வள்ளுவ மாலை
-சுரேஜமீ
வள்ளுவம் ஏகிநிற்போர் வாழ்வினில் பெற்றிடுவர்
எண்ணுவம் எல்லாம் உலகில் – மாநிலம்
போற்றிடத் தானுயர் சான்றோராய் என்றும்
பெருமையாய் வாழ்வர் சிறந்து!
தவறிலார் வாழ்வு சிலநேரம் தள்ளாடும்
தன்னகத்தே வீற்றிருக்கும் தெய்வம் துணையாக
வள்ளுவம் சிந்தையில் ஏகிடத் தேடிவரும்
வாய்ப்பு உணர்வீர் மெய்!
மண்ணில் இறைவன் எங்கும் உளமிருக்க
பொன்னும் பொருளும் வாரா உதவிக்கு
மாறாய் மனிதம் தேடிஎடு – வள்ளுவம்
கூறும் நெறியில் வாழ்!
நல்லவை ஏதெனின் யாவர்க்கும் அல்லவை
என்றும் செயாமை யான்கெட்டும் – வள்ளுவம்
சொன்னவை பின்பற்ற வாழ்வின் சுகமதுதான்
பின்னவை போற்றும் உலகு!
எண்ணம் பிறழ்செய் ஏற்றம் தருநிழல்
சொற்பம்; முடிவில் துன்பம் வரும்நேரம்
தெய்வமும் தள்ளிநிற்கும் தானுணர – வள்ளுவம்
தேறிமாற வாழ்வு நலம்!