-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு.யெஸ்ஸெம்கே-வுக்கும், இதனைப் போட்டிக்கு ஏற்றது எனத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமையின் நன்றி.

helmet person

வாகனம் ஓட்டும்போது அணியவேண்டிய தலைக்கவசத்தைப் பாதசாரியாய்ச் செல்லும்போதும் அணியவேண்டிய அவசியம் வந்துவிட்டதா? ’தனிமனிதப் பாதுகாப்பு’ அவ்வளவு தூரம் கேள்விக்குறியாகிவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோமா? என்றெல்லாம்  நம்மை யோசிக்க வைக்கின்றது இப்புகைப்படம்.

சரி…இந்தக் காட்சியை நம் கவிஞர்கள் எப்படி அணுகியிருக்கின்றார்கள் என்று அறிந்துவருவோம்! 

***

தற்காப்புக்காகத் தலைக்கவசமும், ஆணுடையும் அணிந்து செல்லும் அணங்கொருத்திக்கு அருமையான அறிவுரைகளை அள்ளி வழங்கியுள்ளார் திருமிகு. லட்சுமி. 

…நடந்து போனாலும்
இலஞ்ச மேம்பால இடிகற்கள்
தலைமேல் தாக்குமம்மா!
தலைக் கவசம்தான்
தங்கத்தமிழ் நாட்டிற்குத்தான்
இன்று முதல் தேவையம்மா!
[…]
பகட்டு ஆடை உலகமில்லை
ஆணைப் போல வேடம் தரிக்க
ஜீன்ஸ் மட்டும் போதாது!
பொருத்தமில்லா உடையனைத்தும்

 தமிழ்நாட்டு இயற்கைக்கு
 பொருத்தமில்லை!
உடலாலே நோய் பலவும்
பொருத்தமில்லா உடையாலே 
ஏன் வருந்தி அழைக்கின்றாய்?
பாலியல் தொல்லை அகல
பாங்காய் நீயும் உடை உடுத்து!
மது போதை  பேய்களினால்
உண்டாகும் தொல்லை  
அனைத்தும் களைந்திட
தற்காப்புக் கலை பழகிடுவாய்!
புவனமதைக் காத்திடுவாய்!
ஆசைப்படுத்தும் பொருள் 
மோகமில்லை
[…]
பெண்ணென்ற பெருமையெல்லாம்
சலங்கை அணிந்த பாதம்
மட்டும் இல்லையம்மா!
பிறர் மெச்ச வாழும்
வாழ்க்கை உண்மை உலகை
காட்டிடுமே!
ஆண் சமுதாய அடித்தளமே
ஆணித்தர அன்பில்தான்!
ஆணி வேரின் பிடியை
உந்தன் உள்ளங்கையில்
இறுக்கிப் பிடித்தால்
புவி முழுவதும்
சொந்தமாகுமே!
உன்னால் முடியும் என்றே
உலகை நீ நடத்த
துயரங்களைத் துடைத்துவிடு!…

***

விலையற்ற மனிதஉயிர்களைக் கண்போலக் காத்துநிற்கும் தலைக்கவசத்தை மடியின்றி அணிந்திடுவீர் மாந்தர்களே! என்று நல்லுரை நவில்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

உயிரதைக் காக்கும் கவசமதை
உடலில் அணியச் சோம்பலினால்
உயிரை யிழக்கும் மனிதர்முன்
உறுதுணை யாக்கிடு அதையணிந்தே,
பயிரது சிறிதாய் இருக்கையிலே
பாது காக்கக் கற்றுவிடு,
உயிர்தான் உயர்ந்தது வாழ்வினிலே
உணர்ந்ததைக் கொண்டிடு கருத்தினிலே…!

***

தலைக்கு வரும் துன்பம் தீர்ப்பது தலைக்கவசம்; மலைபோல் வாழ்வில் வரும் துன்பம் தீர்ப்பதோ மனக்கவசம் என்று சொல்லும் திரு. இளவல் ஹரிஹரன், உலகத்தோடு ஒட்ட ஒழுகு பெரியோர் சொன்னபடி! உன் வாழ்வில் எல்லாம் நடக்கும் நல்லபடி! என்கிறார்.

 

நடைபோடு நடைபோடு
நன்மைதீமை பகுத்துணர்ந்து
நடைபோடும் பாதையெலாம்
நல்லவர்க்கெனும் வகையோடு.

மேடுபள்ளம் இடறவைக்கும்,
மிகக்கவனம் நீகொள்ளு!
காடுவழி மலையெனவும்
கண்களுக்குத் திரைபோடும்,

வாழ்க்கையிங்கு வாழ்வதற்கு,
வழிதவறிப் போகவல்ல!
[…]

தலைகாக்கும் கவசந்தான்
தனக்கான ஒருவழி,
நிலைகாத்துக் கொள்ளவோ
நிறையவழி இங்குண்டு.

மலைபோல இடர்வரலாம்
மாறாத மனக்கவசம்
கலையாத கவசமெனக்
காலமெலாம் காத்துநிற்கும்.

உலகத்தில் உனக்கென்றே
ஒருவழி,அது நிச்சயமாய்
உலகத்தோடொ ழுகுகின்ற
உன்னதந்தரும் வழியாகும்.

பலபெரியோர் அனுபவத்தால்
பார்த்துவந்த வழியாகும்
வலம்வந்தே நடைபோட்டால்
வாழ்க்கையெலாம் சொர்க்கமன்றோ!

*** 

உயிருக்கு உலை வைக்கும் ஆபத்துக்களிலிருந்து தலையைக் காக்கத் தலைக்கவசம் அணிவது மானுடனின் தலையாயக் கடன் என்கிறார் திருமிகு. பா வானதி வேதா. இலங்காதிலகம்.

உலை வைக்க உயிருக்கு
அலைவது போல திரிகிறார்.
தலை திருப்பிப் பார்த்திட
தலைக்கவசமணிந்தாலும் மறக்காதே நீ
மூன்று வயதிலேயே தொடங்குகிறாரிங்கு
மூச்சை தலையைக் காப்பாற்ற.
மூக்கணாங்கயிறு போன்றது தலைக்கவசம்.
மூக்குக் கண்ணாடியாய் அணிந்திடலாம்.

நேராக நிமிர்ந்த பார்வையோடு
தேரென்று நினைப்பிலவசரமாய் ஓட்டுவார்.
கூர்மையாய் நினைத்துப் பின் பற்று
பார்! நமது காப்பிது.
அலட்சியம், அலுப்பு அடைவது
இலட்சிய வாழ்வைத் தறித்திடும்.
பாதையில் நம்மைக் காத்தல்
பாதசாரி பயணியின் கடன்.

*** 

தேன்தமிழ்ச் சொல்லாலே அழகிய பாச்சரம் தொடுத்துள்ள கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து நாம் காணவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

உலகில் வாழும் பலதரப்பட்ட மாந்த இனங்களுக்கிடையே, சொந்த மண்ணிலேயே பாதுகாப்பற்ற இனமாய் மாறிவருகின்றது நம் தமிழினம். ஆம்! இனவெறியும், மதவெறியும் தமிழர்களைக் கூறுபடுத்தியும் வேறுபடுத்தியும் நாதியற்றோராய் மாற்றிவரும் நிலையை என் சொல்வது!

இந்த அவலத்தைக் கவலையோடு தன் பாவில் பதிவுசெய்திருக்கும் திரு. கொ. வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

நட்ட நடுச் சாலையில்
உச்சி வெயில் வேளையில்
வாகனம் ஏதுமின்றித்
தலைக் கவசத்துடன் செல்லும் நீ
நிச்சயமாய்த்
தமிழ்ச் சிறுவனாய்த்தான் 
இருக்க வேண்டும்

முகத்தை மூடிக் கொண்டு
உலவ வேண்டிய 
துர்பாக்கிய நிலை
நமக்கு மட்டுமே
நிகழ்கிறது

இலங்கையின்
குடிமகனாய் இருந்தாலும்
அரபு நாட்டிற்குப்
பணியாளாய்ச் சென்றாலும்
காவேரிக் கரையோரம்
நடந்து சென்றாலும்
முல்லைப் பெரியாற்றில்
குளித்தெழுந்தாலும்
ஆழ்கடல் நடுவே
மீன் பிடிக்க நினைத்தாலும்
வாழ்ந்து தொலைக்க
மரக் கூலியாய் சென்றாலும்
நம்மை நோக்கியே
இரக்கமற்றவர்களால்
ஏவுகணைகள் எய்யப்படுகிறது

தங்கள் வணிகத் தேவைக்கேற்ப
உலக நாடுகள் 
நமக்காக அனுதாபப்படுகின்றன
இல்லையேல் 
அலட்சியப்படுத்துகின்றன
இந்தியத் தாய் நாடும்
விதிவிலக்கல்ல என்பதே
வேதனையின் உச்சம்!

தமிழர்
உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட்டு
நாதியற்றுப் போன இனமென
நாளைய விக்கிபீடியா
நம்மை வர்ணிக்குமோ?

***

நாம் நிதானத்தோடு சென்றாலும் எதிராளியும் அவ்வாறுதான் வருவான் என்பது என்ன நிச்சயம்? ஆகவே, ”எனதருமை மக்களே! அணிந்திடுவீர் (தலைக்) கவசம்; இல்லையேல் நடந்துவிடும் உமக்குத் திவசம்!” என வேடிக்கையாய் வாழ்க்கை நடைமுறையைப் படம்பிடித்துக் காட்டியுள்ள திரு. மெய்யன் நடராஜின் பின்வரும் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவுசெய்துள்ளேன்.

நாம் நிதானத்தோடு நடந்தாலும் 
நம்மில் நிதானமாய் நடக்காதவர் முன் 
நடக்க நடமாடும் நமக்குத் தேவை 
தலைக்கவசம்.
தவறின் நடக்க நேரிடும் திவசம்.

***

கவிதைப் போட்டியில் கருத்தோடு பங்கேற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்! தொடர்ந்து உங்கள் பங்களிப்பை ஆர்வத்தோடு  தந்துவாருங்கள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 34-இன் முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *