பவள சங்கரி

27-suryanamaskar

யோகம் என்பது ….

சுட்டும்-விழி2-300x76

வியத்தகு ஆற்றல் பெற்ற உடலும், மனமும் இணைந்து, இசைந்து, இயங்கும் கலைதான் யோகாசனம். நம் அன்றாட வாழ்வியலில், நம்மை உற்சாகமாக கடமையாற்ற வழியமைத்து, ஆரோக்கியத்தையும், உள்ளத் தெளிவையும் ஒருசேர பேணிக்காக்கக்கூடியது. நம் வாழ்க்கை புறப்பட்ட இடம் எது என்ற தெளிவு இருக்கும் ஒருவருக்கே தாம் இறுதியில் போய்ச் சேரப்போகும் இடம் பற்றிய விழிப்புணர்வும் இருக்கும். இந்தத் தெளிவே நம்முடைய இடைப்பட்ட காலத்தில் நாம் வாழும் முறையை நிர்ணயிக்கிறது. நம் வாழ்க்கைப் பயணம் இடறின்றி அமைய சிறு தூண்டுகோலாக செயல்படுவதும் யோகாசனம் என்றும் சொல்லலாம். கீதையில் கண்ணன், சத்துவ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என மூன்றாகப் பிரிக்கிறார். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த மூன்றின் ஒரு நிலையில் நின்றுதான் நம் பயணம் செல்கிறது. சத்துவ குணம் எதையும் புன்னகையோடு அலட்சியப்படுத்தும். ரஜோ குணம் பழி தீர்க்க நினைக்கும். தமோ குணம் நடந்ததை நினைத்து அழுது, கவலை கொள்ளும். இதில் ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என அந்த பின்னிரண்டு குணங்கள்தான் நம்மை அலைக்கழித்து, நம் உடல் நிலையையும் பாதிக்கச் செய்கிறது. ஆக, புலன்களை அடக்கி, ஒருமுகப்படுத்தி, பகை உணர்ச்சி என்பதே துளியும் அணுகாமல் நிதானம் காப்பது, நம் உடல்நிலை ஒரே சீராக இயங்குவதற்கு அத்தியாவசியமாகிறது. மனித மனம் உணர்ச்சியின் வேகத்தில் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி சூழ்நிலைகளுக்கேற்றவாறு மாற்றமடைகிறது. இந்த நிலையிலேயே துன்பங்களைப் பெருக்கும் பழிச் செயல்களும் பதிவுகளும் ஏற்படுகின்றன. இதை அறிவின் மயக்க நிலை, என்றும், மாயை என்றும் அழைக்கிறோம். இதிலிருந்து விடுபடவே நாம் எண்ணினாலும் சூழ்நிலைகள் மீண்டும், மீண்டும் நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறது. இந்த மனித இயல்பை, இயற்கை நிலையை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சிறந்த சாதானமாக இந்த யோகாசனத்தைக் கூறலாம். உடற்பயிற்சியுடன், மனப்பயிற்சியும் (தியானம்) இணைந்து தெளிவான சிந்தையை அன்றாடம் ஊக்குவிக்கக்கூடிய கலை என்றே சொல்லலாம்.

‘யோகா’ என்ற சொல் ‘யுஜ்’ என்ற சமசுகிருத சொல்லிலிருந்து வந்துள்ளது. இதன் பொருள் தனிப்பட்ட மற்றும் பிரபஞ்ச உணர்வுகளின் கூட்டமைப்பு என்பதே. யோகாசனம் என்பது மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தக்கூடிய, நம் பழமையான வேத இலக்கியங்களின் ஊற்று. ரிக் வேதம் என்பது மனித வரலாற்றில் மிகப் பழமையானதும், புனிதமானதுமான, எட்டாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது.

சர்வதேச அளவில் இன்று மிகப்பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள யோகாசனம், கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பதஞ்சலி முனிவரால் எடுத்தாளப்பட்ட அற்புதமானதொரு கலை என்பதில் நாம் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய விசயம். பதஞ்சலி முனிவர் யோகாசனத்தின் எட்டு அங்கங்களை தெளிவாக்கியிருக்கிறார். அவைகளாவன: யாமா என்கிற சமூகப் பண்பாட்டுக் கூறுகள், நியமம் என்கிற தனிப்பட்ட நன்னெறி, ஆசனம் என்கிற பயிற்சி முறைகள், பிரணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி, பிரத்யாகாரம் என்கிற புலன்களை உள்முகமாக மாற்றும் முறை, தர்ணா என்கிற ஒருமுனைப்படுத்துதல், தியானம் மற்றும் சமாதி நிலை ஆகியவை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு அதனை ஒவ்வொரு மையங்களும் தங்களுக்குரிய பாணியில் ஆய்வு செய்து பயிற்சியளித்து வருகின்றனர்.

“மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலையூன்றி
சினமெனும் சரக்கை ஏற்றி செறிகடல் ஓடும்போது
மனனெனும் பாறை தாக்கி மரியும்போதறியவொண்ணா
ஒற்றியூர் உடைய கோவே “

என்பது அப்பர் சுவாமிகளின் அருமையான தேவாரப் பாடல். அதாவது, “மனம் எனும் தோணியில் அறிவு எனப்படும் கோலை நாட்டி, சினம் எனும் சரக்கை ஏற்றி உறவுகளுடன் பயணம் செல்லும்போது, மதம் எனப்படும் தீவினை தாக்கி நிலைகுலைந்து இறுதிக் காலத்திற்கு செல்லுவது உறுதி. இதனையெல்லாம் அறியாத நான் என் உணர்விலே, உன்னை எப்போதும் உறுதியுடன் நினைத்து வாழ அருள் செய்வாய் திருவொற்றியூர் பெருமானே’ என்கிறார்.

ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கைக் கடலை கடப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் செய்தும், பலப்பல தடைக்கற்களைத் தாண்டியும் வரும்போது அதற்கான பின் விளைவுகளாக பல்வேறு விதமான நோய்களுக்கு ஆட்படுகிறோம். இதிலிருந்து மீள்வதற்கு பலவிதமான மருத்துவமும் மேற்கொள்கிறோம். அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும், தலைவலி போய் திருகுவலி வந்ததுபோல் அனுபவிக்கிறோம். இவையனைத்திற்கும் தீர்வு என்பது நம் முன்னோர்கள் வழிவழியாகக் கடைபிடித்து வந்த யோகாசனப் பயிற்சி முறைகள் என்றால் அது மிகையல்ல. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை அமைவது எவருக்குமே சாத்தியம் இல்லை என்றாலும், அந்தப் பிரச்சனைகளை அணுகும் முறையிலும், அதனைக் கையாளும் முறையிலும் ஒரு தனிப்பட்ட சக்தியை வழங்குவது யோகாசனப் பயிற்சிகள். அன்றையப் பணிகளை உற்சாகமாகத் தொடங்கவும், மனதை இலகுவாக வைத்துக்கொள்ளவும் இப்பயிற்சிகள் துணை புரிகின்றன.

ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு, ‘வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்’ என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு செயல்படும், திருமிகு யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மன்றத்தின் யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டேன். எளிய உடற்பயிற்சிகளுடன் மன வளமும் ஏற்பட வழியமைந்தது அங்குதான். அகத்தாய்வுப் பயிற்சிகள் மூலம் அன்றாடப் பணிகளை அல்லல் இன்றி நிறைவேற்றும் வல்லமையும் பெற முடிந்தது.

தற்சோதனை

1547023501Copy-of-Scan10003

நிறைவு செய்யமுடியாத நூறு ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக்கொண்டு திணறுவதில் யாருக்கு என்ன லாபம்; மன அமைதி முதலில் போயிற்று, மனதின் பலம் போயிற்று; செயல் திறன் போயிற்று, உடல் நலம் போயிற்று, நற்குணங்கள் போயின; எரிச்சலும் கோபமும் அடிக்கடி வந்தன. முகத்தில் தெளிவுபோய் சோகம் படிந்தது. நமது “மனவளக்கலை” பயிற்சியில் மனம் தன் திறமையையும், உறுதியையும், வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சி தான் “அகத்தவ பயிற்சி” முறையாகும். தன்னைப்பற்றி, தன் தேவையைப் பற்றி, தன் செயலின் விளைவைப் பற்றி, தன் தகுதியைப் பற்றி, தன் மதிப்பைப் பற்றி ஆராய்வது தான் “தற்சோதனை” என்கிற தன்னை ஆராயும் பயிற்சியாகும். இந்தத் தற்சோதனை வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. மனதில் தைரியம் வந்துவிடுகிறது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து விடுகிறது. மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்து விட்டதால் பொறுமை, அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. கடமை உணர்ந்து பொறுப்புணர்ந்து எண்ணத்தில் தூய்மையோடு காரியங்களை ஆற்றுவதால் எடுத்த காரியத்தில் வெற்றியும் கிடைக்கிறது.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கீழகண்ட ஒன்பது தவங்களும் இங்கு பயிற்சியளிக்கப்பட்டன.

மனவளக்கலை : ஒன்பது வகை தவங்கள்

1. ஆக்கினை :
மூலாதாரத்திலிருந்து உயிரை எழுப்பி புருவமத்திக்குக் கொண்டு வந்து உயிரை உணர்வது . பிட்யூட்டரி சுரப்பி நல்ல முறையில் வேலை செய்யும் .

2. சாந்தி:
மேலே புருவமத்திக்கு சென்ற உயிர் மையத்தைத் திரும்பவும் மூலாதாரத்திற்கு கொண்டு வருவது….

3. துரியம்:
உயிர் மையத்தைத் தலை உச்சிக்குக் கொண்டு வருவது. பீனியல் சுரப்பி நல்ல முறையில் செயல் புரியும் .

4.துரியாதீதம் :
உடலிலிருந்து வெளியே வந்து பிரபஞ்சம் வரை விரிந்து மேலும் பிரபஞ்சத்திற்கு அப்பாலுள்ள சுத்தவெளி என்ற இறைநிலையோடு கலக்க விடுவது.

5. பஞ்சேந்திரியம்:
மெய் ,வாய்,மூக்கு,கண், காது என்ற ஐம்புலன்களின் மூலம்தான் சீவகாந்தம் வெளியேறி உலகில் இன்ப துன்பங்களை அனுபோகிக்கின்றோம். ஐம்புலன்களுக்கும் ஆற்றலை கூட்டி அளவுமுறை காக்க உதவுகிறது.

6.பஞ்சபூத நவகிரகம் :
நாம் பூமி மீது வாழ்கின்றோம் . நிலம் , நீர்,நெருப்பு, காற்று ,விண் என்ற ஐந்து பெளதிகப் பிரிவுகளான பொருள்களிலிருந்து வரும் காந்த அலைகளுடன் இனிமை காப்போம். சூரியன் ,புதன், வெள்ளி, சந்திரன், வியாழன் , சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோள்களிலிருந்து வரும் காந்த அலைகளுடன் இணக்கம் கொள்கிறோம்.

7.ஒன்பது மையம் :
மூலாதாரம், சுவாதிஷ்டானம் மணிப்பூரகம், அநாகதம் , விசுத்தி, ஆக்கினை, துரியம், என்று உடலுக்குள் உள்ள ஏழு இயக்க மையங்களிலும் பிரபஞ்சம், சுத்தவெளி போன்றவற்றில் மனம் வைத்து தவம் செய்வது .

8. நித்தியானந்தம்:
உடல் முழுவதும் சீவகாந்த ஆற்றலை நன்கு பரவ செய்வது.உடலும் , மனமும் நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க உதவும்.

9.இறைநிலை தவம்:
இறைநிலையிலிருந்து மனிதன் வந்த வரலாற்றை உணர்ந்து மனதை இறைநிலையோடு கலக்க விடுவது.

இந்த ஒன்பது வகை தவங்கள் மனவளக்கலை மூலமாக கற்றுக்கொடுக்கப் படுகின்றன. இவற்றை பயின்று வாழ்வில் எல்லா துறைகளிலும் வெற்றியும், மகிழ்ச்சியும் , மனநிறைவும் பெறுவதற்கு குருவருளும், திருவருளும் துணை புரியட்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் …

மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு, திருமிகு. சிரீ சிரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை யோகாசனப் பயிற்சி மேற்கொண்டேன். இதில் ‘சுதர்சன் கிரியா’ என்ற தன் நிலை உணரும் தவம், அற்புதமான பயிற்சி. ‘ஒரு பரவச நிலை’ என்பதன் பொருள் விளங்கும் தவம் என்றால் அது மிகையாகாது. மனதுக்கும்,உடலுக்கும் இணைப்பாக மூச்சு செயல்படுவதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்றபடி தனிப்பட்ட விதத்தில் நமது மூச்சின் தன்மை மாறுவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

srisrionsky1

சுதர்சன் கிரியா, உடல், மனம், புத்தி, மற்றும் உணர்வுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் தன்மையுடைய, இயற்கையாய் அமைந்த, மூச்சின் தாள ஒழுங்கைக் கொண்டது. இந்த தனிச்சிறப்புவாய்ந்த மூச்சுப்பயிற்சி நம்மிடமுள்ள மன இறுக்கம்,விரக்தி, மற்றும் எதிர்மறையான உணர்வுகளான கோபம்,சோர்வு,வருத்தம் ஆகியவற்றை வெளியேற்றி நம்மை அமைதியுடன் கூடிய உற்சாகத்துடனும், கவனத்துடன் கூடிய ஓய்வுடனும் வைக்கிறது.

சுதர்சன் கிரியாவின் மூலமாக, நாம் மூச்சை திறமையாகப் பயன்படுத்தி, நமது உணர்ச்சிகளைக் கையாளமுடியும், மன இறுக்கத்துக்குக் காரணமான எதிர்மறை உணர்வுகளான கோபம், பதட்டம், சோர்வு, பயம் ஆகியவற்றை வெளியேற்றி மனதை அமைதியாக, ஆனந்தமாக, துடிப்புடன் வைத்துக்கொள்ள முடியும்.

சுதர்சன் கிரியா, நமது முழு உடல், மன அமைப்பில் உள்ள மாசுகளையும் சேர்ந்துள்ள இறுக்கத்தையும் வெளியேற்றி அதை ஒழுங்குபடுத்துகிறது. நமது ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான புரோலாக்டின் ஹார்மோனின் அளவு முதல் முதலாக சுதர்ஸன் கிரியா பயிலும் போதே அதிகரிப்பதை ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை அருகில் உள்ள ஈஷா யோகா மையம் சென்றிருந்தோம். பிரம்மாண்டமான சிவலிங்கத் திருமேனியும், தியானம் செய்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குகைகளும், விஞ்ஞானப்பூர்வமாக ஏதோ சில மாற்றங்களை எனக்குள் ஏற்படுத்துவதை உணர முடிந்தது. தியானத்திற்கு ஏற்ற வகையில் நுட்பமான முறையில் இங்கு கட்டிட அமைப்புகள் உள்ளன.

ஈஷா யோக மையம்

dhy1-20061108_SHA_0326

தென்னிந்தியாவின் எழில்மிகு இடங்களுள் ஒன்றாகிய வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. அடர்ந்த வனங்களும், மின்மினிப் பூச்சிகளும், வற்றாத நீர்வீழ்ச்சிகளும் வனவிலங்குகளின் உறைவிடங்களும் பின்னணியாகத் திகழும் இது, உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த இடமாக உள்ளது. 150 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் அதிகமாக விரிந்துள்ள இந்த மையம், தியானலிங்கத் திருக்கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்துணர்வு மையம், ஈஷா இல்லப் பள்ளி மற்றும் ஈஷா குடியிருப்புகளுடன், ஒருவர் தம் உள்நிலைப் பயணத்தை மேற்கொள்வதற்கு உறுதுணையான ஒரு சூழலை வழங்குகிறது.

2065848021sadguruinisha-centre

பாராட்டப்பட வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் இங்கு உள்ள குழந்தைகளுக்கான தங்கும் பள்ளி.

ஈஷா ஹோம் ஸ்கூல்

ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான தரமான கல்வியை, வீட்டுச் சூழலில் அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. உலகின் பல பகுதியைச் சார்ந்தவர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். குழந்தைகளுக்கு இயல்பாகவே உள்ள அறியும் மற்றும் கற்கும் ஆர்வம் தூண்டப்படும் வகையில் இதன் கற்கும் முறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தக வழிக் கல்வியை விட வாழ்க்கைத் திறன்கள் மற்றும் வாழ்வின் மதிப்பீடுகளை வளர்த்தெடுக்கும் விதமாக இதன் கல்விமுறை இருக்கிறது. இந்த முறையினால், கல்வி என்பது, இங்கு, ஒன்றை ஆராய்ந்து அறிவதாகவும் ஆனந்தத்தை தருவதாகவும் உள்ளது.

சமீபத்தில் அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருந்த போது, கிளப் மெட்ரோ என்ற உடற்பயிற்சி மையத்தில் 30 நாட்கள் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். நம்முடைய ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரம்தான் அங்கு பயிற்சியின் ஆரம்பத்தில் தியானம் செய்யும்போது உச்சரிக்கப்படும் ஆரம்ப மந்திரம். உண்மையில் நம் இந்தியத் திருநாட்டின் பாரம்பரிய, மிகப் பழமையான யோகக்கலையை மேலை நாட்டவர் பய பக்தியுடன் பயிற்சி செய்வதைப் பார்ப்பதற்கு மிகவும் பெருமையாக இருந்தது. வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஜூம்பா நடனப் பயிற்சியும் கொடுக்கிறார்கள்.

தவப்பயிற்சி

நம் உடலிலுள்ள ஐம்பொறிகளையும் உள்ளத்தோடு ஒன்றும்படி செய்து, பின்னர் அந்த உள்ளமும் உயிரோடு ஒருமையடையப் பயிற்சி செய்வதே தவம். இப்பயிற்சியை முழுமையாக உணர்வுப்பூர்வமாக செய்யும்போது, உயிர் ஒளிமயமான இறையோடு கலந்து அமைதி பெற முடியும். இதையே தவப்பயன் என்பர் பெரியோர். இதன் பயனாக அன்றாட வாழ்வில் ஏற்படும் தொல்லைகள், துன்ப துயரங்களையும் பொருட்படுத்தாத மனத்திட்பம் பெற முடிகிறது. அதோடு பிற உயிர்களுக்கு எந்தவிதமான கேடும் நினையாமலிருக்கிற மனப்பண்பாட்டையும் பெற முடிகிறது. இதனையே வள்ளுவப் பெருந்தகை, தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் என்கிறார்.

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

சுய விடுதலை

உலகின் பந்த பாசம், ஆசை, சுகம், துக்கம், சினம், பொறாமை, வஞ்சம், புகழ், பணம், அற்ப சுகம் என நாம் அடிமைப்பட்டிருக்கும் இவை அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று நம்மை அமைதியாக வாழ வழியமைத்துக்கொடுக்கும் இந்த யோகக்கலை அமையப் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள் எனக்கொள்ளலாம். விடுதலை என்பது நமக்கு யாரும் தரக்கூடிய ஒன்றல்ல. அது நம் உள்ளம் என்னும் மையத்துக்குள் ஏற்படுகிற மறுமலர்ச்சி. உளவியல் ரீதியிலான இந்த அடிமைத் தளையை நம் முயற்சியால், நாம் மட்டுமே உடைத்தெறிய முடியும். அதற்கு ஒரு முக்கியமான கருவியாகச் செயல்படுவதுதான் யோகப்பயிற்சி! காற்றைப் போன்று கனமற்றும், வெளிச்சத்தைப்போல் வெளிப்படையாகவும் , தண்ணீரைப் போன்ற தடையில்லாத ஓட்டமும் அளிக்கவல்லது யோகப்பயிற்சி! அதுவே நம் சுய விடுதலையும் கூட. ஆக, யோகாசனப் பயிற்சியை அன்றாடம் முறையாக கடைபிடிப்பதன் மூலம் புற அழகோடு சேர்த்து அக அழகையும் பெற முடியும் என்பதே நிதர்சனம்! இத்தகைய அரிய கலையை நம் குழந்தைகளுக்கு பள்ளியில் பயிற்றுவிக்க வேண்டியதும் அவசியம். சில தனியார் பள்ளிகளில் யோகாசனப் பயிற்சி வகுப்பு இருந்தாலும், அரசுப் பள்ளிகளில் இல்லை. அரசாங்கம் உடனடியாக இதற்கான ஏற்பாட்டை செய்வது நலம். இதனால் நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடு  நிலைத்து நிற்கவும் ஏதுவாகும்.

international yoga day 5656

பி.கு. நான் யோகாசனப் பயிற்சியை தவறாமல் அத்தனை ஒழுங்காகக் கடைபிடிக்கிறேனா என்று கேட்டால், இல்லை என்றே வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. இனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம் என்று உறுதி கொள்வோம்! தவறாமல் யோகப் பயிற்சியை மேற்கொள்வோம் நண்பர்களே!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சுட்டும் விழிச்சுடர்! – சர்வதேச யோகாசன தினம்!

  1. சபாஷ்…தெளிவான கட்டுரை. இத்தனை நல்ல யோகப் பயிற்சியை முறையாகக் கற்றுக்கொண்ட கட்டுரையாளர் அதை அழகுபட விளக்கி இருப்பது நன்று. தான் யோகாவைத் தொடராது விட்டதை வெளிப்படையாகக் கூறி, இனி தொடர்ந்து செய்யும் எண்ணத்தையும் தெரியப்படுத்திய கட்டுரை ஆசிரியரைப் பாராட்டுகின்றேன்.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *