நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் …

0

கவிஞர் காவிரிமைந்தன்.

thalaivanநீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் …

1970ல் வெளிவந்த தலைவன் திரைப்படத்திற்காக எம்.ஜி.ஆர். வாணிஸ்ரீ நடிக்க, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா குரல் கொடுக்க, கவிஞர் வாலியின் பாடலிது! மெல்லிசை மன்னருக்கு குருவாய் விளங்கிய எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையில் உருவான கானமிது! வண்ணக்கனவுகளில் வலம் வந்த எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களுக்கு முன்னோடியாய் கறுப்பு வெள்ளை காலத்திலும் இதுபோன்ற இன்னிசையில் பிரபலமான பாடல்கள் பல உண்டு. நினைத்தேன் வந்தாய் (காவல்காரன்) முதலாக இதோ தலைவனில், நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்… பொதுவாக நூற்றுக் கணக்கில் பாடல்கள் உண்டு டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா குரல்களில். இப்பாடல், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – பி.சுசீலா குரல்களில்.

கதையின் நாயகி கனவு காண, அக்கனவில் கதாநாயகன் வந்துசேர, இன்பம் பொங்கும் வெண்ணிலா இருவருக்கும் இடையில் வீற்றிருக்க, அன்புநதி வழிந்தோடி வருகிறது பாருங்கள். அமர்க்களமாய் இசையெழும்பி வழிகிறது, இருவர் குரலில் அமுதம் கிடைக்கிறது! பாட்டுத்தலைவன் நோக்கி பாட்டுடைத்தலைவி பல்லவி தருகின்றாள், செந்தமிழ் இன்பம் செவிகளில் மோத, வந்திடும் பாடல் நம்மை அழைப்பது நீராழி மண்டபத்திற்கு.

………………………………………………………………………………………………………………………………

காணொளி: https://www.youtube.com/watch?v=1HIfx8vuNSY

https://youtu.be/1HIfx8vuNSY

………………………………………………………………………………………………………………………………

தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க …

போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
வா வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க …

நேரளவில் இருவர் என்றிருக்க
சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க …

கீழ் திசையில் கதிர் தோன்றும் வரை
அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை …

கற்பனையில் வலம்வந்து கவிதைத்தேன்பொழிந்து காட்டும் வாலி அவர்களின் வல்லமை, இதயத்தில் என்றும் தமிழை நேசிக்க வைக்கிறது! ஆசையில் விழுந்தால் ஆனந்த மயக்கம் வரும் என்பதை இவ்வரிகள் எடுத்துச் சொல்கின்றன! இல்லற இன்பத்தின் உச்சம் தொடுகின்ற பாட்டுவரிகளை பட்டுக்கம்பளத்தில் இட்டு வைக்கிறது இசை! எடுத்துக் காட்டும் குரல்கள்!!

தலைவி காத்திருக்கிறாளாம், எப்படி பல்லவி விடை தருகிறது! காத்திருக்கும் தலைவியை ஆதரிக்கும் தலைவன் இங்கே!!
இடம் கொடுப்பதற்கே நாணம்தடை விதிக்கும் என்கிற காதல் இலக்கணத்தை எடுத்துச் சொல்லும் இனிய வரிகள் உள்ளடக்கி, தலைவனின் பாடல் வருகிறது, தங்குதடையில்லாத தமிழோடு.

பெண்:
நீராழி மண்டபத்தில் நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழி மலர் பூத்திருந்தாள்

ஆண்:
நாடாளும் மன்னவனின் நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும் போது தலை குனிந்தாள்

பெண்:
வாடையிலே வாழை இலை குனியும்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்

ஆண்:
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

பெண்:
காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

ஆண்:
பெண்ணிலவு அங்கே நாணுவதை கண்டு

பெண்:
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண்:
பெண்ணிலவு அங்கே நாணுவதை கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
காதலனும் நல்ல வேளை கண்டான்
அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்

பெண்:
நீராழி மண்டபத்தில் …

பெண்:
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க

ஆண்:
போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
வா வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க

பெண்:
நேரளவில் இருவர் என்றிருக்க

ஆண்:
சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க

பெண்:
கீழ் திசையில் கதிர் தோன்றும் வரை

ஆண்:
அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை

பெண்:
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழி மலர் பூத்திருந்தாள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *