மழையில் நனைந்தால் சிவனே
மனதில் உன்னை நினைப்பேன் !
அழைப்பேன் ருத்ரம் சொல்லி
அதிலும் குளித்து மகிழ்வேன் !
உழைக்கும் போதும் சிவனே
ஒளியாய் ஒன்றிப் பணிவேன்
பிழைப்புக் காக உன்தாள்
பிடிக்க மாட்டேன் சிவனே !
என்னை நினைக்கும் உன்னை
என்னுள் வைத்தேன் நன்றாய்
முன்னை வினையின் தொடரை
முடித்து வைப்பாய் சிவனே !
தன்னை உணர்ந்த நிலையைத்
தருவாய் எனக்கு என்றே
சென்னி மேலே உன்தாள்
சிந்தை செய்வேன் சிவனே !
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.