மார்கழி மணாளன் 7 திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள்
க. பாலசுப்பிரமணியன்
திருநீர்மலையில் திருமால் நான்கு வகையாக தரிசனம் தருகின்றார்.- அரங்கனாக (கிடத்தல்) நீர்வண்ணனாக (நிற்றல்) திருவிக்ரமனாக (நடத்தல்) யோகநரசிம்மராக (அமர்தல்) . இதை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட பாடல்
நீருண்ட மேகங்கள் சற்றே வான் நிற்கும்
நீர்வண்ணா! உன்னழகு பார்த்திருக்கும் !
வான்மேகத்தில் வளைந்த வில்லைப்போல்
பால்வண்ணா! பரம்பொருளே ! நின்னழகு.!
நின்றான் நீர்வண்ணன் நிலம் மீதில்
நிலையாகும் கண்கள் சிலை மீதில்
மலையான துயரங்களும் நீக்கிடுவான்
மலையாளும் மாலனே நீர்மலையில் !
அலைபாய் பாற்கடலின் நல்லமுதே
கிடந்தாய் பாம்பணை மேல் சாய்ந்து !
மலைத்தார் விண்ணவரும் அறிந்தார்
கிடந்தான் இடந்தான் என்றும் வைகுந்தமே !
இருப்பான் இவன் எங்கே எனக் கேட்டான்
இறுமாப்பில் தன் நிலைதான் மறந்தான்
இருப்பேன் இங்கும் அங்கும் எங்குமென
இருந்தாய் அமர்ந்தாய் இறையாய் நரசிம்மா !
மூவுலகும் அளந்த மூத்தவனே மாதவனே !
மூன்றடியில் முடிமன்னன் காத்தவனே !
கிடந்தாலும் நடந்தாலும் நீயே அளப்பாய் !
கடைக்கண்ணால் காவியம் பல படைப்பாய் !
நின்றாலும் அமர்ந்தாலும் நடந்தாலும்
நீர்மலையில் நீ அழகாகக் கிடந்தாலும்
நான் வாழ நிழலேன்றும் நீ எனக்கு !
நீலவண்ணா ! நின் நினைப்பே காப்பு !