மாயப் பூட்டுகள்!
-கவிஜி
மாயப் பூட்டுகளும்
மந்திரமின்றியே
திறந்து கொள்கின்றன…
மறைக்க மறைக்க,
சிரைக்கச் சிரைக்க
வளருவது போல
மறைக்க முடிவதேயில்லை…
அத்தனைப் புனைவுகளும்
கட்டுடைந்து
கசிந்து விடுகின்றன…
ரகசியக் காப்புரிமைகள்
பலபோது மீறுவதுதான்
சுகமென்றாக்கப் படுகிறது…
தொடாமலும் படாமலும்
தோல்விகள் துவளுவதாய்க்
கடன் தீர்க்கும்
கரை தேடுகிறது…
முகமூடிகள் கிழிபட
வெறும் மூத்திரக் குழிகள்
என்று சொல்லிக் கடந்து
போக முடியாத தூரமெங்கும்
ஆதாமின் நிர்வாணங்களும்
ஏவாளின் ஆப்பிள்களும்…
சுற்றிலும் தடை செய்த
பழங்கள் இருக்க,
மனதுக்குள் திறந்து கொள்ளும்
ஏதேன் தோட்டத்தில்
ஆடைகளே இல்லை…
இல்லாத வேலிகளைப் போல!