-மலர் சபா

மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

கோவலன் கண்ணகியை நோக்கிக் கழிந்ததற்கு இரங்கிக் கூறுதல்

இனிதே உண்டு முடித்தபின்
மிகச்சிறந்த பெருமை வாய்க்கப்பெற்ற கோவலனுக்கு,
வெற்றிலையோடு பாக்கினையும் தந்த
கருமையான குளிர்ந்த கூந்தலையுடைய கண்ணகியை
‘வருக’ என்று கூறி அணைத்து அருகில் அமர்த்தி…       kovalan kannagi new

“பெரிய கற்கள் நிறைந்த வழியதனைக்
கடக்கும் வண்ணம்
சிறிதளவேனும் வலிமை
நின் பாதங்கள் எங்ஙனம் பெற்றனவோ…
கொடிய வெம்மையான மறவர் நிறைந்த
ஆபத்தான வழியில் வந்ததை எண்ணி
நம் பெற்றோர் எங்ஙனம் வருந்தினரோ…
யான் கண்டது கனவு என்னும் மாயையோ…
அல்லது இது நனவாயின்
யான் முன் செய்த தீவினையின் பயனோ…

இப்போது எம் உள்ளம்
கலக்கம் உற்று இருப்பதால்
இதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

நான் முன்பு பயனில்லாத சொல் பேசுபவருடனும்
புதிய பரத்தையரை நாடும் காமுகரோடும்
கூடித் திரிந்தேன்;

சிறுமையானவற்றைப் பேசும் கயவர்கூட
இழிந்து பேசும் நிலைக்கு ஆளானேன்.
இங்ஙனம் சிறுபுத்தியுடன்
அறவோர் சொல் கேளாது
நல்லன செய்ய மறந்து
நல்லொழுக்கத்தைக் கைவிட்டேன்.

அது மட்டுமல்லாமல்
என் தாய் தந்தையர்க்குச் செய்ய வேண்டிய
பணிவிடையும் செய்யத் தவறினேன்;
இளமையாய் இருந்தும் மூதறிவு பெற்ற
உனக்கும் தீங்கு செய்தேன்.

எனினும் நான் செய்த எதையும் ஆராய்ந்து பார்க்காமல்
‘மதுரைக்குப் புறப்படு’ என்றதும் புறப்பட்டுவிட்டாயே!
மறுப்பேதும் கூறவில்லையே!
எனக்காக என்ன அரிய காரியம் செய்துவிட்டாய்?!”
என்று கோவலன் மனம் இரங்கிக் கூறினான்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 54 – 70

http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *