சரவணப் பொய்கையில் நீராடி …
— கவிஞர் காவிரிமைந்தன்.
சரவணப் பொய்கையில் நீராடி …
இயற்கையெழில் கொஞ்சம் இதமான காலை வேளை!
இதயத்தில் வந்துமோதும் இனிமையான பாடல்!
சரவணப் பொய்கையில் நீராடி… பி.சுசீலாவின் குரலில் விளைந்த அற்புத நாதம்! விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து தந்த இன்னிசை வேதம்! ஆம், இது சத்தியம்!!
திருமால் மருகன் – செந்தில் குமரன் – கந்தன் – முருகன் என்னும் கடவுளை எண்ணி வணங்கி எழுகின்ற பாடலிது! குளிர்த்தென்றல் தாலாட்டும் குதூகலம் பரவும் வண்ணம் சந்திரகாந்தா என்னும் நடிகையின் திருமுகம் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் நினைவிற்குள் வரும்!
கர்ணன் திரைப்படத்திற்காக பாடல்கள் எழுதிட, கவிஞருடன் மெல்லிசை மன்னர்கள் பெங்களுரில் முனைந்திருந்த நேரம். அடுத்த நாள் பாடல் பதிவுடன் துவக்கப்படவிருந்த சரவணா பிலிம்ஸாரின் ‘இது சத்தியம்’ திரைப்படத்திற்காக இயக்குநர் கே. சங்கர சார்பாக சென்னையிலிருந்து ஒருவர் விமான வாயிலாக சென்று கவிஞரை அணுகி, அதற்காகக் கவிஞரால் எழுதப்பெற்ற பாடலிது. சூழல் விளக்கப்பட்டதும் கவியரசர் நாவில் புறப்பட்டுவந்த இப்பாடலில்தான் எத்தனை சுகமான வரிகள்! இதிலும் ஒரு செய்தி கிடைத்தது!!
சங்கரர்க்கும் ஆறுதலை சண்முகர்க்கும் ஆறுதலை
ஐங்கரர்க்கும் மாறுதலையானதே – சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா – நின் பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலைப் பார் …
காளமேகப் புலவரின் ‘ஆறுதலை’ எண்ணிக்கையோடு வேறுபொருள் தந்து நிற்பதைச் சுவைத்த கண்ணதாசன்,
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்துவைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர்தந்த இன்பநிலை – கண்டு
என்னிடம் நான் கண்டேன் மாறுதலை!
இது காளமேகக் கடலில் மூழ்கிக்கிடைத்த முத்துக்களை வரிகளாக்கி முத்தையா தருகின்றார்! காலங்கள் கடந்தபோதும் காற்றில் கலந்து தவழ்ந்திருக்கும் கண்ணதாசன் பாடல் – இது சத்தியம் அல்லவா?
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அன்னலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
ஓ. ஓ…ஓ. ஓ…ஓ. ஓ..
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
காணொளி: https://www.youtube.com/watch?v=GoNxhHAecVo