க. பாலசுப்பிரமணியன்

bbd9c22f-1754-49df-9593-6c5846aa0993

அரிபாதி நரன்பாதி சரிபாதி உருவாகி

அருள்மாரி பொழிகின்ற அவதாரச் சிறப்பே!

கல்பாதி மண்பாதி தூண்பாதி உடைய

உள்பாதி வெளிபாதி அமர்ந்த  திருவே  !

 

அகம்நாடி இகம்நாடி அருள்நாடா மதிமூடன்

விதிமுடிக்க இடம்நாடி வந்த அருள்வடிவே !

அரியன்றி வேறில்லையெனக் குறியுணர்ந்து

கதிகேட்ட கோமகனை வாழ்வித்த கோவிந்தா  !

 

விண்பாட மண்பாட வேதங்கள் புகழ்பாட

பண்பாட சொல்லில்லா பாவலர் தடுமாற

சொல்லுக்குள் சுவையாய் சுவைக்குள் சொல்லாய்

கல்லுக்குள் கரும்பாய்  காட்சி தந்தாய் !

 

கனலான கண்களிலே கருணைபொழிய

கமலத்தில் அமர்ந்தாளும் வேண்டிடவே

கனிவுடனே கால்தொடையில் அமர்த்தி

களிப்புடனே காட்சி தந்த யோகேஸ்வரா !

 

தீயோர்கள் மடிந்திடுவர் தீமைகள் விலகிவிடும்

தீராத பிணியெல்லாம் தீர்த்தமொன்றே நீக்கிவிடும்

தீண்டிய பயமெல்லாம் தீதின்றி மறைந்துவிடும்

திருநாமம் சொல்லியுன் திருப்பதமே நாடிட்டால் !

 

கடிகையிலே கண்திறக்கும் திருகடிகைவாசா !

சோதனைகள் நீக்கிவிடும் சோழலிங்கநாதா !

அருளுக்கு அழகுதரும் அன்பே,அழகியசிங்கா !

ஆட்கொள்ள வந்திடுவாய் ஆழிவாழ் அமரேசா !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *