இலக்குமி
கிரேசி மோகன்
“பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
தாரங் களின்தயவால் தான்”….
”உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்
பத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்
சாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
காணலாம் பொன்மகளின் கால்”….
“உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி
பாலின் நிறத்தில் பொலிவு”….
“மஞ்சள் அரிசியில் மங்கல வாத்யத்தில்
வஞ்சியர் கல்யாண வைபவத்தில் -நெஞ்சணைந்த
தாலியில் தங்கமாய்த் தங்கியவள் தாம்பத்ய
வேலியைக் காக்கும்செல் வி”….
“பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த
பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்;
வீடு வரையுறவு வீதி வரைமனைவி
காடு வரைநெற்றிக் காசு”….
“அக்காள்மூ தேவி அயர்ந்துறங்கும் இல்லத்தில்
நிக்காள்ஸ்ரீ தேவிஎன்பர் நூலோர்கள் -முக்காலம்
தூங்கும் பெருமாளின் தூய திருவடிகளை
தாங்குவதால் தூங்காமல் தூங்கு”….
”வித்தைக்கு வேண்டும் வினயம், அதிதீர
சித்தத்தில் வேண்டும் சரிசமம் -சுத்தத்தை
வேண்டுவாள் செந்திரு, வாசல் தெளிப்போர்க்கு
யாண்டும் வறுமை இல”….கிரேசி மோகன்….