குழந்தையும் பூவும்!
-மீ.விசுவநாதன்
காலையில் சோலையில்
தள்ளுவண்டிக்குள்
குழந்தையை வைத்துத்
தள்ளியபடி நான்…
மரக்கிளையில்
குருவி , குயில், புறா,
காக்கை , மைனா…இன்னும்
மரத்தடியில்
இரண்டு இளசுகள்…
கொஞ்சம் தள்ளி
நல்ல கிழடுகள்…
ஓடியும், நடந்தும் வரும்
நடுவயது ஆணும், பெண்ணும்…
பேசியும், காதலித்தும்,
சண்டைக்குரலுடனும்…
பசுவின் பின்னால்
காளை…பசு முறைக்கிறது!
பன்னீர்ப் பூக்களும், சாமந்தியும்,
செம்பருத்தியும், பலவண்ண
ரோஜாவும், அரளிகளும்
குல்லென மலர்ந்து சிரிக்கிறது…
தள்ளுவண்டிக்குள்
குழந்தையும் கள்ளமின்றிச்
சிரிக்கிறது…
இயற்கையில்
பூவுக்கும், குழந்தைக்கும்
மட்டுமே
கவலையின்றிச்
சிரிக்க முடிகிறது…!