நான் அறிந்த சிலம்பு – 175
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 06. கொலைக்களக் காதை
இடைக்குல மடந்தையர் கண்ணகிக்குக் கொடுத்த பொருள்கள்
மாதரி கூறியது போலவே,
தம் இயல்பில் இருந்து சிறிதும் குன்றாத
இடைக்குல மகளிர்,
சமைப்பதற்கு உரிய பாத்திரங்களோடு,
மாட்சிமை பொருந்திய பெரியவர்கள்
பிறர்க்குச் சொல்லாமல் கொடுப்பது போலவே,
பூக்கள் பூக்காமல் காய்க்கும் தன்மையுடைய
பலாமரத்தின் செழிப்பான திரண்ட பலாக்காய்,
வளைந்த கோடுகளை உடைய வெள்ளரிக்காய்,
மாதுளை மரத்தின் பசுங்காய்,
மாமரத்தின் கனியாம் மாங்கனி, வாழைப்பழம்,
செந்நெல், அரிசி
ஆகிய இவற்றுடன்
இடையர் குலத்துக்கு இயல்பான
பால், தயிர், நெய்
ஆகியன கொண்டுவந்து,
“திரண்ட வளையல்களை அணிந்த மங்கையே!
இவற்றைக் கொள்வாயாக!”
என்றேதான் கூறினர்.
ஐயையின் உதவியுடன் கண்ணகி அமுது ஆக்கல்
இடைக்குல மகளிர் கொண்டுவந்து தந்த
பலவகைப்பட்ட பசுமையான காய்கறிகளை
வளைந்த அரிவாள்மனையில்
தன் மென்மையான விரல்கள் சிவக்க
அரிந்து சமைத்தாள்
அப்போது அவளது அழகிய திருமுகம் வியர்த்தது;
செவ்வரிகள் கொண்டு தானாகவே சிவந்திருக்கும்
அவள் கண்கள் மேலும் சிவந்தன
அடுப்பில் வைக்கோலை வைத்துத் தீமூட்டி
அவளுக்கு உதவிய ஐயையுடன் சேர்ந்து
தன் கைப்பக்குவத் திறனையும் வெளிக்காட்டிக்
கோவலனுக்கு ஏற்ற உணவைச் சமைத்தாள்
அதன்பின் புகையால் கருத்திருந்த
அச்சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள்
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 21 – 34
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–
படத்து நன்றி: கூகுள்