நூலென்னும் வித்து..
நாகினி
படிக்க வாங்கும் நூல்களிலே
மடிக்க இயலா கருத்துண்டேல்
எடுத்த நூலைத் தரையதுவே
உடுத்த கீழே வைப்போமோ!
கருத்து உரைக்கும் புத்தகமே
பருத்து இருந்தால் பெருமையோ
எழுத்தால் கண்ணைத் திறந்திடவே
இழுத்தால் நலமாம் எழுதுகோல்!
எண்ணக் கனவு நினைவாக
வண்ணக் கதைகள் உருவாக்கும்
கண்ணாய் விளங்கும் நூலெங்கும்
பண்ணாய் கருத்து உயிராக்கிடுக!
உதித்த கருத்து மெய்யுடனே
பதித்த சொல்லால் உரமேற்றி
நடித்த பொய்மை கதையெல்லாம்
கடித்த நூலதுவே உரமன்றோ!
கொடுக்கும் அறிவு அனுபவமும்
எடுக்கும் நூலில் இருந்தால்தான்
பனுவல் நல்ல வித்தாகும்
அனுபவக் கல்வி சொத்தாகும்!
.. நாகினி