-மேகலா இராமமூர்த்தி

திரு. பிரேம்நாத் திருமலைசாமி எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமை இதழின் நன்றி.

headshaving

பிள்ளைக்கனியமுதின் கருவிழிகள் அருவியாய் நீரைப் பொழிவது முடியிழந்த துக்கத்திலா? இல்லை… ’மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம் பழித்ததை ஒழித்துவிடுங்கள்’ எனும் வள்ளுவத்தை அறியாதோராய் மக்கள் இருக்கிறார்களே எனும் துயரத்திலா?

காரணம் எதுவானாலென்ன கண்மணியே…விரைவில் திருமுடி பெறுவாய்! சிந்தும் கண்ணீரை நிறுத்து! முகத்திலே புன்னகையைப் பொருத்து! 

இந்த அழகுக் குழந்தையின் அழுகையைப் பற்றி நம் கவிஞர்களின் கருத்தென்ன என்று அறிந்துவருவோம் இனி!

***

’முடியிழந்தாலும் நீ முழுநிலவுதானம்மா! இன்றுன்னை அரவணைக்கும் அருமைத் தந்தையை நாளை நீ மறக்காதே!’ என்று மழலைக்கு இன்மொழிகள் பகர்கின்றார் திரு. ஜெயராமசர்மா.

மொட்டை அடித்தாலும்
முழுநிலவு நீயம்மா
முடிமுழைத்த பின்னாலே
முழுநிறைவு பெற்றிடுவாய் !

அப்பாவின் அரவணைப்பில்
அழுகின்ற நீபின்னர்
அப்பாவை அணைத்துநிற்க
அருவருப்புக் காட்டாதே

*** 

கண்ணே! உன் பெற்றோர் உனக்குச் செய்வன எல்லாம் உன் நன்மை கருதியே என்பதை உணர்வாய்! மேன்மேலும் வாழ்வில் உயர்வாய்!’ என்று நல்லுரை நவில்கின்றார் திரு. தாரமங்கலம் வளவன். 

முதல் மொட்டை
குலதெய்வத்திற்கோ, பழனி முருகனுக்கோ
போட்டே ஆக வேண்டும்..

மொட்டை போட்டால்தான்
உன் முடி கருகருவென்று  அடர்த்தியாய் வளரும்..

இன்று ஆரம்பித்து பெற்றோர் உனக்கு
செய்யும் ஒவ்வொரு காரியமும் உன்
எதிர்கால நன்மைக்கே என்று புரிந்து கொள்.

நீ சற்று வளர்ந்து பெரியவளானதும்
உன்னை பள்ளிக்கு அனுப்பும் போது
அழாதே..

அது உன் வளமான எதிர்காலத்திற்கு என்று மனதில் கொள்..

இன்னும் சற்று வளர்ந்த பின்
உன்னை படி, நல்ல மதிப்பெண் எடு
என்று பெற்றோர் சொன்னால்
அவர்கள் மேல் கோபம் கொள்ளாதே
அதுவும் உன் எதிர்கால நன்மைக்கே என்று புரிந்து கொள்..

உன் கல்லூரிக்காலத்தில்
நல்ல பழக்கங்களையும், நல்ல நண்பர்களையும்
மட்டுமே வைத்துக் கொள் என்று
பெற்றோர் உனக்கு அறிவுரை சொன்னால்
உதாசீனப் படுத்தாதே..
ஏற்றுக் கொள்..

*** 

குலசாமிக்காகத் தரும் முடிகாணிக்கை உன் குலம் காத்திடும்! சத்தமிடாமல் சற்றே உன் தலையைக் காட்டு! என்று கொஞ்சுமொழி கூறிக் குழந்தையை அழைக்கின்றார் திருமிகு. சியாமளா ராஜசேகர். 

பிள்ளை யழுகையிலே பெற்றவுள்ளம் நோகிறதே
துள்ளு மழகே  துவளாதே !- முள்ளாகக்
குத்தியதோ கண்ணே ! குலச்சாமி காத்திடும் 
கத்தாமல் நீசற்று காட்டு .

*** 

’தனக்கு மொட்டை போட்டதற்காக அழவில்லை இப் பெண்மகவு; நாளை வரதட்சணை என்ற பெயரில் இச்சமுதாயம் தன் தகப்பனுக்குப் போடப்போகும் மொட்டையை நினைத்தே அழுகின்றது’ என்று சமூக அவலத்தைக் குழந்தையின் வாயிலாய்ச் சாடுகின்றார் திரு. மெய்யன் நடராஜ். 

தாய்மாமன் மடியில் வைத்துத்தம்
பெண் குழந்தைக்கு  மொட்டை அடிக்கும்
தாய்மார்கள் அறிவதேயில்லை.
மொட்டையடித்தல் பற்றியறியா
மாமன்மார்கள் பிற்காலத்தில்
தம் மகன்மூலம் தம்கணவர் சொத்தையெல்லாம்
மொட்டையடிப்பர்கள் என்னும் உண்மை .

மொட்டையாகும் தலைக்காக
குழந்தை அழவில்லை  நாளை
தகப்பனை மொட்டையடிக்கப்
போகிறார்களே என்றழுகிறதெனும்
உண்மை தகப்பன் மாருக்கே புரியும் உண்மை .

இனி இங்கே காதுகுத்தி
இத்துனூண்டு தங்கத்தைப் போட்டுவிட்டு
பவுன்கணக்கில் கேட்கப் போகிறார்களே
என்று புலம்பி அழும் குழந்தையை
புரிந்துகொள்ள  இன்னும் நாம்
பதினெட்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்

*** 

’தலைக்கனம் குறையத் தலைமுடி யிழப்பாய்; இழந்ததை விரைவில் பெறுவாய் பலமடங்காய்!’ என்று மனமினிக்கும் மணிமொழிகளை இம்மழலைக்குச் செப்புகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

தலை தலையாய்
வேண்டுதல் இந்த
வேண்டு தலை
கடந்த ஜென்மத்து
பந்தங்களை துண்டிக்க
இந்த வேண்டு தலை
இந்துக்களின் முக்கிய சடங்கு
குல தெய்வத்துக்கு
முடி கொடுத்தால்
முடி மட்டுமல்ல
குழந்தையும் ஆரோக்கியமாய்
வளரும் என்பது ஐதீகம்
தலைக்கனம் போக
தலைமுடி தருவாய்
பார் பார் உனக்கு முடி
எப்படி வளரப்போகுதுன்னு
அழாமல் முடிகொடு சாமிக்கு
அடுத்துக்கொடுப்பார் சாமிசீக்கிரமே
ஆறடி க்கூந்தலை உனக்கு

*** 

செல்லமே! தாய்மாமன் மடியினிலே தலைமுடிக்கு விடு’தலை’ தந்து சாமி வேண்டு’தலை’ நல்லபடி செய்திடுவோம் என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன். 

தாய்மாமன் மடியினிலே முடியிழப்பது ஓர் இன்பம்.
தாய்மாமன் தன்மடியில் தாங்கிப் பிடித்திட்டார்,
ஓய்வின்றி வேண்டாம் அழுகையும்தான் சாய்ந்திடாதே
செல்லமே சொல்கேளு, சொந்தசாமி வேண்டுதலை
நல்லபடிச் செய்திடுவோம் நாம்!

*** 

முடி இறக்குவதற்காக நிகழ்த்தப்படும் இத்திருவிழா, உறவுகள் கூடி உணர்வையும் உணவையும் பரிமாறிக் கொள்ளும் ஓர் உன்னதத் திருவிழா என்று உளம்பூரிக்கின்றார் திரு. க. கமலகண்ணன்.  

முடியை கொடுப்பது
சம்பிரதாயம் மட்டுமல்ல
மகிழ்ச்சியின் திருவிழா
உறவுகளின் அன்பின் ஒற்றுமைக்கு
உணர்வு கொடுக்கும் 
ஆத்மார்த்த நிகழ்வு
மாமன் மடியில் வைத்து
மொட்டை போட
அத்தை ஆறுதல் சொல்ல
மற்ற உறவுகள் உணவுக்கும் 
உணர்வுக்கும் உதவி செய்ய
குழந்தைக்கு தலைமுடி 
எடுத்தால் இன்னும் 
ஆரோக்கியம் என்ற 
உண்மையான காரணத்திற்காக
முன்னோர்கள் செதுக்கி 
வைத்த சிற்பம் போன்ற 
நல்வாழ்வின் வழிமுறைகள்
அழாதே தங்கம் 
நீ ஆரோக்கியமாய்
நீடூடிவாழ்வாய்

*** 

மாற்றவியலாத மூடவழக்கங்களில் முடி வழித்தலும் ஒன்று என்றாலும், இதனால் குழந்தையின் முடி அடர்ந்து வளரும் என்பது இதிலோர் சாதகமான அம்சம் என்கிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம். 

பிறந்த முடி வழித்தலென்று
பிறந்த முப்பதாம் நாள்
சிறப்பாகத் துடக்குமுடி வழிப்பர்
மறக்காது சந்தனமிட்டுக் குளிர்விப்பார்.
குழந்தை கதறக் கதற
வழங்கும் வழக்கங்கள் கொடுமை!
புனித அறிவைப் பாவிக்கலாம்!
மனித வேண்டுதல்களிற்கு அளவில்லை!

மூட வழக்கமென்று இதற்கு 
மூடுவிழா வைத்தாலும்  பல 
தடவை வழித்தால் முடி
அடர்த்தியாக வளருமென்பதும் வழக்கு.
பொது உறவு கூடல்
இது சடங்கு என்று!
மாற்ற நினைத்தாலும் மாறாது
போற்றும் நிகழ்வு இது!

*** 

தந்தை சிரித்திருக்க, குழந்தையோ அழுதிருக்க நிகழும் இந்த முடிகாணிக்கைச் சடங்கானது, இறைவனிடம் சரணடையும் தத்துவத்தின் குறியீடு என்கிறார் திரு. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன் . 

திருக்கோவிலில் முடி காணிக்கை செலுத்துவது
இறைவனிடம் சரணாகதியாகும் சம்பிரதாயம்
திருக்கோவிலில் முடி காணிக்கை கொடுக்கும் போது
தந்தை சிரிக்கிறார்
மகன் அழுகிறார்
முடி வளர்ந்து மகன் வளர்கிறார்
மகன் தந்தையைகிறார்
தந்தை தாத்தவாகிறார்
பேரனும் திருக்கோவலில் முடிகாணிச்கை செலுத்துகிறைரர்
முடிசூடி மன்னாராகத் திகழ்கின்றார்

***

சிறந்த கவிதைகள்; பரந்த சிந்தனைகள். கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்! 

இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அடுத்துக் காண்போம்! 

பிள்ளைப்பருவத்தில் முடிமீது வைக்கும் ’பற்று’ வளர்ந்தபின்னும் மனிதர்கட்கு விடுவதில்லை! ’பற்றற்றவன் பற்றைப் பற்றுவது ஒன்றுதான் பற்றை விடுதற்கு உற்றவழி’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அஃது அத்துணைச் சுலபமன்று அல்லவா? 

’குழந்தாய்! அம்மான் மடியே ஆசனமாய், தருவாய் முடியைக் காணிக்கையாய்! அடைவாய்…நீ இழந்த முடியை விரைவாய்!’ என்று பிஞ்சுக் குழந்தைக்கு வாழ்வியல் உண்மைகளைப் பக்குவமாய் ஊட்டுகின்றது ஒரு கவிதை! 

முடி இழக்கும் போதும்
முடி துறக்கும் போதும்
அழுவதும் சிரிப்பதும்
அவரவர் இயல்பே…..

ஆனால் குழந்தாய்
அம்மான் மடியில்
அமர ஓர் சிம்மாசனம்
அழகாய்த் தரும்முடி காணிக்கை

மகிழ்வாய்க் கொடுக்க
மனமகிழும் ஆண்டவனும்
உறவும் சுற்றமும்
ஒன்றுகூடும் வழிபாடு……

இதுதான் வாழ்வின்
இனியதொரு தொடக்கம்
இனிமேல் நிகழ்வன
எல்லாமிதில் அடக்கம்

இழந்த முடியழகு
இன்னும் அழகூட்டும் மொட்டை….
இது ஓர் ஒத்திகை
இங்கினி யாரும் நமை
அடித்திடக்கூடாது மொட்டை…..
இழந்தன எல்லாம்
மீளத் திரும்பிடும்…..
சிரசில் முடியும்
செவ்வனே வளரும்,
அழகும் மிளிரும்

அது ஓர் தத்துவம்
அறிந்தவர் அறிவாராக! 

தத்துவக் கருத்துக்களை எளிமையாய்த் தந்திருக்கும் இக்கவிதையை இயற்றிய திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

*** 

இந்தக் கருப்புவெள்ளைப் புகைப்படத்தின் நீட்சியை… காலவோட்டத்தில் இம்மழலைக்குக் கேசம் வளர்ந்திடும் காட்சியை…மனக்கண்ணில் வண்ணப்படமாய் விரிக்கும் கவிதை ஒன்று! 

கருப்பு வெள்ளை
புகைப் படத்தை
உற்றுப் பார்த்துக்
கொண்டேயிருந்தேன்…..
மெல்லத் துளிர் விடத்
தொடங்கியது….
கால
ஓட்டத்தின்
வண்ண கேசங்கள் 

புகைப்படக் காட்சியோடு சிந்தனையின் பரப்பை வெட்டிவிடாமல், அதையும் தாண்டிக் கற்பனைச் சிறகை அகல விரித்திருக்கும் திரு. கவிஜியின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிடுகின்றேன்.

தம் புதுமைக் கருத்துக்கள் வாயிலாய்ப் புகைப்படங்களுக்குப் புதிய வண்ணங்களைத் தீட்டிவரும் கவிஞர் பெருமக்களுக்கு என் நன்றி!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 40-இன் முடிவுகள்

  1. சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. கவிஜிக்குப் பாராட்டுகள்.
                       இளவல் ஹரிஹரன்.

  2. வெற்றிப்பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ஒவ்வொரு கவிதைக்கும் தந்திருக்கின்ற  கருத்துச் சுருக்கங்கள் மிகவும் கவர்ந்தது.

    நன்றிகளும் பாராட்டுகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *