-மேகலா இராமமூர்த்தி

little girl

திரு. துளசிதாசன் எடுத்த இந்தப் படத்தைக் கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

ஒளிபடைத்த கண்களோடும் உறுதிகொண்ட நெஞ்சோடும் வீட்டின் வெளியில் நிற்கும் சிறுமியே! கதவுகள் பூட்டப்பட்டிருந்தால் என்ன? உன் மனக்கதவுகள் திறக்கட்டும்! உலகம் உய்யவும் தீமைகள் கொய்யவும் உடனே புறப்படு! என்று இவளுக்கு நாமும் தைரியம் சொல்லுவோம்!

இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைப் படித்துச் சுவைக்கும் தருணமிது!

வீட்டுக்குள் விலங்குப் பண்ணையையே சொந்தமாக்கி வைத்திருக்கும் இச்சிறுமியின் வீட்டுக்கதவும் ஓர் அடர்ந்தவனமே என்கிறார் திரு. கவிஜி.

புலி கரடி சிங்கம்
குரங்கு, மான்
காட்டு நாய், மயில்
என பல விலங்குகளிடையே
ஒய்யாரமாய் பாதுகாக்கும்
எங்கள் வசந்த சேனா
என்னை அவள்
காட்டுக்குள் அனுமதிக்க
மறுத்தாள்….
எவ்வளவு கெஞ்சியும்
அனுமதிக்காத அவள்,
கடைசியாக உதிர்ந்த
யோசனையில் ஒரு முயல்
பொம்மையை
வாங்கிக் கொண்டு வந்த
என்னை
சிரித்துக் கொண்டே
உள்ளே செல்ல அனுமதித்தாள்
முயல் பொம்மையை
தன்
கூட்டத்தில்
சேர்த்துக் கொண்ட பாங்கில்
எங்கள் வீட்டு
வாசல் கதவு
ஓர் அடர்ந்த காடாகத்தான்
தெரிந்தது….

***

’என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்று தந்தையும் தாயும் வேலைக்குப் போய்விட, பிஞ்சுக்குழந்தையோ பூட்டிய கதவின் முன்னே தவமிருக்கின்றது பாசத்திற்காக! என்று தன் கவிதை வரிகளால் நம் நெஞ்சை நெகிழ்த்தியிருக்கிறார் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர்.

இரட்டைச் சம்பளமும்
குறைவு தானாம்…!
குடும்பமாய் வாழ மட்டும்
ஒற்றைக் குழந்தை
கூட அதிகமாம் ..!

பாட்டியும் தாத்தாவும்
ஆளுக்கொரு
முதியோர் இல்லத்தில்
தனித் தனியாக…!
உறவுகள்  எதுவும்
ஒட்டாத தனிவீடிது..!
பள்ளி திரும்பியதும்
பூட்டு தான்
சிரித்து வரவேற்கும்
விரல்பிடித்து..விளையாடும்
நித்தம் என்னோடு…!

ஆறுமணி வந்துவிட்டால்
அலுத்துவிடும் பூட்டெனக்கு..
காற்றைக் கட்டிக் கொண்டு
கண்களில் தேடலோடு
அம்மா வரும்வரையில்
நானும் நிற்கிறேன்
அனாதையாய்..!

***

’புதுயுகப் பெண்ணே! ஆணாதிக்கக் கதவை உடைக்கப் புறப்படட்டும் உன் இரும்புக் கரங்கள்! கல்வியில் தேர்ச்சி கொள்! பெண்ணடிமையை மண்ணோடு புதை!’ என்று இச்சிறுமிக்கு எழுச்சியூட்டுகின்றார் திருமிகு. லட்சுமி.

எழுந்திடு பெண்ணே!
பூட்டிக் கிடக்கும்   ஆணாதிக்கக் கதவை
உடைத்துவிடு பெண்ணே!
[…]
கல்லாமை
இருட்டை விரட்டிவிடு!
பூட்டிய ஊழல் கதவுகள் திறக்க வயதில்லையடி!
பூட்டிய கதவுகள் திறக்க கல்விச்சாலை செல்ல
என்னடி தயக்கம்!
[…]
பெண்ணடிமை
கொள்ளவே சுனாமியாய்
பெருங்கூட்ட சமுதாயம்  மதத்தின் பெயரால் 
சடங்கு எமன் காலைச் சுற்றுது!
கழற்றி நீயும் எறிந்திடுவாய்!
பெண் சிங்கமென சீறி புறப்படுவாய்!
பெண்கல்வி வேண்டி இங்கு பிழைப்பதனால்
உணர்நதிங்கு நீயும் கற்றிடுவாய்!
[…]
உடையில் எளிமை உள்ளத்து உறுதி
அவையஞ்சா தூய பேச்சு  ஊர் போற்றும் கற்புத்திறன்
தெளிவான சிந்தனை நாவினில் அடக்கம்
இல்லறப்பெருமை  முதியோர் நலம் காக்க
அதிகப்படிப்பு அகந்தையின்றி
வெல்ல புறப்படுவாய்!
அகிலம் ஆள வென்றிடுவாய்!
கட்டிய கைகளுக்குள் உலகம்
உனதாகட்டும் என்றே முழங்கி
விவேகானந்தர் சிந்தைனையுடன்
வாழ்ந்திடுவாய்!

***

’தெய்வத்தின் வரவுக்கே கருப்புக்கொடி காட்டும் இஃது வீடன்று; சுடுகாடுதான்!’ என்று தன் உள்ளக்கொதிப்பை வார்த்தைகளில் உதிர்த்திருக்கின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

கதவில் தொங்குவது பூட்டல்ல
இரக்கம் அறியா
அரக்கத்தின் மனசு 

தெய்வத்தின் வரவுக்கே
கருப்புக்கொடிக் காட்டுவதால்
கோவில் அல்ல  இந்த வீடு
பிசாசுகள் வாழும் சுடுகாடு 

உலகில் மனிதம்
தொலைந்துவிட்டது
என்பதை அத்தாட்சிப் படுத்தக்
குத்தப்பட்ட முத்திரை

***

தெய்வத்தின் மீதே நம்பிக்கையில்லாமல் பூட்டிவைக்கும் மானிடக்கூட்டம், இங்கே கும்பிடத்தகுந்த குழந்தையை வெளியில் வைத்துப் பூட்டியிருப்பது அவலமன்றோ? என்று குமுறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

கும்பிடும் தெய்வம் உள்ளிருக்கக் 
கோவிலைப் பூட்டி வைப்பதென
நம்பிடா மனிதரின் நாணயமாய்
நாட்டில் நடக்கும் அவலம்போல்,
தம்பதி சேர்ந்து பூட்டிவீட்டை
தங்கள் பணிக்குச் சென்றபின்னே
கும்பிடத் தகுந்த குழந்தைவெளியே
காத்திடும் கொடுமையும் மாறாதோ

***

’நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு அகிலத்தில் வாழ்ந்திடு மிடுக்காக!’ என இக்குழந்தைக்கு இன்னுரை பகர்கின்றார் திருமிகு. தமிழ்முகில்.

…அன்னையும் தந்தையும்
வேலைக்கு
சென்றிருக்க
விளையாடி
ஓய்ந்ததும்
வீட்டிற்கு
ஓடி வந்தாயோ ?
பூட்டிக்
கிடக்கும்
வீட்டு
வாசலிலிருந்தபடியே
உன்
வயது பிள்ளைகளின்
விளையாட்டை
கண்டு
இரசிக்கிறாயோ
?
[…]
நிமிர்ந்த
நடையும்
நேர்கொண்ட
பார்வையும்
எவர்க்கும்
அஞ்சாத தன்மையும்
குறையா
ஞானமும்
உன்னை
பாரினில் உயர்த்திடும் !
கள்ளம்
கபடமறியா
கிள்ளை
உள்ளம் தனையே
காலமெலாம்
பெரும் செல்வமென
காத்துக்
கொண்டால்
நல்வாழ்வும்
தானிங்கு வசப்படும் !

***

’தனித்து விடப்படும் பிள்ளைகள் பாதை மாறும் அபாயம் இருப்பதால் அவர்களைக் கண்ணெனக் காத்தல் பெற்றோர் கடன்’ என்று அன்பாக எச்சரிக்கின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

…நற்றவம் கொண்டு பெற்ற பிள்ளைகள்
பெற்றவர் வீடேகும் வரை, கல்வி
கற்ற பின் வேறு கலைகளும்
பெற்றிடும் ஒழுங்கு அமைத்தல் வேண்டும்.

வாசலில் காத்திருத்தல், வீதியில் திரிதல்,
வாசம் இழக்கும், பாழாக்கும் வாழ்வை.
வெறுமை மனதில் சாத்தான் குடியேறும்
சிறுமை அழித்தால் சிறப்புற உயரலாம்!

பெறுமதி நேரம் பயனாகும் முறையை
வெகுமதியாய்ப் பெற்றோர் பிள்ளைக்குக் கையளித்தால்
தகுதி வரும் தரமாய் வாழ!
நகுதலற்ற வாழ்வை நானிலம் போற்றும்!

***

கண்ணே! நீ துள்ளினால் புள்ளிமான்கள் தோற்கும்; உன் கொஞ்சுமொழிகளின் அழகில் தத்தைகளும் பொறாமை கொள்ளும்; பூட்டிய கதவின் முன்னே வாட்டமுடன் நிற்பதேனோ? என்று கேள்வி எழுப்புகிறார் திருமிகு. கார்த்திகா.

துள்ளியோடும் மான் குட்டிகள்
தோற்கும் நீ நடந்தாலே
[…]
உன்
கனிமொழி சொல்லில்
கற்கண்டுகள் ஊர்வலமாய்
நீ கொஞ்சிப் பேசும்
அழகில் பொறாமை கொண்டு
மென் மேலும் சிவக்குமடி
கிளிகளின் மூக்கு
நீ பறிக்க வேண்டுமென
தினம் மலரும் பூக்களின்
புவி வருகையை மறந்துவிட்டு
பூட்டிய கதவின் முன்னே
கை கட்டி நிற்பதேனடா!!

***

’தாத்தா வைத்த மரமில்லை; தந்தை (அதைவெட்டிப்) போட்ட கதவுதான் இருக்கு; வீட்டில் காவலுக்குக் கிழவியும் நாயும் இல்லை; பூட்டே காவலாயிருக்கு!’ என்று அன்றைய இன்றைய காலமாற்றத்தைக் கவினுறக் காட்சிப்படுத்தியுள்ளார் திரு(மிகு?). மணிச்சிரல்.

தாத்தாவின் மரம் இல்லை
தந்தையின் கதவு இருக்கு
பாவாடை சட்டை இல்லை
மிடியும் ஜீன்ஸும் இருக்கு
கிழவியும் நாயும் இல்லை
கதவுக்கு பூட்டு இருக்கு
உறவும் உதவியும் இல்லை
காலுக்கும்  கற்கள் இருக்கு
சிரித்துபேச விசயங்கள் இருக்கு
வீட்டுக்கு வொரேவொரு பிள்ளை

***

இறுகக் கட்டிய உன் இரும்புக் கைகளின் உறுதி, உனைத் தாக்கவரும் சிறுமைகளைப் பொடிப்பொடியாக்கட்டும்! என்று இச்சிறுமிக்கு வீரமூட்டுகின்றார் திருமிகு. புனிதா கணேசன்.

இறுகக் கட்டிய கைகளுள் இரும்பென இருந்திடும்
உறுதியை உன் இரு விழிகளின் மொழிகள் கூறிவிடும்
வறுமையின் வாட்டங்கள் செற்றிடும் வன்மொழி
ஒறுத்திட்டே அவை வாழ்வினில் வளம் சேர்க்கும் !
மாறுதல் நாடியே மன மாளிகைக் கதவுகள் தன்னிலே
தேறுதல் கூறி நிற்கும் இரு கைகளின் சேர்க்கையில்
வீறுடன் வீரமாய்த் தன்மானமும் தவழ்ந்திருக்கும் !
பேறுகள் அடைந்திட பெருமைகள் பொங்கிட
ஆறுதல் கொண்டிடுவாய், எந்தப் பூட்டையும்
மறுத்திடு, மறவராய் உடைத்தெறி விலங்கு எதற்கு?
சிறுமைகள் சொல்லி நிந்தனை செய்திடும் மாந்தர்கள்
நிறுத்துவர் தம் நீசமாம் செய்கைகள் நின் பெயர் கேட்டதுமே!

***

வந்தனைக்குரிய சிந்தனைகளை வார்த்திருக்கும் கவிஞர்குழாமுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திக்கப் புறப்படுவோம் இனி!

’வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் எனும் விந்தை மனிதர் தலைகுனியப் புறப்பட்டுவிட்ட வீரச்சிறுமி ஒருத்தியை நமக்கு அடையாளம் காட்டி, இவள் புராண காலத்துப் பதுமையன்று; பாரதி கண்டெடுத்த புதுமை!’ என்று எக்காளமிடும் கவிதையொன்று எனக்குள் அதிர்வை ஏற்படுத்தியது.

பூட்டுகளுக்குள் புதைந்துவிட
நான்
புராண காலத்து பெண் அல்ல
பூமியைப் புரட்டிப்போடும்
புதுயுகத்தின் அடையாளம்!

நிலம் பார்த்து நடந்து
நித்திரையைத் துறந்து
சுயத்தை இழக்கும்
சோகச் சுவடல்ல நான்!

வானில் வலை வீசி
வரலாற்றை உருவாக்கும்
அடுத்தத் தலைமுறையின்
ஆரம்பம்!

வீட்டிற்குள் மாந்தரைப்
பூட்டிவைத்த விந்தை மனிதரை
புறக்கணித்த பாரதிப்  படையின்
புது வாள்!

அன்று
உள்ளே வைத்துப் பூட்டியது
எங்களை உறைய வைக்க
இன்று
வெளியே பூட்டுவது
எங்கள் இறகுகளை விரிக்க!

இறகு விரித்து
இன்னல் துடைப்போம்
பூட்டுகள் திறந்து
புது வழி அமைப்போம்!

வீரவுணர்ச்சியைப் பெண்ணுக்குள் விதைக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவிக்கின்றேன்.

அடுத்து என் கவனத்தைக் கவர்ந்தது, குடும்பத்தைக் காப்பாற்றாமல் மதுக்கடை முதலாளிகளைக் காப்பாற்றிவரும் குடியன் ஒருவனின் பிஞ்சுமகள், குடியை விட்டுவிடுமாறு தன் அன்புத் தந்தையைக் கெஞ்சுவதாய் எழுதப்பட்ட இரும்பு நெஞ்சையும் இளகச் செய்யும் ஒரு கவிதை!

என்னதான் முறைச்சாலும்
எப்பிடித்தான் ஏய்ச்சாலும்
பூட்டைநான் திறக்கமாட்டேன்
வீட்டுக்குள்ள வுடமாட்டேன்!
ஒருகாலை முன்மறிச்சு
கையிரண்டும் கட்டிக்கிட்டு
தீர்மானமாப் பார்த்தபடி
[…]
புதுத்துணியைக்
கேக்கவில்லை
புத்தகமும் கேக்கவில்லை
இதுவெதுவும் எனக்குவேணாம்
மதுவைநீ வுடமாட்டியா?
அவுந்தகைலி ஒருகையுல
துண்டுபீடி ஒதட்டுமேல
தள்ளாடி நிக்குறியே
வெக்கமில்லை ஒனக்கு?
நான்வளந்து ஆளாகி
நாலுகாசு சம்பாரிச்சு
ஒன்னியநான் காப்பாத்துவேன்
அதுவரைக்கும் நிறுத்துநைனா!
[…]
சேத்தபணம் அத்தினியும்
நாத்தக்கள்ளு வாங்கிப்போவ
ஆத்தா மனம்பதைச்சு
அளுவறதப் பாருநைனா!
[…]
பாழாப்போன
குடியைவுட்டு
வாழுறதுக்கு வழியைப்பாரு
கூழுகஞ்சி குடிச்சாவுது
குடும்பத்தக் காப்பாத்து!
சொல்லுறதச் சொல்லிப்புட்டேன்
மீதியெல்லாம் ஒம்பாடு
நல்லவனா நீதிருந்தி
எங்கூட இருக்கணும்ப்பா!
பதிலொண்ணு தெரியாம
பூட்டைநான் தொறக்கமாட்டேன்
எம்மேல அன்புவைச்சு
எனக்காகத் திருந்துநைனா!

குடியர்களுக்கு அறிவுகொளுத்தும் நோக்கில் திரு. வி.எஸ்.கே.யால் எழுதப்பட்ட இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

***

போட்டியில் ஆர்வத்துடன் தொடர்ந்து பங்களிப்பு செய்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் என் நனிநன்றி!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 26-இன் முடிவுகள்

  1. பாராட்டுக்குரியதாகப் பரிவுடன் தேர்ந்தெடுத்து, புலமைமிகு வரிகளால் பெருமைப்படுத்தியப் பண்பான நல்லிதயத்துக்கு என் பணிவன்பான வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *