நான் அறிந்த சிலம்பு – 172
மலர்சபா
மதுரைக் காண்டம் – 05. அடைக்கலக் காதை
கவுந்தி மாதரியிடம் ‘கண்ணகியை அழைத்துச் செல்க’ எனல்
சாரணர் உரைத்த தகுதிவாய்ந்த
அறவுரைகளைக் கேட்டு
அதை மறைகள் கூறிய உரை எனக்கொண்டு
அந்நகரத்தில் வாழ்ந்த
அருந்தவம் செய்தவர்களும்
தனக்கென வாழாமல்
பிறர்க்கென வாழும் உலக நோன்பிகளும்
தானங்கள் பலவும் செய்து வாழ்ந்து வந்த
சாயலனும் அவன் மனைவியும்
குறைகள் இன்றி இன்பம் வழங்கும்
வீடு பேறு எய்தினர்.
“தானத்தின் சிறப்பினை உணர்ந்து
அதற்கு உடன் பட்டாய் என்றால்
அடர்ந்த கூந்தலையுடைய இவளுடன்
மேலும் காலம் தாழ்த்தாது
நீ சென்றிடுவாயாக” என்று
கவுந்தியடிகள் கூறிய உரைதனில்
அகம் மகிழ்ந்து அவரைப் போற்றினள் மாதரி.
மாதரி கண்ணகியுடன் மாலையில் தன் மனைக்குச் செல்லுதல்
வளர்ந்து வருகின்ற
இளமை பொருந்திய
அழகிய மார்பையும்
மூங்கிலின் அழகைக் கொண்ட
வலிமையான தோள்களையும்,
இளைய நாணல் முளைத்தது போன்ற
வெள்ளைப் பற்களையும்
முதிர்ந்த அறிவையும் உடைய கண்ணகியோடு,
மேற்குக் கடலில் கலந்து
சூரியனின் ஒளி அடங்கும் நேரத்தில்,
கன்றுகளை எண்ணிப் பசுக்கள்
எழுப்பும் குரலொலிகள் ஒலித்திருக்க
கன்றினை நினைத்து வருகின்ற
பசுக்களின் குரல் ஒலித்திருக்க,
ஆட்டுக்குட்டியையும் கோடரியையும்
உணவு உறிகளையும்
தோளில் சுமந்து செல்லும் இடையர்களுடன்
கைவளையல்களை அணிந்து செல்லும் ஆய்ச்சியர்கள்,
கண்ணகி புதியவளாக இருந்தபோதும்
அவள் அழகைக் கண்டு வியந்து
அவளைச் சூழ்ந்து வந்தனர்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 192- 205
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
படத்துக்கு நன்றி:
கூகுள்