படக்கவிதைப் போட்டி – 31
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
சாந்தி விஜய் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.09.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
குழந்தைகள்
செய்து காட்டும்
பெரியவர்கள்
குழந்தைகளாகவே
இருக்கிறார்கள்….
யாருமில்லாத
மேடை நாடகத்தில்….
கவிஜி
அதி ரூப அழகுதான்
ஆசை உள்ள பாப்பா நான்!
இன்பந் தரும் உலகிலே
இன்னிசையாய் அவதரித்தேன்!
ஈன்ற தந்தை தாயை வணங்கி
உலகம் மெச்ச வாழுவேன்!
ஊருக்கொரு பள்ளி கட்டியே
என் குலம் தழைக்கவே
ஏணியாய் நான் இருப்பேன்!
ஐம்புலனை அடக்கியே
ஒருமைப்பட்ட உலகந்தனை
ஓங்கி வளர செய்குவேன்!
ஔவை பாட்டி சொன்னதை
அஃதென பற்றி பாடிடுவேன்!
மகிழ்ச்சி
பாப்பா பாட்டு பாடிய
வாயால் ஆபாச கானம்
கேட்க முடியலையே!
எந்தன் மழலைப் பேச்சு
தொல்லை உலகில்
அருகித்தான் போய்விட்டதே!
தொல்லைக்காட்சி வருகையினால்
வயதுக்கு மீறிய பேச்சுக்கள்
கேட்ட காதுகள் இரண்டும்தான்
தொல்லைக்காட்சி வேண்டாம்
என்று சொன்னதுவே!
இலஞ்ச முகமூடி மனிதர்கள்
அன்பைத் தொலைத்து
அலைந்தனரே!
பணத்தை அதிகம் தேடித்தான்
சுயநலத்தை வளர்த்தனரே!
பொல்லா இன்னாச் சொல் கேட்டு
நில்லா உலகில் வாழத்தான்
கோட்டைகள் ஆயிரம் கட்டினரே!
மனிதநேயம் காத்திட்ட
மனிதராக வாழ்ந்திட்டால்
என்றும் நிம்மதி நமக்குத்தான்
இதயம் தொட்ட மகிழ்ச்சிதான்!
கபடமற்ற குழந்தை முகத்தில்
கபடமுள்ள மனிதர்களின் பாவனை
வரவழைப்பதிலிருந்து
நாளைய சமுதாயத்தின் வேர்களுக்கு
விஷம் பாய்ச்சி வியக்கிறோம்
நாடகமாய் .
வேண்டாம் விபரீத நாடகம்…
தேடி ஓடிப் பொருள்சேர்க்கும்
தந்தை தாயும் பெருமைக்காக
ஆட விட்டார் அரங்கமதில்
ஆடை அணிகலன் பூட்டியேதான்
வாடும் பயிர்போல் வாடவிட்டார்
விருப்ப மில்லா மழலைகளை,
நாடும் கல்வி அவர்களித்து
நாளை உலகுக் களிப்பீரே…!
-செண்பக ஜெகதீசன்…
அம்மா என்ற சொல்லாலே
ஆயிரம் பெருமை அடைகின்றோம்!
பொல்லா உலகில் பெண் குழந்தை
கருவினை அழிக்கும் மனிதர்களை
ஓட ஓட விரட்டிடுவோம்!
பெண் குழந்தை போற்றிடுவோம்!
புவியெங்கும் புகழ் பரவ பாடிடுவோம்!
வெற்றுப் பெண்ணியம் பேசும் பெருமையாலே
புகழ் எதுவும் கிடைப்பதில்லை!
மாறுபட்ட கருத்துகளால்
மாண்புமிகுந்த பெண்ணினம்தான்
பாலினத் தொல்லைகளால்
புவனமெங்கும் அல்லல்படுகிறது!
உலகம் ஒருமித்த பெண்ணியக் கருத்துகளால்
பெண்ணினம்தான் உயர்ந்திடுமே!
ஒருவனுக்கு ஒருத்தி கொள்கையினால்
நன்மை இங்கே விளைந்திடுமே!
மதுவும்,போதை,புகைப் பழக்கமற்ற
தூய சமுதாயம் படைக்க இன்றே
நாமும் ஒருங்கிணைவோம்!
பாப்பா பாடிய சொல்தானே
என்றே நீங்களும் ஒதுக்கியே வாழ்ந்திட்டால்
நல்ல சமுதாயம் இங்கே உருவாக வழி எங்கே?
புதிய கீதை
அதர்மம் அழித்து
தர்மம் காக்க வந்த
புதிய தலைமுறை
கண்ணனே
காஷ்மிர் த்ரௌபதியின்
துகிலுரிய காத்திருக்கும்
பாகிஸ்தான் துச்சாதனனுக்கு
பாடம் கற்பிக்கப்போவது
எப்போது
ஜனநாயக களத்தில்
களைகளாய் உணரப்படும்
சமுதாயச் சகுனிகளை
சட்டத்தின் முன்
எப்பொழுது நீ
கொண்டு வருவாய்
ஊழல்களிலிருந்து
நாட்டை மீட்டெடுக்க
புதிய கீதையை
எப்போது நீ
புனையப் போகிறாய்
மாறு வேடப் போட்டிக்காக
கண்ணன் வேடமிட்டால்
இத்தனை மனுக்களா
அடப் போங்கப்பா
தலை சுத்துது
படம் 31.
அன்பால் வெல்லுங்கள்
எத்தனை சொல்லியும் அம்மாவின் பிடிவாதம்!
இத்தனை பாரம்! செய்த தலையலங்காரம்.!
மொத்த முகப்பூச்சும் சேர்ந்து அம்மாடியென்
சத்தெல்லாம் இழந்ததாய் களைப்பு! அலுப்பு!
இந்த நள்ளிரவில் படத்திற்கு நிற்பது
எந்தப் பிள்ளைக்குத் தரும் மகிழ்விது!
சொல்லுங்கள்! எனக்கு ஆனந்தம் தரவில்லை
வெல்லுங்கள் பிடிவாதத்தாலல்ல அன்பால் எங்களை!
வரிகள் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-9-2015
முக பாவனையில்
பெரிய மனுஷித்தனம்
காட்டச் சொன்னால்……
அய்யோ…அய்யய்யோ….
வன்புணர மிருகங்கள்
வரிசையில் வந்து விடுமே….
பிஞ்சென்றும் பாராது
பிய்த்துத் தின்னும் மனிதர்கள்…
பிச்சையெடுக்க வைக்கும்
அகோரங்கள்…
நெல்மணிக்கும்
கள்ளிப்பாலுக்கும்
தப்பிப் பிழைத்ததே
தப்பெனச் சொல்வரோ…..
கல்வியில் பாடம் கற்குமுன
கலவியைக் கற்றுத்தரும்
கசடர்கள்….
செல்லுமிடமெங்கணும்
துரத்தியடித்திடும்
துன்மார்க்கர்கள்……
விழுந்த விதை
முட்டி மோதி
விருட்சமாய் வருவதற்குள்….
பூ பாரம் தாங்குமோ இப்
புனிதப் பெண் பிள்ளை!
கருவறை தாண்டி வந்தேன்
கல்லறை அடைவதற்குள்
சிறுமலர் வாடுமோ…..
சிறு புள்ளும்
சிறகடித்துப் பறக்குமோ…..
சரிபாதி இட ஒதுக்கீடா….
இருக்குமிடமாவது
தக்க வைத்துக் கொள்வோம்….
தனி ஒரு விதி செய்வோம்
தயங்காது அதைக் கொள்வோம்
இனியும் பெண்ணை
இழிவு செயும் மாக்களை,
பூமிக்கடியில் புதைத்து அங்கே
புல்பூண்டும் முளைக்கவிடோம்!
“இளவல்” ஹரிஹரன், மதுரை.
ராதையின் காதல் எண்ணி
கவலை கொண்டாயா இல்லை
கீதையின் சாரம் சொல்லி
களைப்படைந்தாயா
கொவ்வைக் கனி இதழை ஒத்த
கோபியர் தம்மை ஏய்த்து
அன்னையிடம் வாங்கிய
அடியை எண்ணித் துயர் கொண்டாயா
தான் படைத்த பூமியின்
அழகை அழித்த
மானுடம் நோக்கி உந்தன் கோபமா
தர்மம்’ நீதி இல்லா உலகைக்
கண்டு மனம் கொதித்தாயா
மானத்தைக் காக்க அன்று
சேலையை வழங்க இன்று
மானங்கள் தெருவில் ஓடும்
அவலம் கண்டு கோபமா
ஈனங்கள் சுமந்த வாழ்வை
ஏழைகள் வாழ்வது கண்டு
வந்திட்ட பெரும் துயரோ
காக்கும் கடவுளாய் இருந்து
உலக சமநிலை காத்தாய்
கீர்த்தியுள்ள பெருமாள்
உனக்கு கோடிகள் குவியும் நேரம்
பார்த்திருக்கும் ஏழையின்
ஒட்டிய வயிறு கண்டு
காத்திரமாய் வந்த கோபமா
தேனும் பாலும் உன் திருமேனி தவழ்ந்தோட
சூம்பிய முலை கண்ட
குழவியின் கதறல் கண்ட வெஞ்சினமா
கலியுகத்தில் நடக்கும்
நலிவுகள் அழிவுகள் கண்டு
கால்பதித்து நடந்து வந்த கல்கியா நீ
உலகோர் எதிர்பார்க்கும் தசாவதாரம் நீயா
அன்று
பூமியின் பாரம் குறைக்க
மானுடப் பிறவி எடுத்து
வந்தனன் கிருஷ்ணன்
நீதியின் பக்கம் நின்று
தீமை அளிக்க எடுத்த
மாபெரும் சபதம் முடித்தனன்
இன்று
உன் துயர் சினமாய் மாறி
இனியோர் பாரதப் போர் தான் மூளுமோ
அந்தப் போர்
ஏழைக்கும் பணக்காரனுக்கும் நடக்கையிலே
ஏழையின் பங்காளனாய்
சாதிகளுக்கிடை நடக்கையிலே
நீதியின் பக்கமாய்
மதங்களுக்கிடை நடக்கையிலே
ஏக தெய்வமாய் நின்று
கலி யுகம் காக்க வந்த கல்கியே வா
ராதா மரியரத்தினம்
செங்கமலக் கண்ணனுக்கேன் கோபம்
மாறு வேடப் போட்டியில்
சகுனி வென்று விட்டானாம்