மார்கழி மணாளன் 2- (காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள்)
க. பாலசுப்பிரமணியன்
கையேந்தி வந்தவர் மெய் நிறையும்
கண்ணிறைந்து அவர் மனம் நிறையும்
கார்மேகம் நடு நில் கதிரவன்போல்
காஞ்சியிலே வரதனின் அருள்காட்சி !
வருந்துயரும் வாராது சென்றுவிடும்
வரதனின் அருட்பார்வை வென்றுவிடும் !
பெருந்துயரும் பனிபோல நலிந்துவிடும்
பெருந்தேவி துணைகண்ட பெருமானே! !
அபயக்கரம் தரும் அருள் வெள்ளம்
அதைப் பெருக்கும் சங்கு சக்கரம் !
ஒளிவெள்ளம் அவன் திருமேனி
விழிவண்ணம் வற்றாத அருள்கேணி !
பல்லிக்கும் அருள்தந்த பரந்தாமன்
அள்ளிக்கொடுக்கும் திருமங்கை மார்பன் !
பன்னிரு ஆழ்வார் போற்றிய நாதன்
பாரெல்லாம் காத்திடும் பேராளன் !
அத்தியூரான் அவன் முக்தி தருவான்
அலங்காரப் பிரியனவன் ஆனந்தன் !
அலைபாயும் மனமடங்கக் கீதை சொல்வான் !
அச்சமின்றி வாழ்ந்திடவே அருள் புரிவான் !
குறையொன்றும் எனக்கில்லை நீயிருக்க
குரலெடுத்துப் பாடுங்கள் கோவிந்தனை !
குறையின்றிக் கொடுக்கின்ற வள்ளலவன்
குழந்தைபோல் நம்மைக் காத்திடுவான் !