மார்கழி மணாளன் 8 ஒப்பிலியப்பன் கோயில்( (திருநாகேச்வரம்) திரு விண்ணகரப்பன்
க. பாலசுப்பிரமணியன்
தரணியில் தன்னொப்பாரில்லா அப்பனே !
துளசியின் தவத்தால் வந்த திருவுள்ளமே
திருவேங்கடத்தான் உருக்கொண்ட திருமாலே !
திருவிண்ணகரம் கண்டதிருநிறைவே! திருவருளே !
மனம்கனிந்து மார்கண்டேயனக்கு மகள் தந்தாய்
மனமுவந்து இளம்பெண்ணை மணம் முடித்தாய் !
உளமுவந்து உப்பில்லாப்பண்டம் உண்டாய் !
உப்பிலியப்பா !! உன்பாதம் நித்தியத் திருக்காப்பு !!
ஓங்கி உலகளந்த உத்தமனே! தத்துவமே !
உருமாறி வாழ்ந்திருந்த பறவையையும்
ஓரிரவில் திருக்குளத்தில் உய்வித்தாயே !
உள்ளத்தின் இருளில் ஒளியாய் வந்திடுவாயே !
திருக்கண்கள் மறைத்து நீ நின்றாலும்
திருக்கண்ணா ! உன் பார்வை என் மீது !
திருக்கண்ணமுதின் சுவையாக நீயிருக்க
திருவிண்ணகரத்தானே ! திருத்தாள் காப்பு!
ஆயிரம் பெயர்கள் போற்றிட உனக்குண்டு
அன்புடனே ஒருபெயர் சொல்லி அழைக்கின்றேன் !
ஆதிமூலத்திற்கு அருள்செய்த வேங்கடவா !
ஆனையென எனைநினைத்து அருள்வாயே !
ஊஞ்சலில் உனைவைத்து உப்பிலியப்பா, !
கொஞ்சிடவே மனம் நித்தம் வேண்டுதப்பா !
சொல்லூஞ்சலில் உனைவைத்து ஆட்டுகின்றேன்
சுகமாக என் நெஞ்சில் நீ அமர்ந்திடுவாய் !
உப்பில்லா உணவும் ஓர் சுவைதான்
உப்பிலியப்பா ! உன் அருட்சுவைதான் !
மூப்புற்று முழங்கால்கள் மடியும்முன்
முப்போதும் உனைக்காண வரம் தருவாய் !