நதியைப் பார்த்தேன்
கரையில் நின்று
முதலில் பயமாக இருந்தது…
குனிந்து தொட்டுத் தலையில்
தெளித்துக் கொண்டேன்…
மெல்ல வலது காலை
நனைத்து
இடது கால் விரல்களை
ஈரமாக்கி உடனே
நீருக்குள் நடந்தேன்…
மேலே குளிர்
மெல்லிய சூடு
கழுத்துக்குக் கீழே…
மூன்று முங்கு போட்டேன்!
இன்று…
மண்டபத்தின் மேலிருந்து
நீரில் குதித்து நீந்தினேன்
சுகம் பரம சுகம்…!
கற்றுத்தரும் குருவிடமும்
முதல் பயம் பாசமாகிப்
பக்தியாகி வித்தை முழுதும்
நன்றாகக் கசடற
உள்ளே இறங்க வைக்கிறார்!
அப்புறம்…
அப்புறம் என்ன அப்புறம்
எப்போதும் என் நினைவில்
அவர்
ஒரு நதியைப் போல!
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.