க.பாலசுப்ரமணியன்

 

வான்வீட்டுக் கூரை உடைந்ததினால்

என்வீட்டுக் கூரையில் மழை பெய்தது !

எவன் விட்ட கண்ணீரோ விண் விட்டு

மண் வீட்டில் கண்ணீராய் பெருக்கெடுத்தது !

 

ஊர்விட்டு ஊர் செல்ல வழியறியா மக்கள்

நீர்மட்டில் நிலம் மறையப் பார்த்த கண்கள்

தேரோட்டம் போலத் தெருவெல்லாம் மாக்கள்

வெள்ளோட்டம் அழிவிற்கோ வேதனையில் நெஞ்சம் !

 

கோடி கொடுத்துக் கூரை கட்டிக் கூவிய செல்வன்

குப்பை வண்டி மேலேறிச் செல்லும் கோலம் !

குறை யில்லா வண்ண உடை நூறு சேர்த்தும்

கோவணத்தில் வீதிவழி செல்லும் காலம் !

 

முலைப்பாலைக் குழந்தைக்குக் கொடுக்க

மூலையொன்றைத் தேடும் தாயின் துயரம்

மூழ்கிவிட்ட வீட்டைக் கண்டு இளமையிலும்

முதுமையடைந்த மனிதத்தின் கோரம் !

 

மும்மாரி வேண்டுமென்று தவமிருந்தோர்

முகம்மாறி மனமுடைந்து  நிற்கும் நேரம்!

மலர்மாரி பொழிந்து நல்மழை கேட்டோர்

மனம்மாறி  ஆதவனைத் தேடும் நேரம் !

 

பிரளயத்தின் பொருள் கேட்ட ஆசான் முன்னே

பொருளறியாது மருண்டு நின்ற மாணவனும்

பொருளான கட்டுரை அழகாக எழுதிடவே

இருளான பள்ளியில் அருளில்லாத சோகம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *