மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
கவிஞர் காவிரிமைந்தன்
ஏழிசை ஸ்வரம் எடுத்து ஏந்தி வந்த கலைமகளும்
எம்.எஸ்.வி. எனும் மகனை இத்தரணிக்குத் தந்ததனால்
எங்களைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி. என்பதுவும்..
இனியதொரு தமிழ்ச் சொல்லே..
உலகில் எத்தனையோ இசை அமைப்பாளர்கள்.. இருப்பினும்
ஒரு மாபெரும் கவிஞனுக்கு சிலை அமைத்த பெருமை
எங்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களையே சாரும்.
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் – பம்மல் – 1993 முதல் இன்று அதிகாலை வரை
எங்கள் அமைப்போடு ஒன்றிணைந்து கண்ணதாசன் புகழ் பாடிய அன்பிற்கினியவர்..
கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை நிறுவிட முழுமையாய் தன்னை அர்ப்பணித்தவர்..
பணிவு என்பதற்கு இலக்கணம் வகுத்து சங்கீதத்துடன் எனக்கு கொஞ்சம் இங்கிதமும் தெரியும்
என்று பழகும் அனைவரையும் பண்போடு அரவணைத்து பாசம் பொழிந்து உபசரித்து
உள்ளம் திறந்து உரையாடி மகிழ்ந்த அந்த குழந்தைக்கு வயது 87ஆம்…
மண்ணிலே வந்து மக்கள் மனம் விரும்பும் இசையை தன் வாழ்நாள் எல்லாம் வழங்கி
நம் நெஞ்சில் நிறைந்த அற்புத கானங்கள் பலவற்றிற்கும் ஜீவன் தந்து..
இசையால் நம்மை ஆளும் மன்னர் இவராகி.. இன்று இம் மண்ணைவிட்டுப் பிரிந்தாரே..
எங்கள் எம்.எஸ்.வி. பக்தி.. தாய் பற்று.. உழைப்பு, எனப் பல உயர் குணங்கள்
ஒன்றெனத் திகழ்ந்த எம்.எஸ்.வி. கிருஷ்ண கானம் முதல் கேட்கும் கானங்கள்
பெரும்பாலும் உம் பெயர் சொல்லுமே.. உலகம் உள்ளவரை காற்றில் தவழ்ந்திருக்கும்
உன் பாட்டு மண்டலத்தில் இவ்வுலகம் கேட்டு மகிழ்ந்து துயில் கொள்ளுமே
வாழ் நாளெல்லாம் கவியரசர் மீது அளவிலாப் பற்று வைத்து ..
இன்று அவர் இருக்கும் இடம்தேடிச் செல்கிறீரே..
தமிழ்த் திரையின் ராஜ சிம்மாசனம் உமதென்பது
காலம் எழுதி வைத்திருக்கும் கணக்கு..
எங்கள் பிறவியில் உம்மோடு ஒன்றிணைந்து கண்ணதாசன் புகழ் பாடினோம் என்பது
நீங்கள் எமக்களித்த பெரும் பேறு.. உயிருள்ளவரை நன்றியுடன் உங்கள் புகழ் சொல்லுவோம்..
கண்ணீருடன்….