மீ.விசுவநாதன்

 

asiva

சித்திரம் வரையும் விரல்களானால்
சிவனே உன்னைநான் வரைந்திருப்பேன் !
முத்திரை அறிந்த முனிகளானால்
மௌன மின்னலாய் ஒளிர்ந்திருப்பேன் !
நித்திரை வேளை நினைத்திருந்தால்
நீண்ட வேதனை அழித்திருப்பேன் !
எத்திரை போட்டு மூடியதோ
இறைவா என்மனம் திறப்பதில்லை ! 

நந்தியைப் போலே நானிருந்தால்
நன்றாய் உன்னிரு தாள்பிடிப்பேன் !
சிந்திய வார்த்தை இசையானால்
சிறந்த கவியென சேவிப்பேன் !
அந்தியில் வானச் சிவப்பானால்
அழகு நெற்றியில் கண்ணாவேன் !
எந்திர வாழ்வில் ஓடுவதால்
ஈசன் பொன்னடி அறிவதில்லை ! 

((அறுசீர் விருத்தம் : மா, விளம், காய், மா, விளம், காய்)
(13.07.2015)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *