பிரளயம்
க.பாலசுப்ரமணியன்
வான்வீட்டுக் கூரை உடைந்ததினால்
என்வீட்டுக் கூரையில் மழை பெய்தது !
எவன் விட்ட கண்ணீரோ விண் விட்டு
மண் வீட்டில் கண்ணீராய் பெருக்கெடுத்தது !
ஊர்விட்டு ஊர் செல்ல வழியறியா மக்கள்
நீர்மட்டில் நிலம் மறையப் பார்த்த கண்கள்
தேரோட்டம் போலத் தெருவெல்லாம் மாக்கள்
வெள்ளோட்டம் அழிவிற்கோ வேதனையில் நெஞ்சம் !
கோடி கொடுத்துக் கூரை கட்டிக் கூவிய செல்வன்
குப்பை வண்டி மேலேறிச் செல்லும் கோலம் !
குறை யில்லா வண்ண உடை நூறு சேர்த்தும்
கோவணத்தில் வீதிவழி செல்லும் காலம் !
முலைப்பாலைக் குழந்தைக்குக் கொடுக்க
மூலையொன்றைத் தேடும் தாயின் துயரம்
மூழ்கிவிட்ட வீட்டைக் கண்டு இளமையிலும்
முதுமையடைந்த மனிதத்தின் கோரம் !
மும்மாரி வேண்டுமென்று தவமிருந்தோர்
முகம்மாறி மனமுடைந்து நிற்கும் நேரம்!
மலர்மாரி பொழிந்து நல்மழை கேட்டோர்
மனம்மாறி ஆதவனைத் தேடும் நேரம் !
பிரளயத்தின் பொருள் கேட்ட ஆசான் முன்னே
பொருளறியாது மருண்டு நின்ற மாணவனும்
பொருளான கட்டுரை அழகாக எழுதிடவே
இருளான பள்ளியில் அருளில்லாத சோகம்!