின் பெயரால் காவு கொள்ளப்படும் உயிர்களினால் மீண்டும் எதிர்க்கப்படும் ஒரு துயரமான சந்தியில் நிற்கிறோம்.

இச்சட்டத்தை இங்கிலாந்தில் நிறுத்தக்கூடாது எனும் குரல்கள் பலபாகங்களிலும் ஒலிக்கத்தான் செய்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட உரிமைகளுக்கான சட்டம் “மக்னா காட்டர்” என்பதே முதன்முதாலக ஐரோப்பிய பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மனித உரிமைச் சட்டம். இச்சட்டத்தின் 800ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்படும் வேளையில், இத்தகைய சட்டத்தை ஐரோப்பாவில் அனைவர்க்கும் முதலாக ஏற்படுத்திய எமக்கு, எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை எம்மால் ஏற்படுத்த முடியாதா ? என்று வாதிடுகிறார் பிரதமர் டேவிட் காமரன்.

ஏதோ ஒருசில பயங்கரவாதிகளுக்காக வேறுபல நன்மைகளைத் தரும் ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைச் சட்டத்திலிருந்து நாம் விலகுவது ஒரு மூடத்தனமான காரியம் என வாதிடுகிறார்கள் பல முன்னணி அரசியல்வாதிகள். மனிதனை மனிதனாக வாழவிடுவதற்கு ஒரு சட்டமூலம் அவசியம் எனும் நிலை வந்த பின்பு . . . .

ம் . . . பொறுத்திருந்து பார்ப்போம் …

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *