பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

 

பழமொழி: எல்லாம் பொய் அட்டூணே வாய்

 

சேர்ந்தா ரொருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் – தேர்ந்தவர்க்குச்
செல்லாமை காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
எல்லாம்பொய் அட்டூணே வாய்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 

பதம் பிரித்து:
சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப்பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்து அவர்க்குச்
செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?-
எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய்.

பொருள் விளக்கம்:
தன் சுற்றத்தார் ஒருவரை; உதவிநாடி தன்னிடம் வந்தவரை விருந்தோம்பும் ஒருவர், வந்தவர் தன்னுடன் தொடர்பில் இருப்பவரல்ல என்று தெளிவாகத் தெரிந்தாலும், அந்த உறவினர் வறுமையில் இருந்து மீள முடியாதிருப்பதை ஆராய்ந்து அதை நீக்கும் முறையை அறிந்திராவிடில், அவருக்கு வேறு என்னதான் வழி இருக்கிறது? (பசி நீக்கும் உணவளித்துக் காப்பதைத் தவிர பிற உதவிகள்) எல்லாமே பொய்; சமைத்து உணவளித்து உதவுவதே மெய்யான உதவி.

பழமொழி சொல்லும் பாடம்: அறங்களுள் சிறந்த அறமாகக் கருதப்படுவது வறியவரின் பசி நீங்க உணவளிப்பது மட்டுமே. பசி தீர்க்கும் அறத்தின் சிறப்பை வள்ளுவர்,

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள்: 226)

வறுமையில் உழல்பவரின் பசியைத் தீர்த்திடுக. அந்த அறம் ஒன்றே பொருள் பெற்றோர் தனது செல்வத்தை தம் பிற்கால நலனுக்காகச் சேமித்து வைக்கும் கருவூலம் என்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *