மனக்காடு
-பத்மநாபபுரம் அரவிந்தன்
நீ என்னை வெறுக்க வெறுக்க
நான் எங்கோ விரும்பப் படுகிறேன்
உன் வார்த்தைகள் என்னைக்
காயப்படுத்தும் போதெல்லாம்
அசரீரிபோல் எங்கிருந்தோ
நான் வாழ்த்தப்படும் ஓசை
காதுள் ஒலிக்கிறது…
உன் கண்கள் தீட்சண்யம் அற்றுபோய்
என்னை வெறுப்புடன் வெறிக்கையில்
என் மனக்கண்ணுள் தெரிகிறது
கவர்ந்திழுக்கும் இரு காந்தக் கண்கள்…
உனக்கு மிக நன்றாய்த் தெரியும்
உன்னை நான் வெறுப்பதில்லை என்பது
அதனாலேயே குறை குடமாய்க்
கூத்தாடுகிறது உன் மனது…
உனக்கு ஒருபோதும் புரிவதில்லை
ஆந்தையின் அலறலுக்குக்
காடு ஒருபோதும் அதிர்வதில்லை
காடு அசைந்து கொடுப்பதே
குயிலின் கூவலுக்குத்தான்!