கவிஜி.

kavijiஎன்னால் அடங்கி இருக்க முடியவில்லை. கையில் கிடைத்த சாவி என்னைத் திறந்து கொண்டே இருந்தது. நானும் என்வீட்டுக் கதவு பூட்டுக்கு பொருத்திப் பார்த்தேன். திறக்க முடியவில்லை. பின், வீட்டுக்குள் இருந்த உள் அறைக்கான பூட்டில்பொருத்திப் பார்த்தேன். ம்ஹும், சரியாக மாட்டிக் கொள்ள வில்லை.

“அப்படி என்றால் இந்தச் சாவி யாருடையது? எதற்கு என் கையில் கிடைத்திருக்கிறது! என்னால் தூங்க முடியவில்லை.இரவுகளின் கும்மாளம் நிறமற்றுக் கிடந்த கருவிழிக்குள் கருமை அடித்தது போலவே நினைத்துக் கொண்ட நான்மெல்லவெளியே கிளம்பினேன். சாவி இருக்கிறதென்றால் கண்டிப்பாக பூட்டும் இருக்கும். இல்லாமல் போவது போல ஒரு பிரமைஇப்போது இருந்தாலும் இல்லாமல் போகாது. பூட்டு மாயப் பூட்டுகளுக்கு கூட மாயச் சாவிகள் உண்டு என்பதில் திண்ணமாய்ஒரு முறை சாவியை எடுத்துப் பார்த்துக் கொண்டேன். மாயங்களின் சாவியோ என்று மனம் மயங்கியது. ஒருவேளை இதில்திறக்கும் பூட்டுக்குப் பின் ஒரு பூதம் கூட இருக்கலாம் தேய்க்க தேய்க்கத் தங்க மழையாகக் கொட்டலாம். பணம் புரளும்ஆற்றைக் கூட நான் திறக்க போகும் பூட்டு தரலாம் என்று கற்பனையின் திறவுகோலைத் திறந்து கொண்டே நடந்தேன்.

அடுத்த வீதியில் ஒரு கதவு பூட்டப் பட்டிருக்க. மெல்ல அருகில் சென்றேன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்றேன்.நிலா மட்டுமே சாட்சி. அதைக் கூட பூட்டிதான் வைத்திருக்கிறார்கள் போல என்பது போல ஒரு புன்னகையோடு அருகில்சென்று திறக்கத் தொடங்கினேன்.

கரக். சடக் என்று சத்தம் வந்ததே தவிர பூட்டுத் திறந்தபாடில்லை. எனக்கு நெற்றியில் கோடாய் வியர்வை சூடாய் வழிந்தது.வேகமாய் எழுந்து கொண்டேன். “இந்தப் பூட்டுக்கு பின் வெறும் வீடுதான்”என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே மீண்டும்நடக்கத் தொடங்கினேன். அடுத்த வீதியில் ஒரு கதவு வெறுமனே சாத்தி இருந்தது.

ஆர்வம் உந்தித் தள்ள. மெல்ல கதவைத் தொட்டேன் அது தானாக திறந்து கொண்டது ஒரு பேய் வீட்டுக் கதவு போல.

திக்‘- என்று உணர்ந்து சுதாரித்துக் கொண்ட நான் மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தேன். அது வராண்டாவாக நீண்டு கிடக்கமெல்ல, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே உள் நோக்கி நடக்கத் தொடங்கினேன். இடது பக்கம், வலது பக்கம்என்று அறைகள் பூட்டிக் கிடந்தன எல்லாக் கதவுகளிலும் வித விதமான பூட்டுக்கள் தொங்க… எனக்கு மனம் வலுத்தது

“சரிதான், காரணம் இல்லாமல் இந்தச் சாவி நம் கையில் எப்படி இருக்கும்? இவற்றில் ஒரு பூட்டுக்கு இந்தச் சாவி சொந்தம்திறந்த பின் கண்டிப்பாக அதியசம் ஏதோ நடக்கப் போகிறது”- என்று என் மூளை யோசிக்க யோசிக்க கை வேலை செய்தது.

இது நான்காவது பூட்டு. ம்ஹும்… திறக்க வில்லை அடுத்து… அடுத்து… அடுத்து … என்று என் உடல் தெப்பலாக நனைந்துவிட்டது. பயம் இருந்தும் பரவசம் மேலோங்கிக் கொண்டே போக, இதோ… இதோ… இந்தப் பூட்டு திறக்கப் போகிறது. அதோ…அதோ… அந்தப் பூட்டு திறக்கப் போகிறது என்று மனம் ஊசலாடிக் கொண்டே இருந்ததில், தவிப்பும் பயமும் மாறி மாறிமனதை நிறைத்தன.

சோர்வு மட்டுமே மிச்சம் வெளியே வந்தேன். மனம் ஒரு முறை திரும்ப சொன்னது. மெல்லத் திரும்பினேன்.

திக்திக்திக்… மனதுக்குள் சம்மட்டிக் கொண்டு அடித்தது போல இருந்தது. நான் கடைசியாக திறந்து கொண்டு வெளியேவந்த கதவு. அதாவது முன்பு உள்ளே செல்லும் போது பூட்டாமலே இருந்த கதவு, இப்போது பூட்டிக் கிடந்தது. நான்அனிச்சையாக இரண்டடி பின்னால் நகர்ந்தேன். மனம் மாயைக்குள் சுழன்றது. இல்லை, நன்றாக ஞாபகம் இருக்கிறது.முன்பு உள்ளே போகும் போது இந்தக் கதவில் பூட்டு இல்லை. பூட்டியிருக்கவும் இல்லை. பின் எப்படி இப்போது? நான்மெல்லப் பயத்துக்குள் போனேன். திரும்பி வீட்டை நோக்கி வந்து விடத் தோன்றியது . சரி, இந்தப் பூட்டையும் திறந்துபார்த்து விடலாமா என்றும் தோன்றியது. மெல்லப் பூட்டின் அருகே சென்றேன். மனதுக்குள் பயம் தவணை முறையில்அதிகரித்துக் கொண்டேயிருக்க, சட்டெனத் திரும்பி வீடுநோக்கி ஓடி வந்தேன்.

அந்தப் பூட்டிய கதவுக்குள் பணக் கட்டுகள் பறந்து கொண்டிருந்தன. இதே போல ஒரு கதாப்பாத்திரம் நாளை இந்தச் சாவிக்குதகுந்தாற் போல ஒரு பூட்டைத் தூக்கிக் கொண்டு சுற்றுவதாக இதே கதையாசிரியன் வேறு ஒரு கதை கூட எழுதலாம்இன்றோ நாளையோ.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *