சிவபிரதோஷம்
-மீ.விசுவநாதன்
திருநீ றிட்டுக் கொள்கின்றேன்
–திருடன் பேரை மறைக்கின்றேன்!
கருநீ லகண்டன் நினைக்காமல்
–கறுப்புப் பணத்தில் மிதக்கின்றேன்!
கருநா கத்தைச் சுமப்பவனின்
–கழலில் கவனம் மறக்கின்றேன்!
ஒருநா ளின்றி ஒருநாள்நான்
–உணர்ந்து கொள்ள முயல்கின்றேன்!
கனகாம் பரமாய் மணமின்றிக்
–காலம் பழிக்க வாழ்கின்றேன்!
தினவால் பரமன் உனைக்கூடத்
–திட்டித் திட்டி எழுதுகிறேன்!
வினைவால் நீண்டு தொடராமல்
–வெட்டி விடவே தொழுகின்றேன்!
நினைவால் உன்னைத் தொடர்கின்ற
–நெஞ்சம் பெறவே விழைகின்றேன்!
( அறுசீர் அரையடி வாய்பாடு: மா,மா,காய் )
(பிரதோஷ தினம் : 23.11.2015)