ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 24

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

நேற்று, இன்று, நாளை
______________
“காலம் எத்தகைய வியப்பாக உள்ளது ! நாமெல்லாம் எத்தகைய முரண்பாடு உடையவர் ! காலம் மெய்யாகவே மாறி விட்டது. நம்மையும் காலம் மாற்றி விட்டது. ஓர் எட்டு முன்னடி வைத்து, முகத்தைத் திரையிட்டு, நமக்கு எச்சரிக்கை விடுத்துப் பிறகு உணர்ச்சி ஊட்டி விட்டது காலம் !”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
______________

நேற்று, இன்று, நாளை
______________

நண்பனிடம் நான் கூறினேன் :
“பார் அந்த மாதை !
சாய்ந்துள்ளாள் அவன் தோள் மீது !
நேற்று என் தோள் மீது
சாய்ந்தி ருந்தாள் அந்த மாது !”
நண்பன் என்னிடம் கூறினான் :
“நாளை சாய்ந்தி ருப்பாள்
என் தோள் மீது
அந்த மாது”
______________

நண்பனிடம் நான் கூறினேன் :
“பார் அந்த மாதை !
அமர்ந்துள்ளாள் அவன் அருகே !
நேற்று அந்த மாது
என்னருகே அமர்ந்திருந்தாள்”
நண்பன் என்னிடம் கூறினான் :
“நாளை அவள் என்னருகே
அமர்ந்திருப்பாள்.”
______________

நண்பனிடம் நான் கூறினேன் :
“பார்க்க வில்லையா அவளை நீ
அவன் கிண்ணத்தில்
பருகி வருவதை ?
நேற்று என் கிண்ணத்தில்
அவள் பருகினாள் !”
நண்பன் என்னிடம் கூறினான் :
“நாளை அந்த மாது
என் கிண்ணத்தில் பருகுவாள் !”
______________

நண்பனிடம் நான் கூறினேன் :
“பார் அவனை நோக்கும்
அந்த மாதின்
காதற் கண்களை !”
நேற்று அப்படித்தான் அவள்
என்னை நோக்கினாள்.”
நண்பன் என்னிடம் கூறினான் :
“நாளை அதுபோல்
என்னை நோக்கும் அவள் கண்கள்.”
______________

நண்பனிடம் நான் கூறினேன் :
“காதற் பாடலை
அந்த மாது அவன் காதில்
முணுப்பதைக் கேட்டாயா !
நேற்றவள் அதே பாடலை
முணுமுணுத்தாள்
என் காதில் !”
நண்பன் என்னிடம் கூறினான் :
“நாளை அப்பாடலை என் காதில்
முணுமுணுப்பாள் !”
______________

நண்பனிடம் நான் கூறினேன் :
“பார் அந்த மாது
அவனை அணைத்துக் கொள்வதை !
நேற்றவள் அணைத்தாள்
என்னை.”
நண்பன் என்னிடம் கூறினான் :
“நாளை அணைப்பாள்
என்னை அவள்.”
நான் வியந்தேன் அவளை
“எப்படிப் பட்ட பெண்ணென்று.”
நண்பன் பதில் அளித்தான்
“அப்படி இருப்பதுதான்
அவள் வாழ்க்கை !”
______________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *