நான் அறிந்த சிலம்பு – 185
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக் காதை
‘கோவலன் கொலைப்படுமகன் அல்லன்‘ என்ற காவலாளருக்குப் பொற்கொல்லன் கள்வரின் இயல்பினை எடுத்துரைத்தல்
“இங்கு இருக்கும் இவன் இலக்கண முறையால்
மேன்மக்களைப் போலத் தோன்றுவதால்
இவன் கொலைபாதகக் கள்வன் அல்லன்” எனக்
காவலர் கூறினர்.
அவர்களைப் பார்த்து எள்ளி நகைத்த பொற்கொல்லன்
“நீங்கள் கள்வரின் இயல்புகள்
அறியாதவராய் இருக்கிறீர்கள்;” என்று கூறிக்
கள்வரின் இலக்கணங்களை
அவர்தமக்கு விரிவாக எடுத்துக் கூறலானான்.
மந்திரம் தெய்வம் மருந்து நிமித்தம்
தந்திரம் இடம் காலம் கருவி ஆகிய
எட்டுச் சூழல்களையும்
தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு
எப்போதும் திரிவர் கள்வர்.
இவர்களின் மருந்தில் நீங்கள்
அகப்பட்டுக் கொண்டீர்கள் என்றால்
புகழ்மிக்க மன்னனின்
தண்டனைக்கு ஆளாவீர்கள்.
கள்வரின் எட்டுத் துணைகள்
கள்வர் தம் நாவால் மந்திரத்தை உச்சரித்தால்
தேவகுமாரர்களைப் போல
நாம் காண முடியாமல் மறைந்து விடுவர்.
தாம் வழிபடும் தெய்வத்தின் உருவை
மனத்தில் நினைப்பாராயின்
களவாடிய பொருளை நமக்குக் காட்டியபடியே
தப்பி ஓடி விடுவர்.
அவர்கள் மருந்தினாலே
நம்மை மயக்கினால்
நம்மால் இருக்கும் இடம்விட்டு
அசையவே முடியாது.
கிடைப்பதற்கு அரிய பொருள்
தானாகவே கையில் கிடைத்தாலும்
நல்ல நிமித்தம் வாய்க்கவில்லையெனில்
அதைத் தொட மாட்டார்கள்.
களவு நூலில் கூறப்பட்ட வழியில்
களவாடச் செல்வாராயின்
இந்திரனின் மார்பணியைக்கூட
எளிதில் களவாடி விடுவர்.
இப்பொருளைக் களவாட
இந்த இடமே சிறந்தது என்று
அவர் எண்ணுவாராயின்
அதன் பின் அவர்களை
யாராலும் காண முடியாது.
களவு செய்வதற்கு
இதுதான் ஏற்ற காலம் என்று
அவர்கள் முடிவு செய்துவிட்டால்
தேவர்களால் கூட
அவர்களைத் தடுக்க முடியாது.
அவர்தம் கருவிகள் கொண்டு
அரிய பொருட்களைக் களவாடினால்
இந்தப் பெரிய உலகில்
அவரைக் கண்டுபிடிக்க வல்லவர்
ஒருவரும் இல்லை.
அவர்கள் களவுபுரிய
இரவு பகல் நேர வேறுபாடு கிடையாது.
அவர்கள் களவு புரியும் இடத்தை ஆராய்ந்தால்
நாம் ஓடி ஒளிய ஓர் இடமும் கிடைக்காது.
எனவே எல்லாக் காலங்களும்
எல்லா இடங்களும்
அவர்கள் களவாட ஏற்புடையவை
என்று கூறினான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 162 – 189