— எஸ். வி. நாராயணன்.

Krishnan with butter

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போலே, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளையான ஆண்டாள், யசோதை இளஞ் சிங்கம் என்றும், கார்முகில் போன்ற மேனியை உடையவன் என்றும், செந்தாமரை போன்ற கண்களை உடையவன் என்றும், எதிரிகளுக்கு சூரியன் போலவும், அன்புடையார்க்கு சந்திரன் போலவும் உள்ள ‘கதிர் மதியம் போல் முகத்தான்’ என்றும் கண்ணனை வர்ணிக்கிறாள். உவகையுடன் வர்ணிக்கிறாள். ஆயர்குல மணி விளக்கு என்கிறாள். தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரன் என்கிறாள். இப்படி யெல்லாம் ஆழ்வார்கள் அந்த தெய்வக்குழந்தையை எண்ணி எண்ணி, மனம் உருகிப் பாடுகிறார்கள்.

மாயக்கண்ணனை தொட்டிலில் கிடத்தினால் காலால் உதைத்து அதைச்சிதைக்கிறான். மிருதுவான கால்கள்நோகுமேயென்று இடுப்பில்துக்கிவைத்துக் கொஞ்சினால், நழுவிஇடுப்பை முறிக்கிறான்.

‘கிடக்கில், தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில், மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில், உதரத்தே பாய்ந்திடும்
மீடுக்கிலாமையால் நான் மெலிந்தேன்
நங்காய்’.
என்று யசோதை கூறுகிறாளாம். இந்த கிருஷ்ண ஜயந்தியை பெரியாழ்வார் போல் அனுபவித்தவர் எவரும் இலர்.

தன்னைக் கொல்வதற்காகவே பிறந்துள்ள தேவகியின் எட்டாவது மகன் கண்ணன் ஆயர்பாடியிலே வளர்ந்து வருவதை அறிந்த கம்சன், கிருஷ்ணனை தீர்த்துக் கட்ட பலவிதமான, பலரூபம் தரிக்கக்கூடிய அசுரர்களை ஏவி விடுகிறான். கண்ணன் இவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டுகிறான். முதலில் பூதனை என்ற அரக்கி வருகிறாள். பின்னர் சகடாசுரன், காலியாசுரன் ஆகியோரை கம்சன் ஏவி விடுகிறான்.

பால்மணம் மாறா பச்சைக் குழந்தையாக இருந்த கண்ணன் பூதனையைக் கொன்ற விதத்தை ஆழ்வார்கள் பலவிதமாக அனுபவிக்கிறார்கள். இராமாயணத்திலே சூர்ப்பனகை தன் கோர வடிவை மறைத்து அழகான கன்னிப்பெண் போல இராமனைக் காண வந்தாள். பூதனையும் அதே ரீதியிலே ஒரு அழகிய பெண்ணுருவம் பூண்டாள். இடுப்பில் ஒட்டியாணமும், கால்களில் சிலம்பும் ஒலிக்க அடிமேல் அடிவைத்து நந்தகோபன் மனைக்குள் புகுந்து, ‘ஆஹா! எவ்வளவு அழகான குழந்தை’ எனக்கூறிக் கொண்டு கண்ணனை மடியிடை இருத்திக் கொண்டாள். யசோதை அருகில் இல்லாத தருணம் பார்த்து, அந்த விஷநங்கை குழந்தைக்கு பால் கொடுக்கத் துவங்கினாள். முலைக் காம்பில் கொடியவிஷத்தையல்லவோ தடவிவைத்திருந்தாள்.

குழந்தை சுவைக்க ஆரம்பித்தவுடன் இறந்துவிடும் என்று எண்ணினாள் அவள். இந்த மாயம் மாமாயனாகிய கண்ணனுக்கா தெரியாது? கிருஷ்ணன் பாலை உறிஞ்சுவது போல அவளுடைய உயிரையே உறிஞ்சினான். அழகான பெண் உருவில் வந்த அவள் அரக்க வடிவு எய்தி பெரும் அலறலுடன், மலை வீழ்ந்தது போல, நிலத்தில் வீழ்ந்தாள்.

‘பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்துண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை’

என்று பாடும் பெரியாழ்வார், பூதனையைக் கொன்றது இவனுக்கு ஒரு பெரிய விஷயமில்லை. இரணியன் மார்பையே முன்பு, நரசிம்ம அவதாரத்தின்போது, கீண்டவன் அல்லவா இவன் எனப் போற்றுகிறார்.

‘கண்ணன் கழலிணை – நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்- திண்ணம் நாரணமே’

என்பார் வேதம் தமிழ் செய்த மாறனாகிய சுவாமி நம்மாழ்வார். அவர் சொல்கிறார்: “மாய்த்தல் எண்ணி வாய்முலை தந்த மாயப்பேய் உயிர் மாய்த்த ஆயமாயனே! என்கிறார். ‘ஒருபேய்ச்சிவிட நஞ்சு முலை சுவைத்த மிகுஞானச் சிறுகுழவி’ என்று போற்றுகிறார்.

குழந்தை கண்ணனின் இந்த லீலைகளை நினைவுகூறும் ஆழ்வார்கள், ஆச்சர்யமான வகையிலே யசோதையின் ஏற்றத்தை குறிப்பிடுகிறார்கள்.

பொய்கை ஆழ்வார் பாடுகிறார் …
“முகில்வண்ணா! நின்னுருகிப் பேய்த்தாய் முலைதந்தாள்
பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆய்த்தாய்
முலைதந்தவாறு “

இது எப்படி? தீய புத்திக் கஞ்சனாலே ஏவப்பட்ட பேய்ச்சி, தாய்போல உன்னிடம் உருக்கம் காட்டி தன் நச்சுமுலையைத் தந்தாள். அவ்விடத்திலிருந்து அவள் பேர மாட்டாமல் மாண்டாள். ‘பேரமர்க்கண்’-பெரிய யுத்தபூமி போல அவ்விடம் தோற்றிற்று. அதைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் (அந்த பேய்ச்சிபட்டபாடு நாமும் படுவோமோ என்ற பயம் ஏதுமின்றி) குழந்தையை ஆதரவுடன் எடுத்து யசோதை முலையூட்டினாள். விஷப்பாலுக்கு தன் அன்பு கலந்தபால் மாற்றாக அமையுமோ என்ற உள்ளன்புடன் யசோதை நடந்துகொண்டாள் என்பர் பெரியோர்.

இந்தக் கருத்தை பூதத்தாழ்வாரும் வெளியிட்டுப் பூரித்துப் போகிறார். பேய்ச்சியின் ஆவி போனதை பார்த்தும்கூட யசோதை பரிவால் உனக்குப் பாலூட்டினாளே, அந்த அன்புக்கு நீ அளந்து கொண்ட, திரிவிக்ரமனாய் வந்து அளந்து கொண்ட, இந்தப் பெரிய உலகம் ஈடாகுமா என்று வியந்து பேசுகிறார் பூதத்தாழ்வார்.

பூதனையின் உயிர்போனதைக் கண்டு,
“அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி
உனக்கிரங்கி,
நின்றுமுலை தந்த இந்நீர்மைக்கு,
அன்று வரன் முறையால் நீயனந்த மாகடல் சூழ்ஞாலம்
பெருமுறையால் எய்துமோபேர்த்து?”

பேயாழ்வாரும்,
“பேய்ச்சி பாலுண்ட பெருமானைப்
பேர்ந்தெடுத்து ஆய்ச்சிமுலை கொடுத்தாள்
அஞ்சாதே”
என்பார்.

அந்த யசோதை ஆய்ச்சியின் தூய அன்புக்கு ஈடுண்டோ?

பெரியாழ்வாரும் இதில் ஈடுபட்டு யசோதையாக தம்மை பாவித்துக்கொண்டு பாடுகிறார் :
“பேய்ச்சி முலையுண்ணக் கண்டு
பின்னையும் நில்லாதென் நெஞ்சம்,
ஆய்ச்சியர் எல்லாருங்கடி அழைக்கவும்
நான்முலை தந்தேன்”
என்கிறார்.

திருச்சந்தவிருத்தத்திலே திருமழிசை ஆழ்வார் மிக அழகாகப் பாடுகிறார்.

“ஆய்ச்சி பாவை உண்டு. மண்ணை உண்டு. வெண்ணை உண்டு. பின் பேய்ச்சியாவை உண்டு” என்றும், ‘வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்’ என்றும், “நீ ஆதிதேவனன்றோ என்றும் பாடுகிறார்.
“பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னை
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் உண்ட
எம்மானைக் கண்டுகொண்டேன்” என்று கூறுகிறார் திருமங்கை மன்னன்.

[தொடரும் …]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *