மீ.விசுவநாதன்

எங்கோ கால்கள் போகிறது – நன்மை
ஏதோ செய்ய நடக்கிறது!
எங்கும் யாரும் ஒன்றாக – அன்பில்
இசைந்து மகிழக் கடக்கிறது!     (எங்கோ கால்கள்)

ரயிலில் பயணம் செய்கின்றேன் – மனித
ரசனை அறிய முயல்கின்றேன்!
வெயிலில் களைத்து நிற்கின்றேன் – ஒரு
வேம்பு நிழலைக் கற்கின்றேன்!  (எங்கோ கால்கள்)

பிச்சை எடுப்போன் வீதியிலே – கைப்
பிள்ளைப் பசியை விற்கின்றான்!
கொச்சை மொழியில் அவனையுமே – பணக்
கொழுப்பில் பேசுவோன் இருக்கின்றான்! (எங்கோ கால்கள்)

ஏட்டுக் கல்வி இளைஞரென – பள்ளி
ஏலம் விடுவதில் வருந்துகிறேன்!
நாட்டுச் செல்வம் அவர்களென – அவர்
நன்றாய் அறிந்தால் திருந்துகிறேன்!  (எங்கோ கால்கள்)

காவிரி, பொருநை நதிகளெலாம் – மனிதக்
கழிவால் அழிவதில் அழுகின்றேன்!
ஊர்வரி போடும் அரசாங்கம் – ஊழல்
ஊற்றாய்ப் போனதில் கொதிக்கின்றேன்!  (எங்கோ கால்கள்)

கடவுள், மதத்தின் பெயராலே – மக்கள்
கவலை கொள்வதில் துடிக்கின்றேன்!
திடமாய்த் தேசம் முன்னேற – வரும்
தெளிந்த தலைவனை மதிக்கின்றேன்!  (எங்கோ கால்கள்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *