விடியும்பொழுது
-விஜயகுமார் வேல்முருகன்
இரவின் கருமை மெல்லக்
கரைந்து கொண்டிருந்தது
கிழக்கில் எழும் செங்கதிர்களால்…
கரைகின்ற இருளிலும்
கரைக்கின்ற ஒளியிலும்
கரைகின்றன காக்கை கூட்டங்கள்
பாறையின் மீது
பாதைகள் கண்டு
பாதங்கள் பதித்தன எறும்புகள்
பாவையர் வளை கைகள்
பாவிசைக்கும் ஒலியோடு
பார்த்து இட்டனர் கோலங்கள்
கோலத்தின் அழகைக் காணக்
கோளமாய் ஆதவன் உதிக்கவே
கோவையாய்ப் பொழுதும் விடிந்தது!