மீ. விசுவநாதன்

vallamai111-300x1501111111

விடியும் பொழுதே வினைகள் விலகும் !
முடியும் முனைப்பே முழுமைத் துடிப்பை
உணர்த்தி உயர்த்தும் ! உடனே எழுவாய் !
மணக்கிற வாழ்வுன் மதி. (141) 20.05.2015

நிலமெல்லாம் வீடானால் நெற்பயிர்க் கெங்கு
நிலமென்ற கேள்வி நிலைக்கும் – உலகில்
விவசாயம் ஓங்கினாலே வீடுயரும் ! பச்சை
நிறச்சாயம் பூமி நிறம். (142) 21.05.2015

அழுதழுது என்ன ! அகமாத்மா சுத்தம் !
பழுதேதும் வாராது ! பந்தம் அழுதாலும்
பத்துநாள் போனவுடன் பாயாசம் தேடுமே !
முத்த னறிவான் முதல். (143) 22.05.2015

“ஆண்டவன் சுவாமிகளுக்கு சதாபிஷேகம்”

பெருமாளைக் கண்டதோர் பேரின்பம் எங்கள்
குருவின் தரிசனம் கூட்டித் தருகிறது !
ஆண்டவன் என்றுமே ஆசார்யன் தோற்றமாய்
வேண்டினேன் ஆண்டவா வீடு. 21.05.2015

காக்காய் கரைந்தால் கனிவான அன்பர்கள்
ஷோக்காய் விருந்துக்கு ஜோடியாய் வாக்காய்
வருவார்கள் ! காக்கை வயிற்றுப் பசியில்
வரும்சத்தம் “நல்விருந்தே வா !” (144) 23.05.2015

“பாசம்” கவலையின் பாலுறவு ; “அன்பென்றால்”
நேசக் கரம்நீட்டும் நெஞ்சுறவு – மாசிலா
நற்”கருணை” எல்லோரும் நம்முறவாய்ப் பார்க்கின்ற
பற்றிலா ஞானப் பனி. (145) 24.05.2015

பணக்கார பந்தாவில் பாயாசம் ஊட்டும்
மணப்பந்தல் நாடகங்கள் மாயம் – குணத்தோடு
சும்மா கதைசொல்லிச் சோறுதரும் பெற்றநம்
அம்மாவி(ன்) அன்பே அமுது. (146) 25.05.2015

அவன்முங்கிக் கொண்டான் அழகிய முத்து !
தவமதுதான் ! நன்கு தனியாய் , கவனித்தால்
பூவாய் மலர்ந்து புறப்படும் வாசமாய்
ஆவாய் உனக்குள்ளே ஆழ்ந்து. (147) 26.05.2015

விறுவி ரெனவே விரைந்து நடக்கும்
எறும்பு ! தடைகளை எல்லாம் திரும்பி
எதிர்த்துக் குறியாய் இயல்பாகப் போகும் !
பதறாது சென்றால் பலன். (148) 27.05.2015

வெற்று மொழிகளில் வேதாந்தம் பேசலாம்
முற்றும் துறந்த முனிபோலச் சொற்களால்
பற்றைத் துறக்கலாம் ! பாசாங்கு நாடகங்கள்
சற்றும் உதவாச் சரக்கு. (149) 28.05.2015

குப்பையைக் கூட்டிக் குவித்த இடத்தைநாம்
எப்படியோ தூய்மை இடமாக்க செப்படி
வித்தைகள் செய்கிறோம் ! வீசிய வாசனை
மொத்தமாய்ப் போக முயல். (150) 29.05.2015

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *