-சி. ஜெயபாரதன், கனடா

பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடி னோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி  யானது
பங்களா தேசமாய் !
கட்டுப்பா டுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டி களுக்கு !

ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
பூரண சுதந்திரம் அசுரப்
போர்க்களம் !
பஞ்ச பாண்டவர்
பகடை ஆடுவர் சூதில்
பத்தினியைப் பணயம் வைத்து !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுச் சேலையைப்
பலர் முன்
பற்றி இழுப்பான்
துச்சாதனன் !
கண்ணன் குளிக்கும் மாதர்
புடவை
களவாடு வான் !
பூரண  சுதந்திரம் மாந்தர் புகும்
குருச்சேத்திரம் !

மசூதியை இரவில் தகர்த்து
வேரறுப்பது
பூரண சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவகாளிச் சுதந்திரம் !

பூரண சுதந்தி ரத்தில்
மதம் பிடித்த யானைகள்
மனித நேயத்தை மிதிக்கும்
சுதந்திர நாட்டில்
மதக் கோலத் திருவிழா
கும்ப மேளா !

எழுத்துச் சுதந்திரத்தில்
ஒழுக்கம், கடமை, கண்ணியம் !
விதிகளுக்கு அடங்கிய
நிதிச் சுதந்திரம் !
உரிமைத் தேர்ச்சி யில்லாத
வறுமைச் சுதந்திரம் !
கட்டவிழ்த் தோடும் முழுச் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனியாய்
நட்டு வைக்கும் சுதந்திரம் !
சுட்ட பழமா அல்லது
சுடாத பழமா
எது சுதந்திரம் ?

எட்டித் தொட முடியா
பனிச் ​சிகரத்தில்
​வேராய் மறைந் திருக்கும்
பூரண சுதந்திரம் நமக்கு​ச்
​சீரழிவுப் பாதை ​!
முழு விடுதலை பெற்றவர்
மோகன் தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலை வேண்டித்
தவம் புரிகிறார்
போலிச் சாமியார்
புதிய பூமி​க்கு​ !
​பூரண சுதந்திரம் வேண்டாம் !
ஓரளவு போதும் !

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பூரண சுதந்திரம் யாருக்கு ?

  1. கடமை,கண்ணியம்,கட்டுப்பா டுள்ள மனிதர்களுக்கு தான் சுதந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *