மண் மீது நாம் கண்டதெல்லாம்
நிலைப்பதில்லை என்றபோதும்
விண்ணைத்தொடும் ஆசைகள் பல
நுழைகின்றது மனதிலே…
இல்லை இல்லை போலி தான்
என்றெடுத்துச் சொல்லியும்
புரிந்துகொள்ள முயலுவதில்லை
மாயை சூழ்ந்த மனமே!
கிடைத்ததை மற்றவரோடு பகிர்ந்து
வாழும் நற்பண்பு நம்மிடத்திலே
என்றுமே இருக்க வேண்டும்
என்னருமைச் செல்வமே…
ஒற்றுமை என்ற சொல்லோடு நாம்
ஒருமித்து வாழ்ந்துவிட்டால்
பெற்றதில் பெரும் செல்வம்
அதுவே இந்தப் பூமியிலே!
பொன் சேர்த்துப் பொருள் சேர்த்துச்
சுகபோகம் அனைத்தும் சேர்த்து
நிம்மதியை இழந்து தவிப்போர்
எத்தனை இந்த மண்ணிலே?
அன்பென்ற தாரக மந்திரம் நம்
உள்ளங்களில் விதைத்துவிட்டால்
துன்பங்கள் தொடருவதில்லை நம்
அன்றாட வாழ்வுதனிலே!
எனது பெயர் துஷ்யந்தி கருப்பையா இலங்கை மலையக மண்ணையும், பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட நான் ஓர் மருந்தாளராகப் பணி புரிகின்றேன்.
சிறுவயதிலிருந்தே கட்டுரை, கவிதை, தனி இசைப்போட்டிகள் என்பவற்றில் ஆர்வமாக இருந்தேன். தமிழ் மொழித்தின போட்டிகள் சாகித்திய விழாக்கள் என்பவற்றில் கலந்துள்ளேன். அகில இலங்கை தழிழ் மொழித்தின போட்டிகளான கட்டுரை, பாவேதல் தனி என்பவற்றில் முதலாம், இரண்டாமிடங்களைப் பெற்றுள்ளேன்.
அது மட்டுமின்றி, வீரகேசரி நாளிதழின் குறுக்கெழுத்துப் போட்டிகளிலும், கட்டுரை, கவிதை, ஆக்கங்கள் என்பவற்றிலும் பங்குபற்றியுள்ளேன். சமீப காலத்திலிருந்து முகநூல் வாயிலாக பல வானொலி அலை வரிசைகளுக்கு கவிதை, கருத்துக்கள் என்பவற்றை வழங்கியுள்ளேன்.
முக்கியமாக சூரியன் எப். எம் இன் நேற்றைய காற்றுப்பக்கம், சக்கி எப்.எம் இன் மக்கள் கருத்துக்களம் என்பவற்றில் எனது படைப்புக்களைக் காணலாம்.
எழுத்துக்கள் என்றும் வலிமையானவை. நல்ல கருத்துக்கள் மக்களிவையே பகிரப்படவேண்டும். நம் சிந்தனைகள் தெளிவு பெற வேண்டும். தமிழ் மொழி என்றும் உயிர் வாழ வேண்டுமென்ற வகையில் எனது எதிர்கால எழுத்துலக இலட்சியங்களாகக் கொண்டு விழிப்புணர்வூட்டும் படைப்புக்களை தொடர்கின்றேன்.