நவராத்திரி நாயகி (2)
இசைக்கவி ரமணன்
என் தேச நாயகி
எனையாளும் உன்மணி
என் நேச ராணி நீ
எப்போதும் தேவை நீ
என் நினைவும் என் கனவும்
நின் விரலில் சோழி
இடையில் நீ இளைப்பாறும்
ஏகாந்த ரேழி
உன் கண்கள் உன் கால்கள்
போதாது நாழி
உயிருக்குள் முத்தமிடும்
ஒய்யாரத் தோழி
(என் தேச)
உற்றுற்றுப் பார்க்கின்ற
ஒற்றை விழி ஒன்று
ஒருபோதும் திறவாத
மர்மவிழி ஒன்று
பற்றுற்று நோகாமல்
பாலிக்கும் நின்று
பாதமே பாரென்று
பணிக்கின்ற தின்று
என்றைக்கும் என் வாழ்க்கை
நீகொண்ட கொள்ளை
எதுவந்து போனாலும்
என்றுமுன் பிள்ளை
சற்றைக்கும் அகலாமல்
சந்நிதியில் வாழ்வேன்
சங்கீத மணிகேட்டு
மலர்ப்பாதம் வீழ்வேன்
(என் தேச)