இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(156)

0

–சக்தி சக்திதாசன்.

 

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

ஒருவார இடைவெளியின் பின்னால் உங்களுடன் இந்த மடல் மூலம் இணைகிறேன். வாழ்க்கை எனும் இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குதிரைகள்தான் நாம். எம்மைக் காலம் எனும் குதிரை ஓட்டுனர் இயற்கை வகுத்த வழிகளில் இழுத்துக் கொண்டு ஓடுகிறார்.

நான் செய்ய எத்தனிக்கும் விடயங்கள் நாம் எண்ணும் போது செய்து முடிக்க முடியாமல் போய் விடுகிறது.

எது இப்போது நடைபெறாது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோமோ அது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் நிகழ்ந்து விடுகிறது.

ஆம் எம்மனைவருக்கும் தெரிந்த வாழ்க்கைக் கணக்கைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

சீட்டாட்டத்தில் ஒவ்வொருவருக்கும் சீட்டுக்கள் வீசப்படுகின்றன. யாருக்கு என்ன சீட்டு விழப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது கையில் கிடைக்கும் அந்த சீட்டுக்களை வைத்துக் கொண்டு எதிராளியை திணறப்பண்ணுவதே சீட்டாடத்தின் திறமை.

அதேபோல எமது ஒவ்வொவருக்கும் எவ்வகையான வாழ்க்கை அமையப் போகிறது என்பது எவருக்குமே முன்னால் தெரிவது இல்லை.

அப்படித் தெரிந்தால் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் தானோ என்னவோ அது மறைத்து வைக்கப்படுகிறது ?

எமக்கு கிடைப்பவைகளை வைத்து ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை, தமது எண்ணத்தின் படி, தமக்கு வசதியாக அமைத்துக் கொள்வதற்காகப் போராடுகிறார்கள்.

சிலர் அதில் வெற்றியடைகிறார்கள். பலர் அதை நோக்கிய தமது போராட்டத்தை முடிக்காமலே தமது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.

என்னடா இது ? எதற்காக சக்தி இந்தப் பீடிகை போடுகிறான் என்று எண்ணுகிறீர்களா ?

வேறொன்றுமில்லை பதினெட்டு வருடங்களின் பின்னால் முதன் முதலாக கன்சர்வேடிவ் கட்சி தமது வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆமாம், 2015 மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியீட்டிய டேவிட் கமரன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அநேக எதிர்பார்ப்புகளுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளது.

என்ன கடந்த முறையும் டேவிட் கமரன் தானே பிரதமராகவிருந்தார். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களுக்கும் இப்போது சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கும் என்ன வேறுபாடு எனும் எண்ணம் எழுவது இயற்கை… கடந்த டேவிட் கமரன் தலைமையிலான அரசு ஒரு கூட்டரசாங்கம். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட அத்தனை வரவு செலவுத் திட்டங்களும் லிபரல் கட்சியின் அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்டதினால் பல கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வரமுடியவில்லை. ஆனால் இப்போது அவர்கள் தனித்துவமாக அரசமைத்திருப்பதால், தமது கொள்கைப் பிரகடனங்களை முன்னிறுத்தி இவ்வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அவதானிகள் வேறொரு முக்கிய விடயத்தையும் முன்வைக்கிறார்கள். டேவிட் கமரன் அவர்கள் தாம் இம்முறை பிரதமரானால் இதுவே தமது கடைசிமுறை என்றும் தான் அக்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகி விடுவதாகவும் அறிவித்திருந்தார். விளைவு ! ஐந்து வருடங்களின் பின்னால் அரசமைத்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவி வெற்றிடமாகும். அதற்கு போட்டியிடுவதற்கு இப்போதைய நிதியமைச்சர் ஜார்ஜ் ஒஸ்போன் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார் என்றும், இந்த வரவு செலவுத் திட்டம் அதற்கான முதல் அடி இது என்பதே அக்கருத்தாகும்.

budget-Osborne 2015

சரி அப்படி என்ன முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது ?

# இங்கிலாந்தின் கடன் தொகையைக் குறைத்து 2020ம் ஆண்டு கணக்கில் செலவை விட வரவை அதிகரிக்கப்பண்ணும் கொள்கையில் இவ்வருடத்திற்கு 12 பில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் இங்கிலாந்து அரசால் மீதப்படுத்தப்பட வேண்டும்.

# அரச உதவி பெறும் வேலையற்ரொருக்கான உதவிப்பணம் வருடமொன்றுக்கு ஒரு இல்லத்திற்கு 23000 பவுண்ஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

# 18 – 21 வயது கொண்ட இளையோர் மேற்படிப்புக்குச் செல்லாமல் இருந்தால் அவர்களுக்கு உதவிப் பணம் வழங்கப்பட மாட்டாது. அவர்கள் வேலை ஒன்றைத் தேடிக் கொள்ள வேன்டும் இல்லையெனில் ஏதாவது ஒரு துறையில் தமது பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.

# பலர் பகுதிநேர வேலையில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இதுவரை வருடத்திற்கு 6500 பவுண்ஸ்க்கு குறைவாக ஊதியம் பெறுவோருக்கு அரச உதவி கிடைத்து வந்தது. அதை இப்போது 3500 பவுண்ஸ் ஆக குறைத்துள்ளார்கள்.

# தேசிய அளவிலான அதிகுறைந்த ஊதியம் மணியொன்றுக்கு 7 பவுண்ஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது இனி சட்டமூலமாக்கப்ப்படுகிறது.

இப்படியாக பலவழிகளில் அரசாங்கச் செலவினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்கள்.

அதே நேரம் முதல் 12000 பவுண்ஸ் வரை வரி அளவிடப்படமாட்டாது என்று அதன் அளவைக் கூட்டி அடிமட்டத் தொழிலாளர்களுக்கு தாம் உதவி புரிந்துள்ளோம் என்கிறார்கள்.

இத்திட்டங்களுக்கு சார்பாகவும், எதிராகவும் பலமுனைகளில் இருந்து வாதங்கள் கிளம்புகின்றன. பொதுவாக எடுத்துப்பார்த்தால் ஓய்வூதியம் பெறுவோரும், வாழ்வின் மத்தியதர வர்கத்தினரின் கூடுதலான ஆதரவாகவும்; மாணவர்கள், வேலையற்றோர், இளையோர் எனும் பகுதியினர் எதிராக இருப்பது போலவும் தென்படுகிறது.

அடுத்த பிரதமராக வேண்டும் எனும் இலட்சியத்தில் முதல் அடி எடுத்து வைத்துள்ள நிதியமைச்சர் ஜோர்ஜ் ஒஸ்போன் அவர்களின் கனவு நனவாகுமா? இல்லையேல் கனவாகவே கலைந்து விடுமா?

மக்கள் குரலே மகேசன் குரல் !

மீண்டும் அடுத்தவார மடலுடன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *