கருணைக்காவல்
சந்தர் சுப்பிரமணியன்
குறுகலான சாலை.
‘அதன்மேல் யாரேனும் காலை வைத்து விடுவார்களா?’
கவலை என்னைப் பிடுங்கித்தின்ன ஆரம்பித்தது.
கதவைத் திறந்துவைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
விர்ரென்று ஸைரனுடன் விரையும் ஆம்புலன்ஸ்,
கொக்கிக்கொக்கி அரைப்பெடல் அடித்தவாறு சைக்கிளில் வரும் பேப்பர்பையன்,
தெருவையே அதிரவைத்தபடி வரும் பால்காரனின் மின்வண்டி,
எதையோ துரத்தியபடி ஓடும் தெருநாய்களின் கும்பல்,
பழைய பேப்பர் வாங்குபவனின் மூன்று சக்கர வண்டி,
குப்பை எடுத்துச்செல்லும் லாரி,
– கண்கொட்டாமல் நானும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
வீட்டுக்கு உள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது:
‘ஏன்டி, கோலம் போட்டுட்டு வர இவ்வளவு நேரமா?’