பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

11717174_858467787540755_455889006_n

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

8122644@N04_rதிரு. விஜய் கணேஷ் ஜெயராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.07.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “படக்கவிதைப் போட்டி – 20

  1. நான் அழிவதில்லை 
    என்று நினைப்பதே 
    உயிர்…

    ஓயாமல் 
    தேடிக் கொண்டே இருப்பது தான் 
    பசி…

    யாரென்று நீ என்று 
    நினைக்கிறாய் 

    அழியாத தீ ஒன்று 
    உனதென்று சொல்….

    விழுமியங்களின் 
    விருட்சம் -தலைவிரித்த 
    பற்களின் நற நற…

    பற பற- பரபரக்கும் 
    பரிதவிப்பு ஆளும் 
    மாமிச பிண்டம்….

    அண்டம் சுழலும் 
    ஆன்மா- நீ மற்றும் 
    நான்…

    அழியாத ஒன்றுக்குள் 
    சூன்யம்….
    ஆக சிறந்த தூக்கம் 
    மரணம்…

    ஆன்மாவுக்கும் 
    மரணத்துக்கும்
    இடைவெளி… 
    காலம்….

    காலம் எக்காலம் என்பதில் 
    இருக்கிறது…
    ஜனிப்பென்ற காடு….

    கவிஜி 

  2. அரசனுக்கு இது முறைதானோ?

    அறுசுவை(?) விருந்து முடிந்து ஓய்வெடுக்க
           அந்தப்புரம் வந்தமர்ந்த ராஜாவே
    உறுதுணைக்கு ராணியுண்டு; உங்களிடம் தப்பியே
           உயிர்பிழைக்க எண்ணுவோரின் நிலைஎன்ன?
    இறுதிவரை காத்திடுவீர் என்றுநம்பி கானகத்தில்
           இருக்கின்ற உயிரினங்கள் காத்திருக்க 
    சிறுமுயலை கொன்றுதின்று நாவால்சப் புக்கொட்டும்
           செயல்தான் முறையாமோ சொல்லேன்?

  3. தலையணை மந்திரம் ஓதி தமது 
    தலைவனை தந்திர மாக -வலைக்குள் 
    விழச்செய்யும் வித்தை வனராணிக்கும் பெண்போல் 
    பழக்கமாய் ஆனதே பார்! 

  4. பெண்மை போற்றுவோம்…

    வேட்டை யாடி வென்றுவரும்
         வனத்து வேந்தன் உளங்குளிர
    காட்டும் காதல் அரவணைப்பு
         காலம் காலமாய் உள்ளதுதான்,
    போட்டி பொறாமை இல்லாத
         பெண்மையின் உயர்வது இதுபோல
    நாட்டு மாந்தரில் வந்துவிட்டால்
         நலம்பெறும் மக்கள் நல்லுறவே…!

    -செண்பக ஜெகதீசன்…

  5. தலையணை மந்திரம் ஓதி தமது 
    தலைவனை தந்திர மாக -வலைக்குள் 
    விழச்செய்யும் வித்தை வனராணிக் கும்தான் 
    பழக்கமாய் ஆனதே பார்! 

  6. நாமிருவர் துணையிருப்போம்

    காலம் செய்த கோலமிது கடந்து வந்த பாதையிலே
    ஞாலம் செய்து விட்ட மாற்றம் கூடிக் குலவியன்று
    கோலமிட்ட வாழ்வதனை மானிடக் கூண்டு ஒன்றில்
    ஓலமிட்டுத் தொலைத்து விட்ட பொழுதுகளை இன்றும்

    மேலும் நினைத்திங்கே வாடுதலும் முறையோ……….
    சால ஆறி அமர்வதற்கு மரக் கிளையின் நிழல் இல்லை
    பால வயதினிலே எம்மைச் சுற்றி நின்ற சுற்றம் இல்லை
    ஆலம் விழதுகள் போல் எமைத் தொடர்ந்த உறவும் இல்லை

    சீலம் பெற்ற எம் வாழ்வும் சிறைப் பட்டே போயிற்று
    வேலேனவே நெஞ்சில் துன்பக் கணைகள் தைத்து
    நூலான எம் வாழ்வு இனி அதில் மகிழ்வு எங்கு ?
    காலன் அழைப்பு வரை நாமிருவர் துணையிருப்போம்…

    கலங்காதீர் கண்ணாளா! வேளை வெகு தொலைவிலில்லை
    சலனமற்ற பொழுதுகளும் சற்றே பொறுத்து விட்டால்
    சுலபமுடன் கழிந்து விடும் காலன் எமை அழைத்திடுவான்
    உலகழிந்து போனாலும் நிலைத்து நிற்கும் எம் உறவு

    புனிதா கணேசன்
    10.07.2015

  7. காதலின் கதகதப்பில்

    கலந்திட்ட ஜீவன்கள்

    ஒருவருக்கொருவர்

    ஆதரவாய் அனுசரனையாய்

    அன்பு உலகில்

    ஆனந்தமாய் சஞ்சரிக்கிறார்கள் –

    சுற்றியிருக்கும் சூழல் தனையே

    மறந்தவர்களாய் !

    அவர்தம் வாழ்விடத்தை விட்டு

    நம் வசதிக்கேற்ப கூண்டில்

    குகையில் அடைக்கிறோம் !

    அவர்களை காட்சிப் பொருளாய்

    நாம் எண்ணிக் கொள்கிறோம் ….

    உண்மையில்

    நாம் அவர்களுக்கு

    காட்சிப் பொருளாகிறோம் !

    சமயங்களில் அதீத விளையாட்டால்

    அவைதம் இரையாகவும்

    மாறிப் போகிறோம் !

    இயற்கையின் இயல்பை

    மாற்ற எத்தனித்தால்

    அழிவு நமக்கென்பதை

    நாம் உணரும் காலம் எப்போது ?

  8.                      மகிழ் வான் -கார்த்திகா  

    அடர் வனத்தின் கருமையில் 
    தொலைந்த சிற்றொளியாய்

    சப்தங்கள் நிறைந்த 
    குழலிசையில் இழையோடும் 
    சந்தங்களின் இன்னிசையாய்

    மரங்கள் தழுவிய இளம் 
    மலர்களின் அணைப்பாய் 

    தொடர் மழையால் 
    மின்னிடும் பூமியின் 
    புது வெட்கமாய்  

    செல்களுக்கு புத்துயிர் தரும் 
    மீளாக் காதலுடன் 
    வசந்தங்களில் தலையசைப்புகளில் 
    இதமாய் இனித்திருக்கட்டுமே!!

  9. வல்லமை பட வரி 20  11-7-2015
    பாலைவனச்சோலை உன்னருகு!

    பாரில் உயிர்கள் இயங்க
    பாசம் காதல் பொதுவுங்க
    மாக்கள் மனிதரும் உணர்வில்
    மாற்றமில்லாச் சம தேடல்.
    காதல் துறைமுகத்தில்  இணைகளுக்கு
    காத்திரமான நங்கூரம் – அருகாமை
    வயோதிபமும் வளரிளம் பருவமும்
    வசமாக விரும்பும் வாசமிது.

    சுதந்திர வனத்தில் இணையாமை
    தந்திரமாய் இங்கடைத்தார் மானுடர்
    கூண்டிற்குள் எம் பொழுதாயினும்
    மீண்டதுன் அருகாமை ஆறுதல்
    அடுத்த காட்சிக்கு முன்னர்
    எடுக்குமுன் அருகாமை ஓய்வு
    கொடுக்கட்டும் மகாபலம் எமக்கு
    கொடுப்பனையிது பாலைவனச்சோலை உன்னருகு.

    பா ஆக்கம் 
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    11-7-2015

  10.  ஆங்கிவன் மீறுதற்கு ஆற்றல் யார்தந்தார்?

    இன்னம் இருக்கின்றோம் எங்கும் திரிகின்றோம்
      இன்னல் வருங்காலும் என்றும் எதிர்க்கின்றோம்
    இற்றைநாள் வாழ்வில் இயற்கை தாண்டினோமா?
      எண்ணம் பிறழின்றி யாமும் புவியிருக்க

    இந்தோ வருகின்றான் கூண்டில் அடைக்கின்றான்
      கேளிப்பொரு ளாக்கி வதைகள் செய்கின்றான்
    என்ன மனிதனிவன் அத்தனை பெரியவனா?
     என்னைப் படைத்தவனே உண்மை உரைப்பாயா?

    பசிக்கு உண்போமே அல்லால் எதையும்
     புண்ணாக்கும் எண்ணம் எமக்கில்லை மானுடரே
    புண்ணியம் பாவமெலாம் எம்வழி வந்ததில்லை
     புத்தனும் காந்தியும்போல் பூமியில் வாழ்ந்திடவே

    எல்லைகள் யாமறிவோம் எண்ணிய முடித்திடுவோம்
     அல்லல்கள் ஏற்படுத்தும் மானிடம் வெல்வதற்கு
    மாற்றினை யோசித்து யானும் இருக்கின்றேன்
     மந்திரம் ஏதுமுண்டோ மாற்றுக் கருத்துமுண்டோ?

    மண்ணும் அழிகிறதே மானுடம் போக்கினிலே
     மாரியும் பொய்க்கிறதே மீறிய செயலாலே
    யாரிடம் சொன்னாலும் தானாய் அறியாமல்
     யாண்டும் வருவதில்லை இன்பம் வாழ்வினிலே!
     
    சொல்லிடுவாய் பெண்ணினமே நீயென்றும் பேரினமே
     செல்வேன் இறைவனிடம் சேதியை கொண்டுயானே
    அண்டத்தில் யாவையுமே ஆண்டவன் படைத்திட்டால்
     ஆங்கிவன் மீறுதற்கு ஆற்றல் யார்தந்தார்?

    அன்புடன்
    சுரேஜமீ

  11. கல்மனச் சுவர்ச் சிறை உலகில்
    அரியாசனப் பதவி வெறியில்
    உலர் மரங்களாய் அர்த்தமற்ற
    மனிதநேயம் மறந்த சாதிப்பித்து
    மனிதர்கூட்டம் அழிக்க
    சிம்மங்களின் இரகசிய அளவளாவல் ஆரம்பம்!
    பசுமை சூழ் அன்பு வித்தை விதைக்க
    மறந்த அரிமா சமுதாயக் குருளைகள்
    பாதம் காணும் ஆவலில்
    பசும்புற்களும் இங்கு காத்துக் கிடக்கின்றன!!
    நீலவான் நிலவுலகில்
    நில்லாப் புகழ் தேடி
    சகடக்கால் செல்வமொடு
    நிற்காமல் ஓடும் இம்மை
    அகங்கார மனிதர்கள் இரை வேண்டி
    கூற்றுவ அரிஏறு குடும்பம்
    மறுமை உலகத்தில்
    நெடிய பசியுடன் காத்திருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *